திங்கள், 27 பிப்ரவரி, 2017

நல்லன எல்லாம் அருளும் நாச்சியார் கோவில்!



ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கு வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.

கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. இதை திருமங்கையாழ்வார் பாடிய, ‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோவில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ என்ற பாடல் மூலம் அறியலாம். கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.

நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.

தல வரலாறு :

சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.

‘முனிவரே! இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

வகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.

பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது.

கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.

ஆண்டுதோறும் மார்கழி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நான்காம் நாள் பெருமாள், கருடன் மேல் வீதி உலா வருவார். இந்த விழாவின் போது ஒரு அதிசயம் நடக்கிறது. அதாவது கல்கருட உற்சவரை சன்னிதியில் இருந்து தூக்கும்போது நான்கு பேர்தான் தூக்குவார்கள். வீதி உலா நடைபெறும் போது, 4 என்பது 8, 16, 32, 64 மற்றும் 128 என்று தூக்குவோரின் எண்ணிக்கை உயரும். வீதி உலா முடிந்து கோவிலுக்குள் வந்து, உற்சவரை சன்னிதியில் வைக்கும் போது தொடக்கத்தில் இருந்த நான்கு பேரே கொண்டு வந்து வைப்பார்கள்.

இந்த வைபவத்திற்கு தலவரலாறு ரீதியாக ஒரு விளக்கமும் அளிக்கிறார்கள். அதாவது, பெருமாள் மேதாவி மகரிஷிக்கு ஒரு வரம் அளித்தார். அனைத்திலும் தாயார் நாச்சியாரே முதலிடம் பெறுவார் என்பதே அந்த வரம். தாயார் இந்த சன்னிதியில் அன்ன வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், அதே சமயம் வேகமாக செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதி உலா செல்லும் போது நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் பறக்க முடியாத நிலையில் பின் தங்கிச் செல்வதாக ஐதீகம்.

இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார். 

இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது. அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந் திருக்கும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. 


சக்கரபாணி கோவில் - கும்பகோணம்!

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.

படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.

ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.



உத்திர கோச மங்கை மங்கள நாயகி!


உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும். ‘திரு’ என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். ‘உத்திரம்’ என்பதற்கு ரகசியம் என்றும், ‘கோசம்’ என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். அம்பாளுக்கு ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் அடங்கிய ஆயிரவருக்கும், பிரணவப் பொருளை இங்கு இறைவன் உபதேசித்து உள்ளார்.

இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. 


ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.

அதே போல ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் முடிந்த பின்னர், புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தனர். அப்போது ராவணனின் வழிகாட்டு தலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கும், முன்னரே தோன்றிய ஆலயம் இது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம்.

மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் ‘மங்களநாதர்’ ஆனார்.

மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தாள். பரிவு கொண்ட சிவபெருமான், அவளுக்கு புத்திரப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கைக்கு எழுந்தருள எண்ணினார். அதற்கு முன்பாக தன் அடியார்கள் ஆயிரவர்களிடம், ‘எனது திரு மேனியை ராவணன் தீண்டும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் எழுந்தருளிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு குழந்தையாக உருவெடுத்து வரமளித்தார்.

அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைப் பார்த்து, அதனை தன் கைகளால் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தான். ராவணன் தீண்டியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக் குளத்தில் அக்னி வளர்ந்தது. பிரணவப் பொருளை உபதேசம் பெற்ற ஆயிரவரும் அந்த அக்னியில் இறங்கி கயிலாயம் சென்றனர். ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து அருள்பாலித்தார். இந்த ஆயிரவரும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனோடு கலந்து விட்டனர். அதனை இங்குள்ள சகஸ்ர லிங்கத்தில் காணலாம். திருக்கோவில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் கோவில் கொண்டுள்ள மாணிக்கவாசகர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது. 

பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.

அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. 


ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.


 இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.



அம்பிகையின் சக்தி பீடங்கள்!

அம்பிகையின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஸ்தலங்கள்!


1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உத்திர பிரதேசம் 5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம் 6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு


11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா

31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உத்திர பிரதேசம்51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்





உஜ்ஜைன் மகா காளி ஆலயம் (கடகாலிகா )!

காளிதாசன் அருள் பெற்ற - உஜ்ஜைன் மகா காளி ஆலயம் (கடகாலிகா ) அதிசய தகவல்கள்!

 
உஜ்ஜைன்/அவந்திகா என்று சொல்லப்படும் இந்த நகரம் பூலோகத்தின் நாபிதேசம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மஹாராஜா விக்கிரமாதித்தியன் அரசாட்சி காலத்தில் உஜ்ஜைன் பாரதத்தின் தலைநகரமாக இருந்தது. பாரதீய ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் தேசாந்தரத்தின் சூன்யரேகா உஜ்ஜைனி லிருந்து தான் ஆரம்பிக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட விஷயம். முக்தி தரும் ஏழு புரிகளில் இது ஒன்றாகும்.

உஜ்ஜைன் மிக வைபவம் பொருந்திய நகரமாக விளங்கியது. துவாபர யகத்தில் கிருஷ்ணனும், பலராமனும் ஸாந்தீபநி ஆசிரமத்தில், சாந்தீபநி முனிவரிடம் அத்யயனம் செய்து (கல்வி பயின்று) வந்தனர். இக்காலத்தில் இது மிக முக்கிய சிவஸ்தலமாக உள்ளது.


12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றான மஹாகால லிங்கம் இங்கு தரிசனம் அளிக்கிறார். 51 சக்தி பீடங்களில் இது ஒன்றாகும். சதியினுடைய முழங்கை முழங்கால் இங்கு விழுந்ததாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது. ருத்ரஸாகர் ஸரோவர் பக்கத்தில் ஹரஸித்தி தேவி கோயிலில் சக்தி பீடம் இருக்கிறது. இங்கு மூர்த்திக்குப் பதிலாக முழங்கைக்குப் பூஜை நடை பெறுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு சிம்மராசியில் மேலும் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிற சமயம் இங்கு கும்பமேளா (ஸிம்ஹஸ்த மகாகும்பம்) நடைபெறுகிறது. ஆறு ஆண்டு களுக்குப்பின் அர்த்த கும்ப மேளா நடைபெறுகிறது.

இது கிருஷ்ண பகவானின் பாத தூளிகள் படிந்த புனிதமான இடம். புராதன காலத்தில் முனிவர்களின் தபோ பூமியாக இருந்தது.

1. மகாகால மந்திர், 2. ஹரஸித்தி தேவி, 3. படே கணேஷ், 4. கோபால மந்திர், 5. கட காலிகா, 6. பர்த்ருஹரி குகை, 7. கால பைரவர், 8. ஸாந்தீபநி ஆச்ரமம் (அங்கபாத்), 9. ஸித்தவட், 10. மங்களநாத், 11. வேதசாலா (வான மண்டல பரிசோதனை சாலை), 12. க்ஷிப்ரா நதி. 


ப்ராநதீ: உஜ்ஜைன் நகரத்தில் ஓடும்  ப்ராநதி மிகவும் புனிதமானதாகும். விஷ்ணு பகவானின் இருதயத்திலிருந்து க்ஷிப்ரா நதி உண்டானது என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பெயர் மீன கங்கா. உஜ்ஜைன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

1. நரஸிம்ஹ காட், 2. ராம காட், 3. பிசாச மோசன் தீர்த்தம்,  4. சத்ரீ காட், 5. வாமன தீர்த்தம், 6. கந்தர்வ தீர்த்தம் ஆகியவை பிரசித்தமான படித்துறைகள். ஒவ்வொரு படித்துறையிலும் கோயில்கள் உள்ளன. கங்கா தசஹரா, கார்த்திக் பூர்ணிமா, வைகாசி பூர்ணிமா பருவங்களில் இங்கு மேளா நடைபெறுகிறது.

குரு சிம்மராசியில் சஞ்சரிக்கும் சமயம் ப்ராநதியில் ஸ்நானம் செய்வது, மகத்துவம் பொருந்தியது. ‡ப்ரா நதி கந்தர்வ தீர்த்தத்தின் அப்பாலுள்ள பாலத்தின் வழியாக அக்கரை சென்றால் அங்கு தத்தவின் அகாடா, கேதாரேச்வரர், மேலும் ரணஜீத் ஹநுமான் கோயில் இருக்கின்றன. அங்கு உள்ள மயானத்திற்கு அப்பால் வீர துர்கா தாஸ் ராடௌரின் “சத்ரீ” மேடை உள்ளது. இன்னும் தள்ளி ருணமுக்த மகாதேவர் கோயில் உள்ளது.

மஹாகால மந்திர் : உஜ்ஜைன் (புண்ய) தீர்த்த க்ஷேத்திரத்தில் - பிரதானமான மேலும் விசாலமான மகா கால மந்திர், ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயில் வளாகம், பூமி மட்டத்திலிருந்து கொஞ்சம் கீழே உள்ளது. வளாகத்தின் மத்தியில் உள்ள இந்தக் கோயிலில் இரண்டு  பகுதிகள் உள்ளன. பூமி மட்டத்தில் உள்ள பகுதியில் கோயிலின் மேல்பாகம் உள்ளது. இங்கு சங்கரின் லிங்கமூர்த்தி ஓங்காரேச்வரர் கோயில் கொண்டுள்ளார். இதற்கு நேர் கீழே உள்ள பகுதியில் (கோயில்) மகாகால லிங்கமூர்த்தி தரிசனம் அளிக்கிறார்.

விசாலமான மஹாகாளேச்வரரின் (லிங்கமூர்த்தி) “ஜலஹரி” அதாவது சிவலிங்கத்திற்கு மேலே தொங்கவிடப்பட்டிருக்கும், ஜலம் நிரம்பிய, அடிபாகத்தில் துளை உள்ள, குடத்தின் மேல் பாகத்தில் நாகப் பிரதிமை அதை வளைத்துச் சுற்றியுள்ளதைக் காணலாம். ஒரு பக்கம் கணேசரும், மற்றொரு பக்கத்தில் பார்வதியும், மூன்றாவது பக்கத்தில் கார்த்திகேயரையும் காணலாம். ஸந்நிதியில் ஒரு நெய் தீபம், மேலும் ஒரு எண்ணெய் தீபம் (அகண்ட தீபம்) விடாமல் ஜ்வலித்துக் கொண்டு இருக்கும்.

கோயிலின் மேல்பகுதி சுற்றுக்கட்டு வெளிப்பக்கத்தில் (முற்றம்) பல சன்னிதிகள் உள்ளன. அதில் அனாதிகாளேச்வர், மேலும் விருத்த காளேச்வர் ஸந்நிதிகள் விசாலமானவை. மஹா கால கோவில்/சன்னிதிக்குப் பக்கத்தில்-கீழே சபா மண்டபமும், அதற்குக் கீழே கோடி தீர்த்த ஸரோவரும் உள்ளது.

மஹாகாளேச்வர் சபா மண்டபத்தில் ஸ்ரீராமர் கோயிலும், ராமருக்குப் பின்னால் அவந்திகாபுரியின் அதிஷ்டாத்ரி தேவி -அவந்திகா தேவி காட்சியளிக்கிறாள்.

படே (பெரிய) கணேசர் : மஹாகால மந்திர் பக்கத்தில் பெரிய கணேசர் கோயிலும், அதன் அருகில் பஞ்சமுக ஹனுமார் கோயிலும் உள்ளன. இந்தக் கோவிலில் பல தேவமூர்த்திகளை சேவிக்கலாம்.

ஹரஸித்தி தேவி : ருத்ர ஸரோவருக்குப் பக்கத்தில் மதில் சுவர்களால் சூழப்பட்டுள்ள ஹரஸித்தி தேவியின் சிறந்த கோயில்= அவந்தியின் சக்தி பீடம் உள்ளது. மஹாராஜா விக்கிரமாதித்திய னால் - ஆராதிக்கப்பட்ட பவானி தேவி-குலதெய்வம் இங்கு தரிசனம் அளிக்கிறாள். ஹரஸித்தி தேவியின் ஒரு கோயில் ஸௌராஷ்ட்ராவில் மூல துவாரகாவிற்கு அப்பால் சமுத்திரத்தின் வளைகுடாவின் ஒரு குன்றில் இருக்கிறது. மஹாராஜா விக்கிரமாதித்தியன் அங்கு தேவியை பக்தியுடன் ஆராதித்து-தனது பக்திமூலம் தேவியைத் திருப்தி செய்து அவந்திக்கு எழுந்தருளச் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. மேற்படி இரண்டு இடத்திலும் மூர்த்திகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. கோயிலில் தேவியின் மூர்த்தியின் முக்கிய பீடத்தில் “ஸ்ரீயந்திரம்” தான் உள்ளது. அதற்குப் பின்புறம் அன்னபூர்ணாவைக் காணலாம். இன்றும் மூல துவாரகாவின் கோயிலிலும் அந்தத் தேவியின் ஒரு அம்சம் உள்ளது. கிழக்கு வாசலை ஒட்டி ஸப்தசாகர் ஸரோவர் உள்ளது. ஹரஸித்தி தேவி கோவிலின் பின்புறம் அகஸ்தியேச்வர் ஸ்தானம் உள்ளது.

24. கம்பங்கள் : மஹாகால் கோயிலிலிருந்து கடைவீதிக்குச் செல்லும் வழியில் 24 கம்பங்கள் உள்ளன. முன்பு புராதனமான நுழைவாயில் இருந்த இடம். இது பத்திரகாளியின் ஸ்தானம்.

கோபால மந்திர் : நகரத்தின் கடை வீதியில் கோபால மந்திரில் ராதாகிருஷ்ணன் மேலும் சங்கர் மூர்த்திகளைச் சேவிக்கலாம்.

அங்கபாதம் (ஸாந்தீபநி ஆச்ரமம்) கோபால மந்திரிலிருந்து மங்களேச்வர் செல்லும் மார்க்கத்தில், 3 கி.மீ தூரத்தில் ஸாந்தீபநி ஆசிரமம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணன், பலராமன், சுதாமா ஆகியோர் இங்கு ஸாந்தீபநி முனிவரிடம் குருகுலவாசம் செய்து அத்யயனம் செய்தனர், கல்வி பயின்றனர். இங்கு கோமதி ஸரோவர், மேலும் ஒரு நந்தவனம் உள்ளது. மஹரிஷி ஸாந்தீபநி, அவரின் குமாரன், கிருஷ்ணன், பலராமன், மேலும் சுதாமாவின் மூர்த்திகள் உள்ளன. இங்கு ஸ்ரீவல்லபாசார்யரின் பீடம் இருக்கிறது. அருகில் விஷ்ணு ஸாகர், புருஷோத்தம ஸாகர், சித்ர குப்தனின் இடம் பார்க்கலாம். அங்கபாதத்திலிருத்து மேற்கே உள்ள ஜனார்தன் மந்திர் செல்லலாம்.

கடகாலிகா : கடகாலிகா கோயிலுக்குக் கோபால் மந்திர் வழியாக (சுமார் 2 கி.மீ.) செல்ல வேண்டும். கவி காளிதாசர் கடகாலிகா தேவியை பூஜை செய்துதான், காளி தேவியின் அனுக்கிரகத்தால் மஹாகவியாக விளங்கினார். பக்கத்தில் உள்ள ஹநுமான் கோயிலுக்கும், கணேசர் கோவிலுக்கும் செல்லலாம். அங்கு அழகான விஷ்ணு பகவானை சேவிக்கலாம். பக்கத்தில் ‡ப்ரா நதியின் படித்துறையில் ஸதிகளின் நினைவுச் சின்னம் பார்க்கலாம்.



பர்த்ருஹரி குகை : காலிகா மந்திரின் வடதிசையில் அரை கி.மீ. தூரத்தில் பர்த்ருஹரி குகையும்-சமாதியும் உள்ளது.


காலபைரவ் : நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் ‡ப்ரா நதிக் கரையில் ஒரு குன்றின் மேல் காலபைரவ் கோயில் காணலாம்.

ஸித்தவட் : கால பைரவ் கோயிலுக்குக் கிழக்கே ஸிப்ரா நதியின் அக்கரையில் ஸித்தவடத்தில் உள்ள ஆல விருக்ஷத்தின் கீழே நாகபலி, நாராயண பலி முதலியவை அளிப்பது மகிமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

மங்களநாத் : அங்கபாதத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு குன்றில் மங்களநாத் கோயில் உள்ளது. பூமி புத்திரன் மங்கள க்ரஹம் இங்கு உண்டானதாகச் சொல்லப்படுகிறது.

வேதசாலா : வான மண்டல பரிசோதனைச் சாலை. வேத சாலையை இங்கு மக்கள் யந்த்ர மஹல்” என்று சொல்லுகிறார்கள். இது உஜ்ஜைன் தென்பாகத்தில் ப்ரா நதியில் தென்கரையில் இருக்கிறது. தற்சமயம் சிதிலமடைந்துள்ளது. இங்கு முன்பு ஆகாய மார்க்கத்தில் கிரஹ-நக்ஷத்திரங்களின் கதியை/சஞ்சாரத்தை அறிய சிறந்த இயந்திரங்கள் இருந்தன. தற்சமயத்திலும் சில இயந்திரங்கள் இருக்கின்றன.

அவந்தியில் பஞ்சகோ‚ (ஐந்து கோஸ்), யாத்திரை- பிரதக்ஷிணத்தில்-பிங்களேச்வர், காயா வரோஹ ணேச்வர், பில்வேச்வர், துர்தரேச்வர் மேலும் நீலகண்டேச்வர் கோவில்கள்  அடங்கியுள்ளன. இதைத் தவிர பக்தர்கள் பின்கண்ட யாத்திரைகள் (ப்ரதக்ஷிணம்) மேற்கொள்கின்றனர்.

1.    ப்ரா நதிக்கரையில் 28 தீர்த்த யாத்திரை.
2.    மகாகால் யாத்ரா : ருத்ர ஸாகரிலிருந்து ஆரம்பிக்கும் இந்த யாத்திரையில் 24 தேவதைகளைத் தரிசிக்கலாம்.

க்ஷேத்திர யாத்ரா : சங்கோத்தார் க்ஷேத்ரம் - அங்கபாத் க்ஷேத்திர யாத்திரையில்  4 தீர்த்தங்கள் அடங்கியுள்ளன.

நகர பிரதக்ஷிணம் : நகர்வலம் இந்த நகர வலத்தில் நகரத்தின் 5 முக்கிய அதிஷ்டாத்ரி தேவிகளைச் சேவிக்கலாம்.

1. பத்மாவதி, 2. ஸ்வர்ணச்ருங்கா, 3. அவந்திகா, 4. அமராவதி, 5. உஜ்ஜைநீ
நித்ய யாத்ரா : ப்ரா ஸ்நாநம் செய்த உடன், கோடேச்வர், மஹாகால், அவந்திகா தேவி, ஹரஸித்தி தேவீ மேலும் அகஸ்த் யேச்வரைத்  தரிசனம் செய்கிறார்கள்.

துவாதச யாத்ரா : துவாதச யாத்ராவில், பிசாச மோசன் தீர்த்தத்திலிருந்து ஆரம்பித்து 12 தேவ மூர்த்திகளை வணங்கு கிறார்கள்.

ஸப்த ஸாகர் யாத்ரா : ஸப்த ஸாகர் யாத்திரையில் 7 தீர்த்தங்கள் அடங்கும்.
அஷ்ட மஹாபைரவ்: எட்டு மஹா பைரவர்கள், ஏகாதச ருத்ரர்கள், மேலும் தேவீ ஸ்தான் (13).

இங்கு 13 தேவீ ஸ்தானங்கள் மஹிமையுடன் விளங்கு கின்றன. அவந்திகா க்ஷேத்திரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அனேக சிவலிங்கங்களில் 84 முக்கியமானவையாகும்.

விஷ்ணு பகவானின் மஹிமை. உஜ்ஜைன் நகரின் சரித்திரத் திலும், பூகோளத்திலும், கதைகளிலும் மேலும் தத்துவத்திலும் காணக் கிடைக்கிறது. ஸாந்தீபநி ஆச்ரமம், மேலும் கிருஷ்ண பகவானின் விவரம் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.

சமுத்திர மந்தன் சமயம் மோஹினீ ரூபத்தில் அமுதம் வினியோகிக்கும் ஸமயம் இங்குதான் ராகு/கேது தலையைத் துண்டித்ததாகவும், லக்ஷ்மீ தேவியுடன் பத்மா தேவி எழுந்தருளி யதால் இந்த இடம் பத்மாவதிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மஹாராஜ் இந்திரத்யும்னனுக்கு இங்குதான் விஷ்ணு பகவானின் அருள் கிடைத்தது. அதன்படி உள்ளுணர்வு தூண்டுதலால் ஆயிரக் கணக்கான மைல்கள் யாத்திரை செய்து நீலாஞ்சலில் (கிழக்கு சமுத்திரக் கரை) விஷ்ணு பகவானைத் தரிசித்தார். அவருடைய நியமனப்படி புரீயில் கோயில் கட்டி ஜகன்னாத பகவானை பிரதிஷ்டை செய்தார்.

பகவான் மஹாவிஷ்ணு இங்கு மிகுந்த வைபவத்துடன் விளங்குகிறார். பிரம்மாவும் சிவனும் இங்கு புனித சுவர்ண சிகரத்தின்கீழ் அமர்ந்து, அருள் பாலிக்கும் விஷ்ணு பகவானைத் தரிசிக்க வந்தனர். அது சமயம் மஹாவிஷ்ணு அவர்களின் விருப்பப்படி உஜ்ஜைன் நகரத்தின் வடதிசையில் பிரம்மாவையும், மகாதேவனைத் தெற்கேயும் எழுந்தருளச் செய்தார். அதனால் இந்த இடம் “கனக ச்ருங்கா” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த க்ஷேத்திரத்தில் விஷ்ணு தத்துவம், சிவ தத்துவம் இரண்டும் சமமாக வளர்வதைக் காண்கிறோம். வைகுண்ட சதுர்தசி தினம் (கார்த்திக் சுக்ல பக்ஷம்) மஹாகாளேச்வர், கோபால மந்திருக்குப் புறப்பாடு கண்டு அருளும் சமயம், அங்கு கிருஷ்ண பகவானுக்கு வில்வ பத்ரம் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்துடன் பஸ்ம-விபூதி பூஜை சமயம் கோபால பகவான் மஹா காளேச்வர் கோயிலுக்கு புறப்பாடு கண்டருளி அங்கு துளசி சமர்ப்பிக்கப்படுகிறது. உஜ்ஜைன் நகரத்தில், விஷ்ணு பகவானுக்கும், சிவனுக்கும் பேதம் பாராட்டுவ தில்லை. இந்த ஒற்றுமை, சமன்வயம் ஆதர்சமாக-சீரிய முன்மாதிரி யாக விளங்குகிறது.   பரஸ்பர வைபவங்கள்  அநேகம் உண்டு




மன மகிழ்வைத் தரும் ஆற்றுக்கால் பகவதி கோவில்!


பரசுராமரால் உருவாக்கப்பட்ட பகுதியே இன்றைய கேரளம் என்கிறது புராணத் தகவல்கள். இதன் காரணமாக கேரளத்தை இறைவனின் ஊர் என்று அழைக்கிறார்கள். கேரளத்தை உருவாக்கிய போது, பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணக் கதை கூறுகிறது. கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள்.

இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது. 

சிறுமியாக வந்த அம்மன் :

கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலம் கொடுங்கல்லூர் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதன் காரணமாக தெரிவிக்கப்படும் மற்றொரு தகவலை இங்கு காணலாம்.

பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணினார் அந்த பக்தர். கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ‘என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விடமுடியுமா?’ என்று கேட்டாள்.

ஆனால் சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார்.

அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவிலே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீ சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப் பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

பொங்கல் திருநாள் :

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள். அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர். கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. ஏனெனில் இந்தப் பொங்கல் திருவிழா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அது ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இதே போல் 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் விழாவின் போது 25 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்ததாக முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.



ஹரிபலம் (நெல்லி)!

நெல்லிமரம் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. ஹரிபலம் என்றும் இதற்குப் பெயருண்டு. வீட்டில் நெல்லி மரம் வைத்தால் லட்சுமியின் அருள் உண்டாகும் என்பது ஐதீகம். இதனால் வீட்டில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் கிடைப்பதுடன், புண்ணியமும் சேரும். ஆனால், இதனை இரவு நேரத்தில் உண்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.

நெல்லி மரத்தின் நிழலில் அன்னதானம் செய்வது சிறப்பு. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாளான துவாதசியன்று நெல்லிக்காயை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வர்.

நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லது. தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து துவையலும் அரைக்கலாம். ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.

நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான்.

சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம்.

அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.

ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள்!

ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம்:

"ஓம் வாக்தேவ்யை நம"

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியை புத ஜனன்னியை ஸ்வாஹா!


கம்ப்யூட்டர் துறையில் உலகம் வியக்க, மாபெரும் சாதனை புரிய தினந்தோறும் 1008 முறை ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :

ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌!


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்!


சொந்த வீடு அருளும் திருப்புகழ்!

புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ் ஒன்றை வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அளித்துள்ளார்.

"அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே

அந்தரியொ (டு) உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக

மண்டலமும் முனிவோரும் எண்திசையில் உளபேரும்
மஞ்சினும் அயனாரும் எதிர்காண

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்துமயிலுடனாடி வரவேணும்

புண்டரிக விழியாள! அண்டர்மகள் மணவாள!
புந்திநிறை அறிவாள! உயர்தோளா

பொங்குடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா

தண்தரண மணிமார்ப! செம்பொன் எழில் செறிரூப!
தண்தமிழின் மிகுநேய முருகேசா

சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே''

இத்திருப்புகழினை மனமுருகிப் பாராயணம் செய்து புதிய சொந்தவீடு வேண்டுவோர் பலருக்குத் தவறாமல் முருகன் வரம் அளித்துள்ளான்.

`அண்டர்பதி' என்று துவங்கும் பாடல் தன்னை பாடல் தன்னை பாடுவதால் சொந்தவீடு கிட்டுவதோடு இன்பம் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்.


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

காத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை!



முருகப் பெருமானின் மனைவியே வள்ளி தேவி.

அவளே காத்தாயி அம்மன் என்ற பெயரிலும்  கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயத்தில் கம்பீரமாக வீற்று உள்ளாள். ஒவ்வொரு கடவுளும் பல ரூபங்களில் பல இடங்களில் அவதரிக்கின்றார்கள். ரூபம் மட்டுமே மாறுபட்டு இருந்தாலும், அந்த கடவுள் ஒருவரே என இருந்தாலும் அந்தந்த ரூபங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடங்களில் தர வேண்டும் என்பதும் முக்கியம்.



காத்தாயியை  குலதெய்வமாகக் கொண்டவர்கள் காத்தாயிதானே வள்ளி தேவி என  வள்ளி மலைக்கு சென்று வள்ளியை வணங்கி விட்டு செல்வதும், வள்ளி மலையை  குல தெய்வமாகக் கொண்டவர்கள் சித்தாடிக்குச் சென்று  காத்தாயியை வணங்கி விட்டு இருந்து விடக் கூடாது.  எந்த உருவில் நம் முன்னோர்கள் ஒரு கடவுளை குல தெய்வமாக வணங்கினார்களோ அந்த உரு உள்ள இடத்துக்குச் சென்று குல தெய்வத்தை வணங்காவிடில் ஒருவருக்கு நன்மைகள் கிடைக்காது.  என்னதான் இருந்தாலும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்  குலத்தைக் காப்பது குல தெய்வம் மட்டுமே.



வள்ளிக்கு தனி ஆலயங்கள் இரண்டு இடங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை. அவற்றில் ஒன்று சித்தாடி மற்றும் இரண்டாவது வள்ளி மலை. மற்ற இடங்கள் அனைத்திலும் வள்ளிக்கு தனி சன்னதிகள் முருகன் ஆலயங்களில் உள்ளன.

அதற்குக் காரணம்  முருகப் பெருமானின் இரண்டு மனைவிகளில் தெய்வயானை  இந்திர லோகத்தில் தேவர்களில் பிறந்து முருகனை மணந்தவள். வள்ளி தேவியோ பூமியிலே மனித உருவில் பிறந்து முருகனை மணந்தவள். ஆனால் இருவரில் சக்தி அதிகம் பெற்றவள் வள்ளி தேவியே.  வள்ளி தேவியைப் பற்றிக் கதைகளும் நிறையவே உண்டு, தெய்வயானயை பற்றிய தனிக் கதைகள் குறைவு என்பதைவிட இல்லை என்றே கூறலாம்.  அதனால்தான் வள்ளி தேவி, தனித் தேவி என்பார்கள்.

வள்ளி தேவிக்கு வேலூருக்கு அருகில் வாலாஜாபேட் எனும் இடத்தில் உள்ள மலை மீது  ஆலயம் உள்ளது. அவளை அங்கு வள்ளிமலை வள்ளி அல்லது பொங்கு தேவி என்றும் அழைக்கின்றார்கள்.

இந்த வள்ளிமலை வள்ளி தேவியைப் பற்றியக் கதை இது.

பகவான் விஷ்ணுவிற்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் சுந்தரவல்லி மற்றும் கஜவல்லி என்பவர்கள். அவர்களுக்கு நல்ல கணவனை அவர் தேடிக் கொண்டு இருந்தபோது அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தாம் தம் மீது கோபமே கொள்ளாத ஒரு கணவனையே மணப்போம் என்று தந்தையிடம் கூறியபோது அங்கு தற்செயலாக முருகன் வந்தார். அவரைக் கண்ட இருவரும் அவரையே தமது கணவனாக அடைய விரும்பினார்கள். ஆகவே அவர்களை தாம் மணப்பதாக உறுதி கூறிய முருகப் பெருமான் அவர்களை வேறு பெண்களாகப் பிறந்து சில காலம் இருந்தால் தான் வந்து மணப்பதாகக் கூறினார்.



கஜவல்லி இந்திரனின் மகளாக தெய்வயானை என்ற பெயரில் பிறந்தாள். அப்போது சூரபத்மனினால் தேவ லோகத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை நீக்க முருகன் சூரபத்மனுடன் சண்டை இட்டு அவனை அழிக்க, அதைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் தனது மகளான தெய்வயானையை அவருக்கு மணம் முடித்தார். இப்படியாக தெய்வயானையின் ஆசை நிறைவேறியது.



அவர்கள் இருவரில் சுந்தரவல்லி பூமியில் வள்ளி என்ற பெயரில்  வேடவரின் மகளாகப் பிறந்த வள்ளியோ வேடர்களில் ஒருவளாக வாழ்ந்து வந்தாள். அவளும் முருகனின் பெருமையைப் பற்றி கேட்டு அறிந்து இருந்தாள். ஆனால் அவளுக்கு தன்னைப் பற்றிய பூர்வ  ஜென்மத்தின் கதை தெரியாது. ஆகவே அவள் மனதில் முருகப் பெருமான் பெரிய வீரர் என்ற எண்ணம் ஏற்பட அவரையே மணக்க ஆசை கொண்டாள். ஆனால் வேடவனின் மகளான அவள் எப்படி அவரை மணக்க முடியும்?

அப்போது வயலில் வேலை செய்து வந்தவள் யதேற்சையாக அங்கு மனித ரூபத்தில் திரிந்து கொண்டு இருந்த நாரதரை சந்தித்தாள். அவருடன் பேசிக் கொண்டு இருந்தவள் அவரை ஒரு மனிதர் என்று நம்பி அவரிடம் தான் முருகப் பெருமானை மணக்க ஆசைக் கொண்டு உள்ளதாகக் கூறினாள். நாரதரும் உடனே முருகப் பெருமானிடம் சென்று அவள் காதலைப் பற்றிக் கூறினார். ஆகவே இதுவே நல்ல தருணம் என எண்ணிய முருகப் பெருமானும் அந்த வயல் பகுதிக்கு வந்து ஒரு வேடன் போல தன்னைக் காட்டிக் கொண்டு அவளைக் காதலித்தார். இருவரும் பல ஆண்டுகள் ஓடி ஆடித் திரிந்து காதல் வயப்பட்டனர். ஒருவரை ஒருவர் மணக்க முடிவு செய்து கொண்டவுடன் அதற்கு வள்ளியின் வளர்ப்பு பெற்றோர் தடை போட்டார்கள்.

ஆகவே முருகனின் சகோதரரான விநாயகர் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, முருகனின் வீரத்தையும், சக்தியையும் அந்த மலையில் காட்ட வைக்க இருவரின் குடும்ப சம்மதத்துடன் முருகப் பெருமான் வள்ளியை மணக்க வள்ளி தேவியின் பூர்வ ஜென்ம ஆசையும் நிறைவேறியது. அந்த மலை மீது முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் குடி கொண்டார்.



இந்த வள்ளிமலைப் பகுதியை சித்தபூமி என்கிறார்கள். அதன் காரணம் அங்கு பல சித்தர்கள்  வாழ்ந்து உள்ளார்கள். அவர்களில் வள்ளிமலை ஸ்வாமிகளான சச்சிதானந்தா ஸ்வாமிகள் என்பவர் மிகவும் பிரபலமான சித்தர். அவர் வள்ளி அம்மாவை நேரிலே சந்தித்து உள்ளார் என்பது இங்கு கூறப்படும் உண்மைக் கதை. அவரே வள்ளி தேவியை பொங்கி தேவி என அழைத்தார் என்று கூறுவார்கள். அந்த மலைக்  கோவிலுக்குச் செல்ல 300 க்கும் அதிக  படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டும்.

ஆலயம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். சென்னையில் இருந்து நேரடியாக வேலூருக்குச் சென்று அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளி மலை ஆலயத்துக்கு செல்லலாம்.

ஆக வள்ளியின் பக்தர்கள்  சித்தாடிக்குச் சென்று காத்தாயி ரூபத்தில் உள்ள வள்ளியையும்  அல்லது வள்ளி மலைக்குச் சென்று வள்ளி ரூபத்தில் உள்ள காத்தாயியையும்   வணங்கி  அவள் அருளைப் பெற்றிடலாம்.




அம்பாஜி கோவில்!


அம்பாஜி – 51 சக்தி பீடங்களில் ஒன்று:

தட்சனுடைய யாகத்தில், பார்வதி உயிரை விட்டதால், அவரது உடலை சிவன் எடுத்துக் கொண்டு உக்கிரத்துடன் இருந்தார். உடலின் பகுதிகள் பல இடங்களில் விழ, அவ்விடங்கள் சக்தி பீடங்களாகின. 51 பாகங்கள் விழுந்த இடங்களை மொத்தம் 51-சக்தி பீடங்களாக பாவிக்கப் பட்டு, வழிபட்டு வரப்படுகின்றது. இங்கு இதயம் விழுந்ததால், சிறப்பான, அதிக சக்தி வாய்ந்த ஸ்தலமாகக் கருதப் படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப் படும் இக்கோவிலில் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. சக்தி உபாசகர்கள் குறிப்பாக வந்து செல்கின்றனர். பௌர்ணமியில் அதிகமான கூட்டம் வருகின்றது. 


Ambaji chakra

விக்கிரகம் இல்லாத யந்திரம் பிரதானமாக உள்ள கோவில்:

அரசூரி அம்பாஜி என்றழைக்கப்படும் இங்கு விக்கிரகம் எதுவும் கிடையாது. இங்குள்ள ஶ்ரீ விசா யந்திரம் வழிபாட்டிற்குரியதாக உள்ளது. இது தாமிரத் தகட்டில் “ஶ்ரீ யந்திரம்” போல வரையப்பட்டுள்ளது என்றும், அதன் மீது “ஶ்ரீ” என்று எழுதப்படுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனை இது வரை யாரும் புகைப்படம் எடுத்ததுக் கிடையாது, எடுக்கவும் முடியாது. ஆமையின் முதுகைப் போன்ற வளைவுடன் உள்ள பரப்பின் மீது 51 பீஜ எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. 



அம்பாஜி – கோவில் வாசலில் இருக்கும் விக்கிரகம்!

சக்தி வழிபாடு “மந்திர-தந்திர-யந்திர” முறைகளுடன் இணைந்தது. மந்திரங்கள் சப்தங்களாக இருந்து, அவை உருவங்களாக மாறுகின்றன. அந்த உருவங்கள், உபயோகப் படக்கூடிய யந்திரங்களாக மாறுகின்றன. உருவமற்ற சக்தி, உருவத்துடன் கூடிய பொருளாக மாறும் தத்துவம் இதில் அடங்கியுள்ளது. இதனை பூஜிப்பவர்கள் தங்களது கண்களைக் கட்டிக் கொண்டு தான் செய்கிறார்கள். மூலவழிபாட்டு ஸ்தலம் அருகில் உள்ள கப்பர் மலை மீதுள்ளது என்கிறார்கள். அங்கு செல்வதற்கு “ரோப் கார்” வசதியும் செய்யப்பட்டுள்ளது.


அம்பாஜி கோவில் இருப்பிடம்: பனஸ்கந்தா [Banaskantha District] என்ற மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவில் [अम्बाजी] பலன்புரியிலிருந்து 65 கி.மீ, அபு மலையிலிருந்து 45 கி.மீ, அஹமதாபாதிலிருந்து 185 கி.மீ, கடியாட்ராவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ளது. அபு மலைக்குக் கீழே உள்ளது. 

வடகிழக்கில் உதய்பூர் உள்ளது. தென்மேற்கில் பலன்பூர் (ரெயில்வே ஸ்டேஷன்) உள்ளது. பனஸ்கந்த மாவட்டத்தில் உள்ளது. வேதகாலத்திற்கு முன்பிருந்தே, இந்த கடவுள் வழிபடப்பட்டு வருகிறது. 

சரஸ்வதி நதி தோன்றிய இடத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. நகர் பிராமணர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. ஆராசூரி என்ற மலைக்கு அருகில் இருப்பதனால், அராசூர் அம்பாஜி என்றே அழைக்கப்படுகிறது. 



அம்பாஜி – மலைமீது இருக்கும் கோவில்.

17ம் நூற்றாண்டிற்கு முன்னர் சரித்திர விவரங்கள் இல்லாதது வியப்பாக இருக்கிறது. இக்கோவில் பழமையானது என்றாலும், 17ம் நூற்றண்டிற்கு முன்னால் எந்த கல்வெட்டும் கிடைக்கவில்லை. இதனால், அதன் தொன்மையினை நிறுவ முடியவில்லை. பரோடாவில் சக்தி வழிபாடு அதிகமாக இருந்ததால், உள்ள மக்கள் காளிகா, அம்பாஜி, கொடியார் போன்ற பலவித அம்மன்களை வழிபட்டு வந்தனர். திடீரென்று சக்தி வழிபாடு உருவானதா, அல்லது இருந்தது புதுப்பிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. 17ம்நூற்றண்டு வரை சரித்திர ஆதாரங்கள் இல்லாமல், திடீரென்று அக்கோவில் முளைத்திருக்க முடியாது. சுற்றி கிருஷ்ண வழிபாடு அதிகமாக இருக்கும் போது, சக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து, அதற்கான காரணத்தை அறிய வேண்டியுள்ளது. 



மலைமீதிருக்கும் அம்பாஜி கோவிலுக்குப் பக்கத்தில், ஒரு சிறிய குன்றுள்ளது. அங்குதான், குழந்தை கிருஷ்ணருக்கு, முதன்முதலில் முடியிறக்கப் / மொட்டையடிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆகவே, கிருஷ்ண வழிப்பாட்டுடன், சக்தி வழிப்பாட்டை இணைக்கும் முயற்சியும் நடக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதிகள் உள்ளகியுள்ளதா என்பது பற்றியும் அமைதியாகவே உள்ளது. அதாவது, சரித்திர ஆதாரங்கள் இல்லை. அப்படியென்றால், எப்படி இப்பகுதிகள் தப்பித்தன என்ற வியப்பும் ஏற்படுகின்றது.



கோவில் புனர்நிர்மானன் செய்யப்பட்ட விவரங்கள்:

அரசாங்கத்திற்கும், டந்தா அரச வம்சத்தினருக்கும் இடையே நிகழ்ந்த வழக்கிற்குப் பிறகு, ஶ்ரீ அரசூரி அம்பாஜி மாதா டிரஸ்ட் 1960ல் உருவாக்கப்பட்டது. இதனால், இக்கோவில் முழு நிர்வாகமும் பனஸ்கந்த கலெக்டர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1971ல் அம்பாஜி வளர்ச்சி கமெட்டி அமைக்கப்பட்டு, இகோவிலை புதுப்பிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, 1975லிருந்து, இக்கோவிலை புதுப்பிக்கும் மற்றும் மாற்றியமைக்கும் வேலைகள் மூன்று நிலைகளில் நடைப்பெற்று வருகின்றது. 

இதன்படி 1975 முதல் 1988 வரை “நீஜ் மந்திர்” எனப்படுகின்ற, முன்னிருந்த கோவில், இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம், தூண்கள், சீர்பங்கள் கொண்ட இப்பொழுயதைய மண்டபம், கோவில் கட்டபட்டது. பழைய கோக் மற்றும் யந்திரம் அப்படியே வைக்கப்பட்டன. 1986 முதல் 1989 வரை, 103 அடி உய்ரம் கொண்ட பிரதான கோவில், தங்கத்தகடு வேயப்பட்ட கோபுரம் [Suwarn Kalash Shikhar] முதலியவை கட்டி முடிக்கப்பட்டன. இந்த புனர்நிர்மானம் மற்றும் மற்றியமைக்கும் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, பல சரித்திர ஆதாரங்கள் வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், அவை பற்றிய விவரங்கள் கிடைப்பதாக இல்லை.



அக்ஷயதாம் தாக்குதல், குஜராத்தில் நிலவிவரும் நிலை முதலியவற்றால் கோவிலுக்குள் செல்ல கடுமையான பாதுகாப்பு, சோதனை முதலியவை உள்ளன. கோவிலுக்குள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. இக்கோவிலுக்கு போகும் போது குன்றின் மீது அம்மன் கோவில் இருந்தது. அங்கும் பக்தர்கள் ஏராளமாக செல்கின்றனர். தினமும் லட்சகணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள், பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி போன்ற நாட்களில் கூட்டம் சொல்ல மாளாது. யாத்திரிகர்களுக்கு இங்கு எல்லா வசதிகளும் தங்க, உணவு உண்ண உட்பட செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ அரசூரி அம்பாஜி மாதா டிரஸ்ட் [ Shri. Arasuri Ambaji Mata Devasthan Trus] அனைத்தையும் நிர்வகித்து வருகின்றது. ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவில் 20-25 லட்சம் மக்கள் பங்கு கொள்கிறார்கள்.


உன்னத வாழ்வருளும் தென்காசி உலகம்மன்!


சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.

அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.

தலவிருட்சம் : செண்பக மரம்.

தீர்த்தம் : 

சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான  தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.

தலச்சிறப்பு : 

இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம்.  நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.  

சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.  திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

காசிக்குப் போய் கங்கையில் புனித நீராடினால்தான் ஒவ்வொரு பக்தனின் கடமையும் பூர்த்தியாவதாக ஆன்மிக நூல்கள் சொல்கின்றன.


காசி வடக்கே அமைந்திருப்பதால், தெற்கே வசிக்கின்ற எல்லோரும் காசிக்குச் செல்வது சிரமம்தான். பொருளாதார வசதி, உடல் நிலை எனப் பல காரணங்களை முன்னிட்டுப் பலராலும் பயணிக்க முடியாமல் போவது இயல்பு.



அதனால் என்ன? இருக்கவே இருக்கிறது தென்காசி.

திருநெல்வேலிக்குப் பக்கத்தில் குற்றாலச் சாரலின் குளுமையோடு அமைந்துள்ள அழகான ஊர் தென்காசி.


காசியில் குடி கொண்டுள்ள காசி விஸ்வநாதர், தானே விருப்பப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார் என்பது நம்பிக்கை. எனவே, அங்கே போய் வணங்க முடியாதவர்கள், தென்காசி வந்து வணங்கினாலே காசிக்குச் சென்ற பலன் முழு அளவில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.


காசி விஸ்வநாதர் கோயில் தென்காசியில் அமையக் காரணமாக இருந்தவன் பராக்கிரம பாண்டியன் எனும் மன்னன். கி.பி. 1442-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவன் பராக்கிரம பாண்டியன். கல்வி, வீரம், புலமை, மொழியறிவு, பக்தி என்று எல்லாவற்றிலும் சிறந்து காணப்பட்டான்.


கனவில் வந்த விஸ்வநாதர்

பாண்டியன் சிறந்த சிவ பக்தன். தினமும் ஈசனை வழிபடாமல் உணவு அருந்த மாட்டான். வருடம் ஒரு முறை காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி, விஸ்வநாதரைத் தரிசித்து வருவது அவனது வழக்கம். ஒரு நாள் இரவு பாண்டியன் கனவில் காசி விஸ்வநாதர் வந்தார். ‘நீ வசிக்கும் ஊரிலேயே எனக்கு ஒரு கோயில் எழுப்பு. நானே அங்கே வந்து குடி கொள்கிறேன். வருடா வருடம் என்னைத் தேடி வடக்கே நீ வர வேண்டாம்’ என்று கூறினாராம்.


பராக்கிரமனுக்கு சந்தோஷம். ‘இறைவா, உனக்கு ஆலயம் கட்டுகின்ற பெரும் பேற்றை எனக்கு வழங்கி உள்ளாய். மகிழ்ச்சி. ஆனால், எந்த இடத்தில் ஆலயம் கட்ட வேண்டும் என்கிற தகவலையும் சொன்னால் நன்றாக இருக்குமே?’ என்று கேட்டானாம்.


அதற்கு காசி விஸ்வநாதர், ‘விடிந்ததும் கண் விழித்துப் பார். தரையில் எறும்புகள் சாரி சாரியாக உன் கண்களில் படும். அவற்றைப் பின்தொடர்ந்து செல். அந்த எறும்புகள் எந்த இடத்தில் போய் நிற்கின்றனவோ, அங்கே எனக்குக் கோயில் கட்டு’ என்று அருளினாராம்.


அதிகாலையில் கண்விழித்தான் பராக்கிரமன். தரையை நோக்கினால், ஈசன் அருளியபடி, இவன் காலடிக்குக் கீழே எறும்புகள். இந்த எறும்புக் கூட்டம் எதுவரை செல்கிறது என்று பின்தொடர்ந்து பார்த்தான். சித்ரா நதி (சிற்றாறு) அருகே செண்பக வனத்தில் வந்து எறும்புகள் நின்றன.


அங்கே புதர் மண்டிக் கிடந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆணையிட்டான். அற்புதமான சிவலிங்கம் ஒன்று அங்கே இருக்கக் கண்டான். ஈசனை வணங்கி, ஆலயம் அமைக்கும் பணியைத் துவங்கினான். மிகப் பிரமாண்டமாக இந்த ஆலயத்தைக் கட்டி முடித்து குடமுழுக்கும் நடத்தினான். இன்றைக்கும் ஆலயத்தில் எந்த ஒரு திருவிழா என்றாலும், முதல் மரியாதையைப் பராக்கிரம பாண்டியன் திருவடிவத்துக்குத்தான் அளிக்கிறார்கள்.

பராக்கிரமன் கட்டிய ஆலயம்தான் இன்றைக்கும் உள்ள தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். 


இங்கே உமையின் திருநாமம் உலகாம்பிகை.

காசியில் விசாலாட்சியைத் தரிசித்தால் கிடைக்கும் பலன், உலகாம்பிகையைத் தரிசித்தால் கிடைத்து விடும் என்கிறார்கள்.


பொங்கி எழுந்த கங்கை!

ஆலயம் கட்டி முடித்த பின், கங்கை நீர் கொண்டு தினமும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசைப்பட்டான் பராக்கிரமன். இவனது எண்ணத்தை அறிந்துகொண்ட இறைவன், இந்தக் கோயிலிலேயே ஓரிடத்தில் கங்கையைப் பொங்கச் செய்தார். காசி விஸ்வநாதரைத் தொடர்ந்து கங்கையும் தென்காசிக்கு வந்தது கண்டு சந்தோஷப்பட்ட பராக்கிரமன், கங்கை பொங்கிய இடத்தில் ஒரு கிணறு கட்டினான்.


பராக்கிரமன் அமைத்த இந்தக் கிணறு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் காணப்படுகிறது. ‘காசி கங்கைக் கிணறு’ என்றே அழைக்கிறார்கள். தினமும் இறைவனுக்கு இந்த நீர் கொண்டுதான் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.


இந்த கோவிலின் புராதன ராஜகோபுரம் பழுதாகி 1990 ஆம் ஆண்டு மீண்டும் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.


கோபுரத்திற்கு வெளியில் காற்று ஒரு திசையிலும் கோபுரத்திற்கு உள்புறம் காற்று எதிர் திசையிலும் அடிக்கும் அதிசயத்தை இங்கு காணலாம். ஆங்கிலத்தில் crosswind draft என்று கூறுவார்களே அந்த முறையில் கோபுரம் அமைந்துள்ளது.



விக்கிரகம் இல்லாமல் இரண்டு பீட சந்நதிகளையும் இந்த கோவிலில் காணலாம்.ஓன்று ஆலோசகர் சன்னதி.இந்த கோவில் எழுப்பப்பட்டபோது சிவனே அடியாராக வந்து ஆலோசனைகள் வழங்கியதாக வரலாறு. ஆலோகசகர் சன்னதியில் பீடம் மட்டும் உள்ளது. இன்னொன்று பராசக்தி பீடம்.

திருவிழாக்கள் :

மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்,
புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும்,
ஐப்பசி திருக்கல்யாணமும்,
ஆவணி மூல தெப்பத்திருவிழாவும்,
தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.


கோயில் முகவரி :

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
தென்காசி - 627 811, திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி எண் : 04633 - 222 373