புதன், 1 பிப்ரவரி, 2017

“மங்கள சண்டிகை துதி”!

மங்களை உன்றன் பத்ம மலரடி சூடினாலே
மங்களம் வாய்த்தல் உண்மை மற்றுமென் மங்களையே!
மங்களம் நாணுன் நாணே! மாதர்கள் போற்றும் தேவி!
மங்களம் 
தருக அம்மா! மாந்தர்கள் வணங்குகின்றோம்!

யாவுமாய் ஆகி நின்ற தேவியே சண்டி நீயும்
ஏவுவுல் தரிக்க வல்லாய்! எல்லாமாய் ஆனாய் அன்றோ!
மூவரில் முதன்மையானாய்! முரிந்திடும் புருவ வில்லாய்!
தேவரும் வியப்பில் வீழ தேர்ந்தனை கருணை கொண்டாய்!

நீலமா மலரை உன்றன் நீள்விழி மணந்த தம்மா!
கோலமே கூற்றம் தனனிக் கொளுத்திடும் செம்மைகொண்டாய்
ஆலமே சூழ்ந்த தேனும் அங்கொரு மஞ்சள் கொண்டாய்!
வாழவே உன்னை வேட்டோம் வகையருள் சண்டிகாவே!

வாழ்க்கையாம் கடலில் வீழ்ந்து வருந்தினம் வந்துனது வாசல்
ஆழ்மனத் தன்பினாலே அமைந்தனம் அன்னை அன்றோ!
தாழ்ந்தனம் தேவி உன்றன் தளிரடிப் பாதம் பற்றும்
ஏழைகள் துயரைத் தீர்க்க இக்கணம் எழுக தாயே!

காக்கவே காக்க நீயே! கணிபவள் நீயே தாயே!
நீக்கரும் மங்களங்கள் நிமலைதான் சண்டிகாவே!
போக்குவை விபத்தினின்றும் பொலிய மங்களமே நல்கு!
தேக்கரும் கருணை வெள்ளம் தினமுனை தோத்தரித்தோம்!

மகிழ்வினை நல்கும் தேவி! மங்களம் நல்கும் தேவி!
மகிழ்வதைத் தருவதற்கோ மலைத்திடா அன்னை நீயே!
மகிழ்வினைச் சுபத்தை நல்கு! மகிழ்வெனச்சுபமாய் ஆனாய்
மகிமையும்கொண்டாய்அம்மா! மனதினில்உன்னைக்கொண்டோம்!

மங்களம் நீயே! ஈசை மங்களம் 
எங்கும் ஆனாய்! மங்களம் 
எதிலும் நல்கும் மங்கள சண்டி நீயே!
மங்களம் புவனம் எல்லாம் மல்கிடவைக்கும் தாயே!

தோத்திர மாலை கொள்ள தோன்றிய மங்களமும் நீயே!
தோத்திரம் செய்வோர் தம்முள் தோன்றிடும் மங்களமும் நீயே!
தீத்திறம் அளிக்க வல்ல தேவியே! மனு வம்சத்து
தோத்திரம் கொள்ள வந்தாய்! தூயவளே வணங்குகின்றோம்!

வாழ்வினில் இன்பம் சேர்ப்பாய்! 
மங்களம் அனைத்தும் நல்கி!
தாழ்விலாச் சுவர்க்கம் சேர்க்கும்
சண்டியே போற்றுகின்றேன்!

சார்ந்தனை எங்கும் என்றும் சர்வமங்கள தாரையாய்!
பாரிதில் எல்லாச் செய்கை பரிபவம் இன்றிக் காப்பாய்!
ஆரெவர் வாரந்தோறும் அரிய செவ்வாய்தான் பூஜை 
நேரிடில் அருளைச் செய்யும் நேர்மையே சண்டி போற்றி!

இயங்குவை நிலைத்த தானே எல்லாமும் நீயே தாயே!
மயங்கியபோது வந்தே மதியினை நல்கும் தேவி
தயங்கியே தேவர் மூவர் தகுமறை முனிவர் போற்ற
வயங்கிய தாளைப் பற்றி வணங்கியே வாழ்த்துகின்றோம்!

மங்கள சண்டி தன்றன் மாண்பினை உரைக்கும் இந்த
மங்களங்கள் நல்க வல்ல மாதேவன் சொன்ன தோத்திரம்
எங்கனும் சொன்னோர் கேட்டோர் அவர்தம் புத்ரர் பௌத்ரர்
பொங்கு மங்களமே தங்க புவியினில் வாழ்வர் மாதோ!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக