சனி, 16 ஜூலை, 2016

படைப்பாற்றலை பெருக்குவாள் பிராம்ஹி!


சரஸ்வதியின் அம்சமாக ப்ராம்ஹி எனும் திருப்பெயரில் அருள்புரியும் அம்பிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பிராம்ஹி பிரம்ம தேவனின் முதல் எழுத்தாகிய ‘ப்ராம்’ என்பதே இவளின் பீஜாட்சரமாகத் துலங்குகிறது. மது, கைடப வதத்திற்குப் பின் பிரம்ம தேவனுக்கு உலகை உருவாக்கும்படி பராசக்தி கட்டளையிட, பிரம்மா தன் பணியைத் திறம்பட புரிய துணையாக அவருக்கு அவளருளால் தரப்பட்ட சரஸ்வதி தேவியே ப்ராம்ஹி எனப் போற்றப்படுகிறாள்.

ஓர் சமயம் நான்முகன் தம் நாயகியரான காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி போன்ற தம் சக்திகளுடன் காசிக்கு வந்தார். அங்கு ‘பிதாமகேஸ்வரம்’ எனும் லிங்கத்தை நிறுவி வழிபட்டார். உலக நலனுக்காக பத்து அஸ்வமேதயாகங்களை அங்கே செய்து முடித்தார் படைப்புக் கடவுள்.

யாகங்கள் முடிந்ததும் ‘அவப்ருத எனும் ஸ்நானம் செய்ய வேண்டி கங்கையை நோக்கி காயத்ரி, சாவித்ரி போன்ற இரு தேவியருடன் சென்றார் பிரம்மா. யாக சாலையில் கந்தர்வர்களின் இனிய இசையில் சங்கீதத்திற்கு தேவதையான சரஸ்வதியே ஆழ்ந்திருந்தாள். ஆகையால், பிரம்மன் நீராடச் சென்றதை அவள் அறியவில்லை. சரஸ்வதிக்காக கங்கையின் கரையில் காத்திருந்த நான்முகன் நேரம் கடந்துவிட்டதால் மற்ற இருவருடன் அவப்ருத ஸ்நானம் செய்து முடித்தார்.

காலம் கடந்து கங்கையை அடைந்த கலைவாணி ‘‘தாங்கள் என்னை விட்டு எப்படி நீராடலாம்?’’ என வெகுண்டாள். அதனால் கோபம் கொண்ட பிரம்மா, ‘‘தேவி! நீ சரியான நேரத்தில் வராதது மட்டுமன்றி என்னிடமும் கோபம் கொண்டாய். எனவே, நீ பூமியில் நாற்பத்தெட்டு முறை பிறவி எடுத்து பின் எம்மை அடைவாய்,’’ என சாபமிட்டார்.

அதற்கு சரஸ்வதி, ‘‘நான்முகனே! நாற்பத்தெட்டு முறை நான் பூமியில் பிறவாமல் என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்,’’ என வரம் கேட்டாள். ‘‘பூவுலகில் உனது உருவாய்த் திகழும் 48 அட்சரங்களும் 48 தமிழ்ப் புலவர்களாய்ப் பிறந்து ஒரே சமயத்தில் வாழ்வர். அவர்களுக்கு ‘ஹ’காரத்தின் உருவமாய் பரமனே அந்தத் தமிழ்ப் புலவர்களுக்குத் தலைவனாய் இருந்து அவர்களைப் போற்றுவார்,’’ எனக் கூறினார் பிரம்மன். அவர்களே கீரன், கபிலர், பரணர் முதலான முதற்சங்க தமிழ்ப்புலவர்களானர். சுந்தரேசப் பெருமானே அவர்களுக்குத் தலைவனாய், கவிநாயகனாய் அவர்கள் தலைவனாய் உதித்து தாமிரபரணிக் கரையோரம் வாழ்ந்த அவர்களை மதுரையம்பதிக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் பொறுப்பில் அவர்களை விட்டுச் சென்றார்.

இந்த சரஸ்வதி தேவியின் அம்சமான 48 மாத்ருகா அட்சரங்களே 48 சங்கப் புலவர்களாகத் திகழ்ந்தனர். பொருட்சுவையும், சொற்சுவையும் நிறைந்த இனிமையான பற்பல பாடல்களை இயற்றி, சொல்லும் பொருளுமாய், மலரும் மணமுமாய் உள்ள மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை போன்றவற்றைச் செய்து பாரினில் தமிழ் மணம் பரப்பியதை திருவிளையாடற் புராணம் பேசுகிறது.

இத்தேவி சொல்லின் உருவமானவள். வாக்தேவதை, வர்ணமாத்ருகா, வாக்வாதினி, சரஸ்வதி என மந்திர சாஸ்திரங்களால் வர்ணிக்கப்படுபவள். அ முதல் ஃ வரையிலுள்ள உயிர் எழுத்து களை முகமாகவும், கண், காது, மூக்கு போன்றனவாகவும் விளங்குகின்றன. வடமொழியின் கவர்கம், சவர்கம் போன்ற பத்து எழுத்துகள் தேவியின் கரங்களாகவும், ட-வர்கமும் த- வர்கமும் ஆகிய பத்து எழுத்துகள் ப-வர்க்கம் வயிறாகவும், ய-விலிருந்து ஹ வரை எட்டு எழுத்துகளும் தோல், ரத்தம், சதை, எலும்பு, மஞ்ஜை, சுக்லம் போன்ற தாதுகளாகவும் இவளின் திவ்ய தேகத்தில் அமைந்துள்ளன.

சங்கீதமும் ஸாகித்யமும் இரு ஸ்தானங்களாகத் திகழ்கின்றன. தன் ஆறு கரங்களிலும் வரதம், அக்கமாலை, தண்டம், கமண்டலம், சருவம், அபயம் போன்றவற்றைத் தரித்தவள். பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் அன்னத்தை வாகனமாய்க் கொண்டதை நம் வேண்டாத குணங்களையும் பிரித்துக் காப்பதை உணர்த்துவதுபோல் உள்ளது.

மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் கலந்த நிறத்தை உடையவள். மான் தோலை ஆடையாகத் தரித்தவள். இவள் பாலை எனும் குழந்தை வடிவமும் கொண்டவள் என துர்க்கா பூஜா கல்பம் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது. இத்தேவி அதிகாலையில் துதிக்கப்படும் சந்தியா தேவதையாகவும், பிரம்ம சக்தி எனும் கிராம தேவதையாகவும் வேள்விகளைக் காக்கும் யாக தேவதையாகவும், அஷ்ட பைரவர்களில் முதல்வனான அஸிதாங்க பைரவரின் தேவியாகவும் பல நிலைகளில் இருந்து பக்தர்களுக்கு திருவருட்பாலிக்கிறாள்.

‘ப்ராம்ஹணீ பஞ்ஜிகா ஸ்ப்ருகா த்விஜபரி நீஷுவிச் ருதா’ என்ற விச்வ கோச வசனப்படி ப்ராம்ஹணீ எனும் பதமானது ஞான விசேஷத்தைக் குறிக்கும். வெள்ளைத் தாமரையில் ஞான வடிவாக விளங்குவதை ஸமயாசார ஸ்ம்ருதி எனும் நூல் ‘ப்ராஹ்மணீ ச்வேத புஷ்பாட்யா ஸம்வித்ஸா தேவாத்மிகா’ என்று போற்றுகின்றது. இவள் ப்ரம்மானந்தத்தை உடையவள் என்பதால் ப்ரஹ்மானந்தா என்றும் இவளைப் போற்றுவர்.

இவளே கலாதேவி. சகல கல்வி கேள்விகளில் சிறந்தவராக இவள் கடைக்கண் பார்வை கட்டாயம் தேவை. இந்த தேவியின் வாகனமான அன்னமும் சத்வ குணத்திற்குப் பெயர் பெற்ற பறவையாகும்.
இந்த அன்னையை தியானித்து வழிபட்டால் கற்ற கலைகள் மறந்து போகாமல் மனதினில் நிலைத்திருக்கும்.

போர்க்கோலம் கொள்ளும்போது ஆயுதங்களோடும், ஞானத்தை அளிக்கும்போது வாக்தேவியாக, வீணா புஸ்தக தாரிணியாக, சரஸ்வதியாக அருள்பவளும் இவளே. தோலிற்குத் தலைவியான இவள் கோபம் கொண்டால் சொறி நோய் ஏற்படும். வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை சாந்தமடைந்து நம்மை ஆசீர்வதிப்பாள். தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.

ப்ராம்ஹி த்யான ஸ்லோகங்கள்

அக்ஷஸ்ரக் சுபகுண்டி கேச தததீம் ஹஸ்தைர் வரம் சாபயம்
தேவீ ஸௌம்ய முகோத்பவாம் ஸ்மித முகீம்
ஹம்ஸேஸ்திதாம் வாஹனே ப்ரம்மாணீம்ஜகதாம் சுபம்
விதததீம் ஆத்யாமஹம் மாதரம்வந்தே ஸ்வர்ணஸமான
காந்திருதிராம் சக்திம் ப்ராம் ப்ராஹ்மணீ:

தண்டம் கமண்டலூம் கச்சாத் அக்ஷஸூத்ரமதாபயம்
பிப்ரதி ககச்யா ப்ராஹ்மீ க்ருஷ்ணாஜினோஜ்வலா.
சதுர்புஜாம் சதுர்வக்த்ராம் பீதமால்யாம் பரோஜ்வலாம்
வரதாபய ஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம் ஸகண்டிகாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்ஹம்ஸவாகனஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ப்ராஹ்மீம் த்யாத்வார பூஜயேத்.

நான்கு முகங்களையும், நான்கு கைகளையும் உடையவளும், மஞ்சள் நிறமான ஆடை, மாலை இவைகளால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், வரதம், அபயம் எனும் முத்திரைகளைக் கையில் பெற்றிருப்பவளும் (ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவளும், அன்னவாகனத்தில் பவனிவருபவளும் எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமான பிராஹ்மி தேவியை தியானிக்கிறேன்.

ப்ராஹ்மி காயத்ரி

ஓம் ஹம்ஸத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்:

அன்னத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை உடையவளும், தர்ப்பைப் புற்களால் ஆன கூர்ச்சத்தை ஏந்திய கரங்கள் கொண்டவளுமான ப்ராஹ்மி எனும் தேவியை த்யானம் செய்கிறேன். அவள் என் முன்வந்து என் அறிவை மேம்படுத்தி ப்ரகாசிக்கச் செய்வாளாக.

மந்த்ரம்

ஓம் ப்ராம் ப்ராஹ்ம்யை நமஹ.

தேவி மஹாமித்யத்தில் ப்ராஹ்மி!

ஹம்ஸயுக்த விமானஸ்தே பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரிசாம்ப க்ஷூரிகே தேவி நாராயணி நமோஸ்துதே.

ப்ராஹ்மி வடிவம் எடுத்து ஹம்ஸங்கள் பூட்டிய விமானத்தில் வீற்றிருந்து தர்பைப்புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு நமஸ்காரம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக