சனி, 30 ஜூலை, 2016

சூடிக்கொடுத்த சுடர்கொடிக்கு ஆடிப்பூரத் திருவிழா!


தான் சூடிய மாலையை எம்பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்து சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் என அழைக்கப்பட்ட ஆண்டாள், மகாலட்சுமியின் அம்சமாக துளசி மடத்தின் கீழே அவதரித்தவள். புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, வியாழன் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் துலாம் லக்னத்தில் அந்த அவதாரம் நிகழ்ந்தது.  பெரியாழ்வாரின் மகளாக வளர்க்கப்பட்ட ஆண்டாள் கண்ணனையே தன் கணவனாக மனதில் கொண்டு கண்ணனுக்காக, திருப்பாவை 30 பாடல்கள், நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் என உளம் நெகிழ்ந்து பாடியுள்ளாள்.  ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது.  திருமகளின் அம்சமாகப் பிறந்த ஆண்டாள், பங்குனி உத்திரத்தில் வாரணம் ஆயிரம் புடை சூழ பெருமாளை மணந்தாள். அந்த  ஆண்டாள்-ரங்கமன்னாரின் திருமண வைபவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் பிறந்த நாள் விழா ஸ்ரீவில்லிப்புத்தூர் நாச்சியார்(ஆண்டாள்) கோயிலில் 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா ஆகஸ்ட் 1ம் தேதி வேத, மந்திரங்கள் ஒலிக்க அடியார்கள் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் பாட, கொடிமரத்தில் காலை 8:30 மணியில் இருந்து 9:30 மணிக்குள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு விழா துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. ஆண்டாளும் ரங்கமன்னாரும் பிரத்யேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அன்று இரவு அவ்விருவரும் அலங்கரிக்கப்பட்ட பதினாறு வண்டிச் சப்பரத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வருவர். விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, இரவு வீதியுலா நடைபெறும்.

வீதியுலாவின் போது திரளான பக்தர்கள் தொடர்ந்து செல்வர்.

இரண்டாம் நாள் காலை 8:30 மணிக்கு ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் சந்திர பிரபையிலும் ரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதியுலா வருவர். 



மூன்றாம் நாள் விழாவில் காலை 8:30 மணிக்கு முந்தைய நாள் போலவே ஆண்டாளும், ரங்கமன்னாரும் வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் தங்கப் பரங்கியிலும் ரங்கமன்னார் அனுமார் வாகனத்திலும் வலம் வருவர்.

நான்காம் நாளன்றும் காலை 8:30 மணிக்கு அதேபோல வீதியுலா. ஆடிப்பூரத்தின் ஒவ்வொரு நாளும் வீதியுலாவின் போது அந்த ஊரே விழாக்கோலத்தில் காட்சியளிக்கும். இரவு ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ரங்கமன்னார் கோவர்த்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருவர். ஒவ்வொரு நாளின் வீதியுலாவின் போதும் ஆண்டாள்-ரங்கமன்னாரைத் தொடர்ந்து நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஐந்தாம் நாள் காலை 9 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களாசாசனம் நடைபெறுவதாக ஐதீகம். இந்த வைபத்தைக் காண திரளான பக்தர்கள் வந்து பக்தி பரவசம் அடைவர். அன்று இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி. அப்போது ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் ரங்கமன்னார் பெரிய பெருமாள் வாகனத்திலும் சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கால் அப்பன் பெரியா திருவடி வாகனங்களிலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வீதியுலா வருவர். ஐந்தாம் நாள் வாகன வீதியுலாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். பெண்கள் ஒன்று கூடி கண்ணன் பாடல்களை பாடிக் கொண்டு கோலாட்டம் ஆடி மகிழ்வர். 

ஆறாம் நாள் ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரங்கமன்னார் யானை வானகத்திலும் எழுந்தருளி வலம் வருவர்.

ஏழாம் நாள் ஆண்டாள்-ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியான் அலங்காரத்தில் வீதி விடையாத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவர். இரவு ஆண்டாள்-ரங்கமன்னார் சேர்ந்து கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு 8 முதல் 11 மணி வரை கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக்கோலத்தில் காட்சியளிப்பார். இந்த அலங்காரத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.  

எட்டாம் நாள் ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் வீதியுலா வருவர்.  இரவு ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும் ரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் வீதியுலா வருவர். இரவு 11:30 மணியில் இருந்து 12:30 மணிவரை திருத்தேர் கடாக்ஷித்தல் நடைபெறுகிறது.

 ஒன்பதாம் நாள் காலை பெருமாளுக்கும் தேவிக்கும் ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். காலை 5 முதல் 6 மணிக்குள் கடக லக்னத்தில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுவர். தமிழகத்திலேயே திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தேர் இது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8:05 மணிக்கு பக்தர்கள் ‘‘கோவிந்தா! கோவிந்தா!’’ என்று விண்ணைத் தொடும் கோஷத்துடன் வடம் பிடிக்க, தேரோட்டம் நடைபெறும். தேர் சக்கரங்கள் பூமியில் பதிந்து விடாதபடி அது செல்லும் வழியில் இரும்பு தகடுகள் போடப்பட்டிருக்கும்.
 
தேரில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் சேர்ந்து வரும் காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவர். திரளான பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் கூட்டம், கூட்டமாக வந்து ஆண்டாள்-ரங்கமன்னாரை தரிசனம் செய்வர்.



பத்தாம் நாள் மாலை 5 மணிக்கு இரட்டைத்தோளுக்கினியானில் ஆண்டாள்-ரங்கமன்னார் புறப்பாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் அவதாரம் பட்டர்களால் வாசிக்கப்படும்.
பதினொன்றாம் நாள் காலையில் ஆண்டாள்- ரங்கமன்னார் புறப்பாடாகி நான்கு ரத வீதிகளில் உலா வருவர். இரவு மூலஸ்தானத்தில் சேர்த்தியாவர்.

பனிரண்டாம் நாள் காலை உற்சவ சாந்தியோடு விழா நிறைவடையும். மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரங்கமன்னார் தம்பதிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். விழாவின் ஒவ்வொரு நாளும் நாலாயிர திவ்ய பிரபந்தம் அடியார்களால் பாடப்பெறும்.
 
 

ஆடிப்பெருக்கு!


ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.



மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைத் தேர்வு செய்து கொள்வார்கள்.

அந்த இடத்தை சுத்தம் செய்து, பசுஞ் சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, ஊதுவத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலை அருளுமாறு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இதனால் நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் வெள்ளமாய்ப் பெருகும் என்ற நம்பிக்கை கொள்கிறார்கள்.



தங்கள் வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சைப் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று தயாரித்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உண்பார்கள். ஆடி பதினெட்டாம் நாள் காவிரிப் பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரிக் கரையில் வைத்து நோன்பு நோற்பதும் உண்டு.



காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலைவரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.

குழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள்.



காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை செய்தபின் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்ளும் பெண்கள்.



காவேரி நதியின் மகிமையை உணர்த்திய பெருமாள்!

அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள்.

காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.

அந்த சமயம், கர்ப்பவதியாக இருந்த காவேரி, பெருமாள் சொன்னதை கேள்விப்பட்டு மகிழ்ந்தாள். பெருமாளை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பவதியாக இருந்த காவிரி தாய் பெருமாளை தரிசித்த நாளே ஆடிப்பெருக்கு திருநாள். வருடம் வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமந் நாராயணன்!

ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்ட ஸ்ரீராமர்

ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது. ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு. “இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.

தங்கைக்கு சீர்வரிசை செய்ய காவேரிக்கு வரும் பெருமாள்

ஆடிபெருக்கு நாளில் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள். அத்துடன் தங்கைக்கு சீராக தந்திட புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் போன்றவற்றை சீராக எடுத்துக் கொண்டு யானை மேல் ஏறி வருவதாக புராணம் சொல்கிறது. அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர் வரிசையை கொண்டு வருவார்கள். அதை பெருமாள் முன் வைத்து, “உங்கள் தங்கைக்கு தர வேண்டிய சீர் வரிசையை சரி பாருங்கள்.” என்று காட்டுவார்கள். அத்துடன் தீப ஆராதனையும் செய்வார்கள். இதன் பிறகு காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

 பூஜை செய்யும் முறை

இந்த ஆடி மாதத்தில் புண்ணிய நதியாய் திகழும் காவிரி கர்ப்பவதியாக இருப்பதாகவும், அதனால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து மஞ்சல், காதோலை கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பழம், பூ, அரிசி வெல்லம் மற்றும் சுவையான பழங்களும், மஞ்சல் சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து காவேரியை மகிழ்விப்பார்கள். பிறகு பூஜித்த மஞ்சல் சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும் ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள். காவேரியை பூஜித்து சந்தோஷப்படுத்தினால் அந்த குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் காவேரி, அன்னையாக இருந்து நம்மை காப்பாள். அத்துடன் நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும். கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது மஞ்சல் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தகைய பல சிறப்புகளை கொண்டது ஆடி மாதமும் ஆடி பெருக்கு திருநாளும் ஆகும்.

வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை

காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறை குடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணியத் தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியை நாளைப்போலவே ஆடிப்பெருக்கு நந்நாளிலும் மக்கள் புது பொன் நகை வாங்குகிறார்கள். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடி மாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்று சொல்வார்கள். ஆனால், ஆடிப்பெருக்கு நாள் மட்டும் விதிவிலக்காகிறது.

 

செவ்வாய், 26 ஜூலை, 2016

கோட்டை கோயில் கல்யாண காமாட்சி!



இறைவர் திருப்பெயர் : மல்லிகார்ச்சுனர். இறைவியார் திருப்பெயர் : கல்யாண காமாட்சி!
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
மாவட்டம் : தர்மபுரி
 
 
தருமர் வழிபட்டதால் இந்த ஸ்தலத்திற்கே தருமபுரி என்று பெயர். மேலும் இக்கோயிலுக்கு மாத்ரு மந்திர் என்றும் பெயர். உலகில் தாய் வழிபாட்டின் பெருமையை விளக்க கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ அன்னை ஜெய ஜெய காமாட்சி, கல்யாண காமாட்சி, ஐக்ய நிலையில் சிவ சக்தி ஐக்ய சொரூபமாக, பஞ்ச பிரம் மாசானத்தில், பிரம்மா விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் நான்கு கால்களாக சதாசிவர் மேற் பலகையாக, மேல் நின்று அன்னை அனுக்ரஹிக்கும் நிலையில் நாம் தரிசிக்கும் ஒரே தலம், 18 படிகளுக்கு மேல் அன்னையின் திருக்கோயில் கருவறை அமைந்துள்ளது.
 
 
பிரதோஷ புண்ணிய காலத்தில் உமையோடு கூடி தம்மை தாமே வலம் வருகையில் சிவசக்தி ஐக்கிய நிலையை உணர்த்தி 18ம் படி அருகே அன்னை கல்யாண காமாட்சி ஆலயத்தை வலம் வந்து திருக்காட்சியை அளிப்பது காணக் கிடைக்காத அபூர்வ தரிசன காட்சியாகும்.
 


தினசரி பக்தர்கள் திருப்படிக்கும் குடம் குடமாக நீர் சொரிந்து மலரிட்டு வழிபடுகிறார்கள்.

அமாவாசை தினத்தில் பெண்களே கலந்து திருப்படி பூஜை செய்கிறார்கள்.
 


 
அன்னை ஆதி காமாட்சியை திருக்கோயில் வலம்வர திருப்பாதம் தாங்கி வருபவரும் பெண்களே, குடை எடுப்பதும் பெண்களே. தாய்மையின் பெருமையைக் குறித்த ஆலய அமைப்பும், பூஜை முடிவுகளும் அம்பிகைக்கே முதலிடம் ஆதலால் தாய் மண், தாய்மொழி போல் தாய்க்கோயில் மாத்ரு மந்திர் என போற்ப்படுகிறது. மற்றுமொரு விசேஷம் இந்த காமாட்சி தருமபுரி கல்யாண காமாஷி என்று அழைக்கப்படுகிறாள்.
 
திருவிழா:   

நவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி, சண்டி யாகம், அஷ்டமி


சிறப்பம்சம்:
 
தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட கோயில் என்பதும், அம்மன் 18 படிகளுக்கு மேல் நின்று அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பு. 
 

ஆடி 2-ம் செவ்வாய்,
"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. வெள்ளி கவச அலங்காரம்.

ஸ்ரீ தருமபுரி கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் கல்யாண காமாட்சி கோயிலில், தருமர் முதலானோர் வழிபட்ட சூலினி ராஜதுர்கை தரிசிக்க வேண்டியவள். மகிஷனை வதம் செய்யும் நிலையில் சூரன் மனித உடலும், எருமைத்தலையும் கொண்டு, கத்தி கேடயம் ஏந்தி கீழே விழுந்த நிலையில் மூன்று வகை சூலங்களைக் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறாள். இது தமிழகத்தில் சூலினிக்கான ஒரே கோயிலாகும்.   



"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. சந்தன காப்பு அலங்காரம்.


 
வருடத்தில் ஆடிமாதம் மூன்றாவது செவ்வாய் மட்டுமே மாலை 4.30 முதல் 9.00 வரை தரிசிக்க முடியும். ஏனைய நாட்களில் முகம் மட்டுமே தரிசிக்கலாம். திருமுகம் தவிர ஏனைய பாகங்களை தரிசிப்பது நடைமுறையில் இல்லை. தினசரி பூஜைகள் திரையிட்டே செய்கிறார்கள்.    

 
நேர்த்திக்கடன்:   

இங்குள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

 
திறக்கும் நேரம்:   

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில் தருமபுரி-636 702.
 
 
 
 
 

வீடு-மனை யோகம் தரும் பூமிநாதர்!

 
 

தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் பாடாய்ப்படுத்தி, அவர்களின் நித்தியப்படி வாழ்க்கையைக் குலைப்பதில் இந்த அசுரர்களுக்கு அப்படியென்ன பொல்லாத சந்தோஷமோ... தெரியவில்லை. அந்தகன் எனும் அசுரனும் இதற்கு விதிவிலக்கு அல்ல!



தேவர்கள் கதறினர்; முனிவர்களும் ரிஷிகளும் தவம் கலைந்துபோனதை நினைத்து வருந்தினர். மக்களும் நிம்மதியற்றுப் புலம்பினர். அனைவரும் அடைக்கலம் தேடிப் பிரார்த்தித்தது... சிவப்பரம்பொருளிடம்!
அவர்களின் துயரத்தைக் கேட்ட சிவனார், தன் சூலாயுதத்தால் அவனை அழித்தார். அப்போது சிவனாரின் நெற்றியில் இருந்து வியர்வைத் துளி ஒன்று கீழே விழ... அதில் இருந்து சிவகணம் ஒன்று வெளிப் பட்டது. 'மூவுலகையும் எரிக்கவும் அழிக்கவுமான வரத்தைத் தந்தருளுங்கள்’ என சிவகணம் வேண்ட, அந்த வரத்தைத் தந்தருளினார் சிவபெருமான்.


உடனே அந்தச் சிவகணம், 'பூமியை விழுங்கமுடிகிறதா எனப் பார்ப்போமே’ என யோசித்தது. அதன்படியே, அது மொத்த பூமியையும் விழுங்க முற்படும் வேளையில், பதறியடித்து ஓடி வந்த தேவர்கள், சிவகணத்தைத் தடுத்து நிறுத்தினர்; குப்புறத் தள்ளினர். அப்போது அங்கே தோன்றிய சிவனாரிடம், 'எனக்குப் பசிக்கிறது; உணவு தாருங்கள்’ எனக் கேட்டது, சிவகணம்.


உடனே தேவர்கள், ''அப்படியெனில், பூலோக மக்கள் வீடு கட்டும்போது மனையில் செய்கிற பூமி பூஜையிலும் ஹோமங்களிலும் இடுவதில் உனக்கான உணவும் வந்து சேரட்டும். ஆனால், இந்த பூமியில் உள்ள மக்கள் வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு உறுதுணையாக, பக்கபலமாக நீ இருக்கவேண்டும்'' எனக் கேட்டுக்கொள்ள... 'அப்படியே செய்கிறேன்’ என உறுதி தந்ததாம் சிவகணம்! அடுத்து, சிவனார் அதற்கு அருள் வழங்கி, தன்னுள் ஏற்றுக் கொண்டார் என்கிறது ஸ்தல புராணம்!



அன்று துவங்கி இன்றளவும் வீடு-மனை வாங்குகிற யோகத்தைத் தந்தருள்கிறார் அந்தச் சிவகணம். ஸ்ரீபிரம்மா மற்றும் தேவர்கள் அந்த சிவகணத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்ட நாளில்- நேரத்தில் (நாழிகை) சிவகணத்தை விடுவிக்க, அப்போது அந்தச் சிவகணம், மக்கள் தந்திருக்கும் உணவைச் சாப்பிடுவதாகவும் ஐதீகம்! அந்தச் சிவகணத்தின் இன்னொரு பெயர்... வாஸ்து புருஷன்!


இந்த மண்ணுக்கான, பூமியில் கட்ட நினைக்கிற, கட்டுகிற அனைத்துக் கட்டடங்களுக்கான தேவதை வீற்றிருக்கும் தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு மண்ணச்சநல்லூர் என்றே திருநாமம் அமைந்தது. திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது இந்த ஊர். சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்துக்கு டவுன் பஸ் வசதி உண்டு. மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது திருக்கோயில்.


இந்தத் தலத்து இறைவன்... வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம்.





அம்பாள்- ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.


பூமி தொடர்பாக கணவர் சிவனார் உலக மக்கள் அனைவருக்கும் அருள்புரிவதற்கு, அம்பிகையே தாயென இருந்து துணைநின்று, பூமியையும் மக்களையும் காத்தருள்கிறாள். அத்துடன், கல்யாண வரமும் குழந்தை பாக்கியமும் அருளும் வரப்ரசாதியாகவும் திகழ்கிறாள் இந்த அம்பிகை. ஸ்ரீபூமிநாதர், சுயம்புத் திருமேனி. பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களில் சூரிய ஒளி சிவலிங்கத் திருமேனியில் விழுவதை எண்ணற்ற அன்பர்கள் வந்து தரிசிக்கின்றனர்.


மனை அல்லது நிலம் வாங்குபவர்கள், 'இவ்ளோ காசு- பணம் சம்பாதிச்சு என்ன பயன்? சொந்தமா ஒரு வீடு வாங்கற யோகம் அமைய மாட்டேங்குதே..’ என்று புலம்புவர்கள், இங்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, அம்பாளையும் ஸ்வாமியையும் பிரார்த்தித்தால், விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள். அமாவாசை நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. அதிலும், அமாவாசையும் புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டுமே என்கிற ஆவலில் இருப்ப வர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது நம்பிக்கை.


வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்... இங்கே மேடுபூஜை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு சிவனாரைப் பிரார்த்தித்தால், வியாபாரத்தில் குழப்பம், நஷ்டம், பிரச்னைகள் என யாவும் விலகும்; தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள். தொடர்ந்து மூன்று வாரங்கள் மேடுபூஜையில் கலந்துகொண்டால், 4-வது வாரத்தில் நல்லதொரு மாற்றம் நிகழும் என்கின்றனர்.





இங்கே, வாஸ்து பரிகார பூஜையும்  விசேஷம். நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வட கிழக்கு மூலையில் இருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி, பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். பிறகு, வாஸ்து நாளில் இங்கு அந்தப் பிடிமண்ணை வைத்து ஸ்ரீபூமிநாதருக்கு பூஜை செய்து விட்டு, அந்தப் பிடிமண்ணுடன் பிராகார வலம் வந்து இங்கேயுள்ள மண்டபத்தில் கட்டிவிடவேண்டும். கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கோயிலுக்கு வந்து, மண்டபத்தில் கட்டிய பிடிமண்ணை துணியில் இருந்து எடுத்து, கோயிலின் வில்வமரத்தடியில் கொட்டி விட்டு வணங்கினால், பிரச்னைகள் விலகி, கட்டடப் பணிகள் குறைவின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.


பிராகாரத்தில் உள்ள வன்னிமரத்தடியில் இருந்து மண் எடுத்துக்கொண்டு, ஸ்ரீபூமிநாதரை வணங்கிவிட்டு, மனையின் வடகிழக்கு மூலையில் போட்டுவிட்டு வேலையைத் துவக்கினால், வீடு மற்றும் கட்டடப் பணிகள் தடையின்றி நடைபெறுமாம்.


இங்கேயுள்ள முருகனுக்கு பங்குனி உத்திர நாளில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தைத் தரிசித்தால், வீடு- மனையில் உள்ள தடைகளைத் தன் வேல் கொண்டு விலக்கியருள்வார் என்பது ஐதீகம்!







திருவரங்குளம் பெரியநாயகி!






ம் வீட்டுக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாக இருந்து சிவ- பார்வதி குடியிருந்து காத்தருளும் தலம் என திருவரங்குளத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள்!



பெரியநாயகி யாக அம்பாள் அவதரித்து, சிவனாரை கரம்பற்றியதால், கல்யாண வரம் தரும் கோயில்; குழந்தைகளை நோயின்றிக் காத்தருளும் ஆலயம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவரங்குளம்.


புதுக்கோட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்!
குலோத்துங்க சோழீச்சரம் என அழைக்கப்பட்ட இந்தத் தலத்தின் நாயகனாம் சிவனாரின் திருநாமம்... சார்ந்தாரைக் காத்த ஈஸ்வரன். தன்னை நாடி வரும் அன்பர்களைக் காத்தருளும் மூர்த்தி இவர். ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி என அழைக்கின்றனர் பக்தர்கள்!





திருஅரங்குள நாதர் என்கிற திருநாமமும் உண்டு.
சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்டவர் ஸ்ரீஅரங்குளநாதர். சிறிய மூர்த்தம்தான் என்றாலும் மிகப்பெரிய சாந்நித்தியம் கொண்டவர் சிவனார் என்கின்றனர் அடியார்கள்!





ஏழு தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான இந்தத் தலம், மிகச் சிறந்த பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. சிவ- பார்வதியை தரிசித்து, விளக்கேற்றி வணங்கினால், நல்ல வரன் அமையும் என்கின்றனர் பக்தர்கள்.


புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தலங்களில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி. எனவே, இந்தத் தலத்து நாயகியின் திருநாமமும் அதுவே!


நோய் நொடியில்லாத, ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்று நினைக்காதவர்கள் இருக்கிறார்களா என்ன? இந்தத் தலத்தில் அம்பாள் சந்நிதிக்கு முன்னே உள்ள ஸ்ரீசக்கரம் ரொம்பவே விசேஷம்.







இந்த ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தபடி, ஸ்ரீபெரியநாயகியை மனதாரப் பிரார்த்தனை செய்தால், நரம்புத் தளர்ச்சி முதலான உடல் கோளாறுகள், காத்துக் கருப்பு முதலானவை, மனக்குழப்பம் என சகலமும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்!





குழந்தையின் ஜாதகத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ அல்லது குழந்தை பிறந்தது முதலே ஏதேனும் உடல் உபாதையால் தவித்து வந்தாலோ... இங்கு சிவனாருக்கு தத்துக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. குழந்தையை ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீபெரியநாயகியின் சந்நிதியில் வைத்து, 'இனி, இது உன் குழந்தை. நீதான் ஒருகுறையும் இல்லாம, இந்தக் குழந்தையைக் காப்பாத்தணும்’ என்று குழந்தையை இறைவனுக்குத் தத்துக் கொடுத்துவிட்டு, பிறகு எடுத்துச் செல்கின்றனர்.


இதன் பிறகு குழந்தைகளுக்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகும்; ஆரோக்கியத்துடன் நோயின்றி வளர்வார்கள் என்கின்றனர் பக்தர்கள்.












28 ராசிக்கு உகந்த கோயில்கள்!

மனிதன் ஒவ்வொருவரும் தன்னை சுயம்புவாகவே பாவித்துக் கொள்கிறான்.
நம் உடம்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஐம்புலன் களாலும், கை-கால்களாலும் உடம்பின் இயக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், உடலுக்குள் ஓயாமால் உழைத்துக் கொண்டிருக்கும் இதயம், இரைப்பை, ஈரல், சிறுநீரகம் முதலானவற்றின் இயக்கத்தை யார் நிர்வகிக்கிறார்கள்? பரம்பொருள்தான் என்னும் அந்த சூட்சும உண்மையை உணர்ந்துகொண்டால் எல்லாமும் நலமாகும்.

இயற்கை வேறு, இறைவன் வேறல்ல! இயற்கையின் இயக்கத்தை - ஆற்றலை நம்மிடம் திணிப்பது கிரகங்களும், ராசி நட்சத்திரங்களும்தான். நட்சத்திரக் கதிர்வீச்சுகள் அதற்குரிய தன்மையோடு பூமியை அடைய, அவற்றுடன் கிரகங்களின் கதிர்வீச்சும் இணைந்து ரசவாத மாற்றத்தை நிகழ்த்துகின்றன. அதற்கு ஆட்படும் மனிதனானவன் தனது பூர்வஜன்ம வினைகளுக்கு ஏற்ப பலனையோ, பாதிப்பையோ ஏற்கிறான். அங்ஙனம் பாதிப்புகள் உண்டாகும்போது மனம் சோர்வுறாமல் வலிமை பெறவும், தாழ்வைக் கட்டுப்படுத்தவும், வாழ்வை மேம்படுத்தவும்  இறைவழிபாடு உதவும். ராசி நாயகனையும் நட்சத்திர நாயகனையும் சமநிலைப் படுத்தக்கூடிய வல்லமை ஆலயங்களுக்கு மட்டுமே உண்டு. ஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கும், அவர்கள் அருள்பாலிக்கும் கோயில்களுக்கும் சென்று வணங்கி வழிபட்டு வரலாம்.


ராசிகளின் ஆதிக்கத்தை அறிவது போன்றே, அவற்றின் கூட்டமைப்பான நட்சத்திரங் களையும், அவற்றின் நான்கு பாதங்களையும் - ஆதிக்கத்தையும்  அறிவதன் மூலம், இன்னும் துல்லியமாகக் காலக்கணிதத்தைத் தெரிந்து கொள்ளலாம். அவ்வகையிலேயே இந்த இதழில் ராசிக் கோயில்களை தந்துள்ளதுடன், ஒவ்வொரு நட்சத்திரத்தின் படியும் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய கோயில்கள் குறித்த தகவல்களையும் அளித்துள் ளோம். வாசகர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் குறிப்பிட்ட அந்தத் திருத்தலங்களுக்குச் சென்று, முறைப்படி வழிபட்டு வரம்பெற்று வாருங்கள். உங்கள் இல்லம் செழிக்கவும், உள்ளம் மகிழவும் இறையருள் துணை நிற்கட்டும்!

மேஷம்

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாதம் அமர்ந்து பலன்களைத் தருகிறார். பன்னிரண்டு ராசிகளையும் 360 டிகிரி என்று வைத்துக் கொண்டால், முதல் 30 டிகிரியில் மேஷ ராசி இடம் பெறும். இந்த ராசியில் இருந்துதான் சூரியனின் ஒளிப் பயணம் தொடங்குகிறது.


மேஷ ராசியில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி வழியாக உற்றுப் பார்க்கும்போது, மேஷம் என்னும் ஆட்டின் வடிவம் தெரிவதைப் பார்க்கலாம். ராசி மண்டலத்தை மனித உடலாக உருவகப்படுத்தினால், மேஷத்தை கபாலம் என்று சொல்லலாம்.

மேஷத்தில் பிறந்த நீங்கள், சிங்கம்போல இருப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும், குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் 5-ம் இடம், சிம்ம ராசிக்கு உரியது. அதற்கு அதிபதி சூரியன். எனவே, உங்களைவிட உங்கள் பிள்ளைகள் புத்திக்கூர்மையும், செல்வ வளமும் பெற்றிருப்பார்கள்.

செவ்வாய் அதிபதியாக ஆட்சி செலுத்தும் இந்த மேஷ ராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்களிடம் செவ்வாயின் தாக்கம் மிகுந்திருக்கும். நான்கு சகோதரர்களுக்கு இடையில் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களின் அறிவு பலத்தால் நீங்களே முதல்வராக இருப்பீர்கள். ஆனாலும், உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்புடன் இருப்பீர்கள். சில நேரங்களில், உடன் பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளவில்லையே எனும் ஆதங்கமும் எழும்.

அதேபோன்று, பூமிகாரகனாகிய செவ்வாயின் ராசியில் பிறந்தவர்கள் என்பதால், சொந்த நிலம் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும் சுக்கிரன் அதிபதியாகிறார். ஆகவே, கலைகளில் நாட்டம் இருக்கும். பழைமை விரும்பிகளாகவும் திகழ்வீர்கள். அதிலும் முன்னோர்கள் நினைவுகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பொக்கிஷம் போன்று பாதுகாத்து வருவீர்கள். மண் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

சுற்றியிருப்பவர்களிலேயே உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களும் உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களை இனம் கண்டறிவதிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

இந்த ராசிக்காரர்களிடம் கிரகிக்கும் தன்மையும், கற்றுக்கொள்ளும் வேகமும் அதிகம் இருக்கும். வேலையிலும் வெகு சீக்கிரம் சாதனை படைப்பார்கள். பலநூறு பேருக்கு மத்தியில் வேலை செய்தாலும், சட்டென்று அனைவரது  கவனத்தையும் தன்பக்கம் ஈர்க்கும் ஆற்றல் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு. உங்களில் பலரும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் இருக்க மாட்டார்கள். படித்த துறை வேறாகவும், பணி புரியும் துறை வேறாகவும் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்பது, எடுத்துக்கொள்ளும் பணியில் முடிவு வரையிலும் ஆர்வம் காட்டாமல் கோட்டைவிடுவது, எதிரிகளின் பலத்தை கணிக்காமல் செயல்படுவது ஆகியன உங்களுக்கான மைனஸ் விஷயங்கள். இவற்றைத் தவிர்க்கப் பாருங்கள்.

சில விஷயங்களை சிலரால்தான் முடிக்க முடியும் எனும்போது அவரிடம் உதவி கேட்பதில் தவறு இல்லை. வீண் தயக்கமே உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும். ஆகவே தயக்கத்தை தகர்த்தெறியுங்கள். எடுத்த காரியத்தில் விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.
பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் உங்களுக்குப் பிடித்தமானதாகத் திகழும். அப்படியான சூழலில் அமைந்த தலங்களில், உங்கள் ராசிநாதனான செவ்வாயை வழி நடத்தக்கூடிய தெய்வத்தை நீங்கள் தரிசிக்கும்போது, உங்கள் வாழ்வு மலையளவு உயரும் என்பது உறுதி.

ஆமாம்! உங்கள் ராசிக்கு உகந்தவை மலைத் தலங்கள். அதிலும், முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக, பழநி திருத்தலம். தனித்தன்மை பெறவேண்டும் என்ற தாகத்தோடு முருகப்பெருமான் வந்து அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலம் பழநி. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு.

அசுவினி: இந்த நட்சத்திரக்காரர்கள் மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசித்து வரலாம். திருச்செந்தூர் தலமும் உகந்தது.

பரணி:
அழகர் மலைக்குச் சென்று கள்ளழகரைத் தரிசித்து வாருங்கள்.

கிருத்திகை முதல் பாதம்: நாகப் பட்டினம்-திருவாரூர் பாதையில் உள்ள சிக்கல் தலத்துக்குச் சென்று சிங்கார வேலனைத் தரிசித்து வழிபட்டால், நலன்கள் யாவும் கைகூடும்.

ரிஷபம்

ராசி மண்டலத்தை காலபுருஷன் எனும் உருவமாகக் கொண்டால், மேஷ ராசி கபாலம் என்பதைப் போல், இந்த ரிஷப ராசி முகம் ஆகும். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக வருவதால், இந்த ராசிக்காரர்கள் முக அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சுக்கிரன் உங்களுக்கு வசீகர தோற்றத்தைத் தருவார். புத்தக வாசிப்பு உங்களுக்குப் பிடித்தமான ஒன்று. 

ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். உங்களை எதிர்ப்பவர்கள்தான் தோற்றுப் போவார்கள். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள்.

மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டுதலைத் தரும். பொதுக் காரியங்களிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல், எந்த ஒரு பொது விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல், எல்லா வேலைகளையும் முன் நின்று செய்வீர்கள். எந்த விஷயத்திலும் தனக்கென காரியம் சாதிக்க நினைப்பது தங்களுக்குப் பிடிக்காது. உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவதே முன்னேற்றம் என்பது தங்களின் சித்தாந்தமாக இருக்கும்.

ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் புதன் வருகிறார். ஆகவே, எதையும் சூட்சுமமாகப் புரியவைப்பதில் சமர்த்தர் நீங்கள். உங்களின் எண்ணத்தை முகக் குறிப்பாலேயே எதிரில் உள்ளவர்களுக்கு உணர்த்திவிடுவீர்கள்.  அதேபோன்று, மற்றவர்களைக் கணிப்பதிலும் நீங்கள் கில்லாடி. பால்ய கால நண்பர்கள் உங்கள் தொழிலிலும் வாழ்விலும் கூட்டாகப் பயணிக்க வாய்ப்பு உண்டு. அவ்வப்போது பழைய விஷயங்களை அசைபோடுவது உங்களுக்குப் பிடிக்கும்.

உங்கள் ராசிக்கு 3-வது ஸ்தானமான முயற்சி ஸ்தானத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றபடி முயற்சி செய்து முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களிடம் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். எல்லோருக்குமே பெற்ற அன்னையிடம் பாசம் உண்டு. ஆனால் நீங்களோ, அதையும் தாண்டி  அவரிடத்தில் பெரும் பக்தி கொண்டிருப்பீர்கள். அவருக்கு ஒன்று என்றால், துடித்துப்போய்விடுவீர்கள்.தாயார் ஸ்தானத்தைக் குறிக்கும் சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால், உலகத்துக்கே ஒளி தரும் சூரியனைப் போல், உற்றார், உறவினர் எல்லோரையும் நேசிப்பீர்கள். அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

உங்களுக்குப் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். அதற்காக, நமக்கு எதிரிகளே இல்லை என்றும் நீங்கள் புளகாங்கிதம் அடையமுடியாது. காரணம், உங்கள் பகைவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஆமாம், உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. உங்கள் பேச்சு, செயல் அனைத்துக்கும் நீங்களே எதிர்பாராதபடி ஒரு பக்க விளைவு ஏற்படும். ஆகவே, பேசும்போதும் செயல்படும்போதும் கனிவும், அதீத கவனமும் தேவை.

உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்றிருக்கும் போது நீங்கள் பிறந்திருந்தால், திரைத் துறையில் சாதனை படைப்பீர்கள். இயற்கையான சூழலில் நன்றாக உறங்குவீர்கள்.

உங்களின் வாழ்க்கைத் துணைவர் உங்களைவிட வேகமாக இருப்பார். நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். அதேநேரம், சில விஷயங்களில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் வாக்குவாதம் செய்வார். பொறுத்துக் கொள்ளுங்கள். அவர் எதைச் செய்தாலும் உங்கள் நன்மைக்காகவே இருக்கும். சிறு வயதில் அனுபவம் இல்லாமல் சில தொழில்களில் ஈடுபட்டு, நஷ்டத்தை அடைந்திருப்பீர்கள். எனினும், அதன் மூலம் கிடைத்த அனுபவம் இனி உங்களுக்கு உதவியாக இருக்கும். நாற்பது வயதுக்கு மேல் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்.

ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம்  பெறும். நந்தியெம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்; இனியவை யாவும் நடந்தேறும். அதேபோன்று தொழிலில் பின்னடைவு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சச்சரவுகள் என்று மனதுக்கு வருத்தம் ஏற்படும் சூழலில், பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுங்கள். பிரச்னைகள் மெள்ள மெள்ள விலகும். புராணங்களில் பசு வழிபட்ட திருத்தலங்கள் குறித்த தகவல்கள் ஏராளம் உண்டு. அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதாலும் நலன்கள் கைகூடும்.

கிருத்திகை 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரு பாதங்கள் இந்த ராசியைச் சேர்ந்தவை.

கிருத்திகை 2, 3, 4-ம் பாதங்கள்: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் தலத்துக்குச் சென்று முருகனை வழிபடலாம்.

ரோகிணி: மயிலாடுதுறை அருகில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ள தேரழுந்தூர் சென்று ஆமருவியப்பனை வழிபட்டு வாருங்கள்.

மிருகசீரிடம் 1,2-ம் பாதங்கள்: சுவாமிமலையில் அருளும் ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்; நலன்கள் யாவும் கைகூடும்.

மிதுனம்

இரட்டையர்களைச் சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள்.

எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல துல்லியமாக நீதி வழங்குவதில் வல்லவர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம்கூட உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘எங்கேயாவது கேவலமாக நினைச்சுக்கப் போறாரு’ என்று தவிர்ப்பீர்கள். அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சிற்சில தடைகள் ஏற்படலாம்.

வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால், வானத்தில் நிகழும் மாயாஜாலங்களைப் போல், உங்கள் மனதிலும் மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்கமுடியாது.
மூத்த சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குப் பாசம் இருந்தாலும், இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். உங்களுடைய மூத்த சகோதர சகோதரிகள் எடுக்கும் முடிவுகள் உங்களை எதிர்மறையாக பாதிக்கக்கூடும்.

உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். எப்போதும் இறையருள் உங்களுக்கு இருக்கும்.

உங்களின் உத்தியோக ஸ்தானத்துக்கு அதிபதியாக குரு வருவதால், ஒரே இடத்தில் பணி புரிய முடியாது. எங்கேயும் தேங்கி நின்று விடாமல், உங்களின் பயணம் தொடரும். உங்களில் சிலர் சுயதொழில் துவங்கவும் வாய்ப்பு உண்டு. எனினும்,  தொழிலின் நிமித்தம் குடும்பத்தைப் பிரிந்துசென்று வேறோர் இடத்தில் பணம் சம்பாதிக்க நேரிடும்.

மிதுனம் என்பதே இரட்டை என்று பார்த்தோம். ராசியாதிபதி புதனாக வருவதால், பெரும்பாலும் பெருமாள் கோயில்கள் உங்களுக்கு ஏற்றவையாக அமையும். அதிலும், ஒரே தலத்தில் இரட்டைப் பெருமாள் அருளும் தலமாக இருப்பின் மிகவும் விசேஷம்.

அவ்வகையில் நீங்கள் சென்று தரிசித்து வழிபடவேண்டிய திருத்தலம் திருத்தொலைவில்லி மங்கலம்.

திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருத்தொலைவில்லி மங்கலம். நூற்றெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான்.

இரு கோயில்களையும் நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். முதலாவதான திருப்பதியில்  எழுந்தருளும் பெருமாளின் திருப்பெயர் தேவப்பிரான் ஆகும். இரண்டாவதான திருப்பதியில் அருளும் பெருமாளின் நாமம் அரவிந்தலோசனன் என்பதாகும். சேர்ந்தே அருளும் இருவரையும் தரிசித்து வாருங்கள்; எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்.

மிருகசீரிடம் கடைசி இரண்டு பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர் பூசம் முதல் மூன்று பாதங்கள் இந்த ராசியில் அடங்கும்.

மிருகசீரிடம் 3, 4-ம் பாதங்கள்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வழிபடுங்கள்.

திருவாதிரை: சிதம்பரம் ஆடல் வல்லானை தரிசித்து வாருங்கள்.

புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள்:  கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரைத் தரிசித்து வாருங்கள்; வளம் பெருகும்.

கடகம்

நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி இது.

நீங்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.

நீங்கள் எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் 4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். 6-ம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் யோகத்தை அளிக்கும்.

அசையா சொத்துகளைப் பொறுத்த வரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். உங்களுடைய 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், தீர்க்காயுள் உண்டு.

10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர் கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். 11-ம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.

சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அவ்வகையில், நீங்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

சக்தி வழிபாட்டின் இதயத் துடிப்பு போன்றது லலிதா சகஸ்ரநாமம். இந்தத் தலத்தில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லியே அர்ச்சனை ஆராதனைகள் நிகழும். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். இங்கு வந்து லலிதாம்பிகையின் அருட் தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும்.

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம் இந்த ராசியில் அடங்கும்.

புனர்பூசம் 4-ம் பாதம்: காஞ்சி காமாட்சியை வழிபட்டு வாருங்கள்.

பூசம்: குமரி பகவதியம்மனைத் தரிசித்து வருவது சிறப்பு.

ஆயில்யம்:
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் வடபத்ரசாயியையும் வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

சிம்மம்

உங்கள் ராசியின் அதிபதி ராஜகிரகமாகிய சூரியன் என்பதால், ராஜபோகத்துடன் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்வது என்பது உங்கள் அகராதியிலேயே இல்லை.

சிந்தனை, சொல், செயல் என்று அனைத்திலும் வேகம் காட்டும் நீங்கள் அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பீர்கள். பின்னால் இருந்து குறை கூறுவதும், உடன் இருந்தே துரோகம் செய்வதும் உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. உணவு விஷயத்தைப் பொறுத்தவரை, சூடாகவும் சுவையாக வும் இருக்கவேண்டும் என்றே விரும்புவீர்கள்.

இந்த ராசிக்கு 2-ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியாக புதன் வருவதால், பணத்துக்குக் குறைவு இருக்காது. ஆனால், கையில் தங்காதபடி செலவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். புதன் பேச்சுக்கு அதிபதி என்பதால், யோசித்த அந்தக் கணமே பளிச்சென்று பேசுவீர்கள்.

சுக ஸ்தானம் மற்றும் தாயார் ஸ்தானமாகிய 4-ம் இடத்துக்கும் பாக்கிய ஸ்தானம் மற்றும் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடத்துக்கும் செவ்வாயே வருகிறார். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். அவர்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு உண்டு.

5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கும், ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடத்துக்கும் குரு அதிபதியாக இருப்பதால் நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளைகள் பிறப்பார்கள்.

6 மற்றும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், உங்களுடைய வாழ்க்கைத்துணை திறமைமிக்கவராக இருப்பார்.

படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. பெரும்பாலும் சிலரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் அமையும். பெயர், பணம், புகழ் ஒன்றாகக் கிடைக்கும் துறை அல்லது பதவியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும்வரை காத்திருந்து சேருவீர்கள்.

சூரியன் சிவ கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார். சூரியன் நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகராக உள்ள ஒரு தலமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். கொழுந்துவிட்ட அக்னியானது கருணையின் பொருட்டு இங்கு மலையாகக் குளிர்ந்துள்ளது. சிவனே மலையாகவும், மலையே சிவமாகவும் பிரிக்கமுடியாதபடி விளங்குகிறது. சூரியன் எப்படி எல்லாவற்றுக்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணா மலை தலம் விளங்குவதாக ஸ்காந்த புராணம் விவரிக்கிறது.

ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை நீங்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர, அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும்.

மகம், பூரம் மற்றும் உத்திரம் 1-ம் பாதம் இந்த ராசியில் அடங்கும்.

மகம்: உங்கள் வாழ்க்கை சுகப்பட நீங்கள் தரிசிக்க வேண்டிய தலம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயில்.

பூரம்: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்துக்குச் சென்று குற்றாலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

உத்திரம் 1-ம் பாதம்: ஈஸ்வரன் ஆட்சீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்புரியும் அச்சிறுப்பாக்கம் திருத்தலம் உங்களுக்கு விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். திரிநேத்ர முனிவர் வழிபட்ட சிவலிங்கம் ஒன்றும் இங்கு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

கன்னி

மிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.

புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள். பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.

11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.

உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும், நீங்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும் ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள். அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் சித்தத்தில் நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

உத்திரம் 2,3,4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இந்த ராசியில் அடங்கும்.

உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள்: சென்னை திருவலிதாயத்தில் ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லீசர் எனும் திருவலி தாயநாதரை வணங்குதல் நலம்.

அஸ்தம்:
திருக்கோஷ்டியூரில் அருள்பாலிக்கும் திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீஉரகமெல்லணையானை வணங்குதல் நலம்.

சித்திரை 1, 2-ம் பாதங்கள்: சிக்கலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிங்காரவேலரை கார்த்திகையில் வணங்குதல் நலம்.

துலாம்


அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள்.

நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான்.

உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச் சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள்.

பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் நீங்கள் சமர்த்தர்.

6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள். ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி.

சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

சித்திரை 3, 4-ம் பாதங்கள்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை அர்த்தஜாம பூஜையின்போது வணங்கவும்.

சுவாதி: அரக்கோணத்துக்கு அருகில் உள்ள சோளிங்கபுரத்தில் அருள்பாலிக்கும் சோளிங்கர் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வணங்கினால் நன்மை உண்டாகும்.

விசாகம் 1,2,3-ம் பாதங்கள்: திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானை வணங்குங்கள்; வாழ்க்கை வளம் பெறும்.

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள், ‘ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் ஒன்றும் புதிதல்ல’ என்பதுபோல், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், உங்களை நீங்களே தேற்றிக் கொள்வீர்கள். எதையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பீர்கள். பதுங்கிப் பின்பு பாயும் புலியைப் போன்றவர்கள் நீங்கள்.

பூமிகாரகரான செவ்வாய் உங்களின் ராசி அதிபதியாக வருகிறார். எனவே, சிறிய அளவிலாவது உங்கள் பெயரில் சொத்து எப்போதும் இருக்கும். சிலருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும். உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 6-ம் இடத்துக்கு அதிபதியும் செவ்வாய் என்பதால், பலருக்கு ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உங்களைப் பொறுத்தவரை, உங்களுடைய பேச்சே உங்களுக்கு எதிரி!

2-ம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு அதிபதி குரு ஆவார். வாழ்க்கையின் பிற்பகுதியில் பணவரவு, சேமிப்பு போன்றவை உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாக இருப்பார். கலைகளில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். உங்களிடம் மிகுந்த அன்போடு இருப்பதுடன், ஒரு நண்பரைப்போல் பழகுவார். சயன ஸ்தானம் என்னும் 12-ம் இடத்துக்கும் சுக்கிரனே அதிபதி என்பதால், நான்கு நாட்கள் வேலை செய்தால் இரண்டு நாட்கள் சுகமாக இருக்க விரும்புவீர்கள். அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வருவீர்கள். பயணங்களை விரும்பும் நீங்கள் அதற்காகவே பணம் சேர்ப்பீர்கள்.

விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் இருப்பதால், ஞானியர்களையும், மகான்களையும் தரிசித்து வணங்குவது நலம். மேலும், செவ்வாய்க்கு எதிர் குணங்களைக் கொண்ட அனுஷத்துக்கு அதிபதியாக சனியும், கேட்டைக்கு அதிபதியான புதனும் வருவதால், நன்றாக சுகபோகங்களுடன் வாழும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் சிந்திப்பீர்கள். காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் சுற்றித் திரியும் சித்தர்கள் என்றால், உங்களுக்குக் கொள்ளைப் பிரியம். மிகப் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடுவது நல்லது.

அப்படி ஜீவசமாதி அமைந்திருக்கும் தலம்தான் நெரூர். இந்தத் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

உங்கள் ராசியில் சந்திரன் நீசமாவதால் சட்டென்று புத்தி வேலை செய்யாது. திடீரென்று பிரச்னை வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பீர்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எல்லாம் இத்தலத்தை தரிசித்த மாத்திரத்தில் நீங்கும். இத்தலம் கரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இந்த ராசியில் அடங்கும்.

விசாகம் 4-ம் பாதம்: திருவனந்தபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஹரிலட்சுமி உடனுறை ஸ்ரீஅனந்தபத்மநாபனை ஏகாதசி திதியில் வணங்குதல் நலம்.

அனுஷம்:
காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்குதல் நலம்

கேட்டை: திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மன் மற்றும் சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆகியோரை வணங்கி வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.

தனுசு

குருவை அதிபதியாகக் கொண்ட உங்களின் ராசி தனுசு. எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவீர்கள். எந்த ஒரு விஷயமானாலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவீர்கள்.

தனகாரகரான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். ஏனெனில், உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும்.  நட்புக்கும் குணத்துக்கும் மட்டுமே மரியாதை தருவீர்கள். மிகப் பெரிய செல்வந்தரே ஆனாலும், உங்களை சிறிய அளவில் அவமதித்தார் எனில், அவரை அறவே ஒதுக்குவீர்கள்.

11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்ற தொழில்கள் உங்களுக்கு லாபம் தரும். சயன, மோட்ச ஸ்தானமான 12-ம் இடத்துக்கு அதிபதி செவ்வாய் என்பதால், மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வருவதிலும், சித்தர் வழிபாடுகளிலும் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசிக்கு அதிபதியான குருவை கோதண்ட குரு என்றும் அழைப்பார்கள். எனவே, குறுக்கிடும் போராட்டாங்களால் அவ்வப்போது சந்தோஷத்தை இழந்து நிற்பீர்கள்.

இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். திருப்புள்குழி என்பதே மருவி திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் ஜடாயு எனும் கழுகரசனுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தில், விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலமாகும். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார்; நிம்மதியைத் தருவார்.

திருப்புட்குழி திருத்தலம் சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம்.

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

மூலம்: சமயபுரத்தில் அருள்தரும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்கி வாருங்கள்; உங்கள் வாழ்க்கை நலம் பெறும்.

பூராடம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.

உத்திராடம் 1-ம் பாதம்:
வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீபொய்யாமொழி கணபதியையும் வணங்கி வாருங்கள். நலமே விளையும்!

மகரம்


மகரம் என்பது கடல் வீடு. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கின்றனவோ அப்படி உங்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். எப்போதும் மற்றவர்களிடம் 'புது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டபடி இருப்பீர்கள். சோர்வு அடையமாட்டீர்கள். வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்பீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி, இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் சனி என்பதால், மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவீர்கள்.

2-ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கும் சனி அதிபதி என்பதால், அதிக அளவில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும், திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்காகப் பணத்தைத் தேடுவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும்.

வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுடைய வாழ்க்கைத் துணை கலாரசனை மிக்கவராக இருப்பார். உங்களைவிடவும் நிதானமாக யோசித்துச் செயல்படுபவராக இருப்பார். உங்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிப்பார். வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பார்.

10-ம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், வாழ்க்கையின் மத்தியப் பகுதியில் சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். எங்கே பணமும் புகழும் சேர்ந்து கிடைக்குமோ அங்கே வேலை செய்யவே விரும்புவீர் கள். உயர்ந்த பதவி யோகம் உண்டு. சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக கலைத் துறையினருடன் எப்போதும் தொடர்பு கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கு அதிபதியாக குரு இருப்பதால், உங்களின் செலவுகள் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இருப்பது உங்களுக்கு நன்மை தருவதாக அமையும்.

சனியின் பூரண ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் உங்களுக்குத் திருமாலிடம் மாறாத பக்தி இருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி இருந்தாலும், பெருமாளை வழிபடுவதையே மிகவும் விரும்புவீர்கள். கடல் என்பது சனி பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. மகரத்தை மகரக் கடல் என்றே அழைப்பார்கள்.

பாற்கடலில்தான் மகாவிஷ்ணு சயனக் கோலம் கொண்டிருக்கிறார். எனவே, சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதப் பெருமாளாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் நீங்கள் வழிபட உகந்தவை ஆகும். குறிப்பாக, திருக்கடல்மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள்: திருக்கோளூரில் அருள்புரியும் வைத்தமாநிதி பெருமாளை வழிபட, நலம் உண்டாகும்.

திருவோணம்:
திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்கி வாருங்கள்; நன்மைகள் உண்டாகும்.

அவிட்டம் 1, 2-ம் பாதங்கள்: சிக்கல் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஆவராணியில் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதரை தரிசியுங்கள்.

கும்பம்

ஒரு குடம் போன்ற அமைப்பில் உள்ளதே கும்பம். குடத்தைத் திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த நீங்கள் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள். தொடர்ந்து பத்து நிமிஷம் பேசிய பிறகுதான், உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியமுடியும். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப் படுத்த முடியும்.

உங்களுடைய பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 5-ம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.

ஜீவன ஸ்தானமாகிய 10-ம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற  துறைகளில் பணிபுரிவீர்கள். 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர் களால் அதிக லாபம் பெறுவீர்கள்.



இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த  ஆலயத்துக்குச் செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம். அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அத்தலத் திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும் மங்களாம்பிகை ஆகும்.

கும்பராசியைச் சேர்ந்தவர்கள் இந்தப் புராணத்தைப் புரிந்துகொண்டு ஈசனை தரிசித்து வாருங்கள்.

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள்:
மாயவரம்-கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை தரிசியுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

சதயம்:
சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்கரை வணங்கினால் நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்: கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்

உங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 3-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டவையாக அமைந்தி ருப்பதால், உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருப்பதாகக் காட்சி அளிக்கும்.
அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். குருவின் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ‘பட்...பட்’ என்று பேசுவார்கள். ஆனால், குருவின் மீன ராசியில் பிறந்த நீங்கள் இதமாகவும் இங்கிதமாகவும் சூழ்நிலை அறிந்து பேசுவீர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் முடிவு எடுப்பார்கள் என்றால், மீன ராசியில் பிறந்த நீங்கள் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், ‘பணத்தைவிட மனம்தான் பெரிது’ என்பீர்கள். யாராவது உங்களை அவமானப் படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.

வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியான செவ்வாயே உங்களின் 9-ம் அதிபதி யாகவும் வருகிறார். 9-ம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்பார்கள். எனவே வாக்கினால், அதாவது பேசியே நிறைய  பணம் சம்பாதிப்பீர்கள்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத்தரம் மேம்படும். உங்களில் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்வீர்கள். 8-க்கு உரியவன் சுக்கிரன் என்பதால், திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆயுள்காரகராகிய சனி துலா ராசியில் உச்சம் அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறப் பார்ப்பீர்கள். அப்பாவைப் பின்பற்றினாலும் வித்தியாசமாக முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.  ‘தந்தைக்கு நம்மிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அவ்வப்போது நினைத்து ஏங்குவீர்கள். 10-ம் இடமான ஜீவன ஸ்தானத்துக்கும் உங்களின் ராசி அதிபதியான குருவே இருப்பதால், உங்களில் பலரும் சுயதொழிலில் ஈடுபடவே விரும்புவீர்கள். சிலர் நீதி, கணக்குத் தணிக்கை, வங்கி, பதிப்பகம் போன்ற துறைகளில் புகழுடன் பணம் சம்பாதிப்பீர்கள். எத்தனை பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும்.



கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றுக்கும் அடிப்படை நீர்தான். நீர் பரவியிருக்கும் பரப்புக்கேற்ப வெவ்வேறு பெயர்கள். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகும். கருவறையிலேயே நீர் ஏறும்; இறங்கும். இந்தத் தல அம்பாள் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.



பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

பூரட்டாதி 4-ம் பாதம்: பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கினால் பலன் உண்டு.

உத்திரட்டாதி: மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கினால் நன்மை உண்டாகும்.

ரேவதி:
கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயரை வணங்குதல் நலம்.





சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!

ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா


சிங்க முகமும், பயங்கர உருவமும், அபய கரமும், கருணையும் கூடிய, எங்கும் நிறைந்திருக்கும் பெருமானே..! இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா..! வரங்களைத் அள்ளித் தந்தருளும்!

மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான்.
அதேபோன்று, மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் மிகவும் புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் நாமாக்களே பஞ்ச நாமாக்கள்.

நரசிம்மர் என்றவுடன், சட்டென்று அஹோபிலம்தான் பலரின் ஞாபகத்துக்கு வரும். அங்கு ‘நவ நரசிம்மர்’ கோயில்கள் உள்ளன. ஹைதராபாத்துக்கு அருகில் யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி போன்ற தலங்களும், சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா ஆகிய ஆந்திர மாநிலத்தின் இன்னும்பிற தலங்களும், கர்நாடகத்தில் சென்னபட்னா, தமிழகத்தில் சோளங்கிபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், சிங்கப்பெருமாள்கோவில், பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரி, காட்டழகிய சிங்கர்கோவில், நரசிங்கபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழம்பட்டு (சிங்கிரி கோயில்) ஆகிய திருத்தலங்களிலும் புகழ்பெற்ற நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.


இவற்றில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் அதிகம் பிரபலமாகாத, ஆனால் பக்தர்கள் தரிசித்துச் சிலிர்க்கும் ஓர் உன்னதத் திருத்தலம். நரசிம்மர் பெயரையே தாங்கி நிற்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.

ஐந்து நிலை, 7 கலசங்களோடு கூடிய அழகிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் கொடி மரம், பலிபீடம்; கடந்து உள்ளே சென்றால், முதலில் 16 நாகங்களைத் தன் உடலில் தரித்துக் கொண்டிருக்கும் கருடாழ்வாரை தரிசிக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள், சுமார் 4 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

அடுத்து, கோயில் முன் மண்டபத்தைக் கடந்து, கருவறையில்  நரசிம்மரைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் 12 ஆழ்வார்களும், சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் தரிசனம் தருகின்றனர். கோயிலை வலம் வரும்போது, மரகதவல்லித் தாயாரையும், ஆண்டாளையும் தரிசிக்கலாம். இக்கோயிலில் அழகிய கல்யாண மண்டபம் ஒன்றும் உள்ளது.

கருவறை விமானம் உயர்ந்த நிலையில், திருமாலின் பல அரிய சுதைச் சிற்பங்களோடு அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் அருளும் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் கம்பீரக் கோலம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார்.

சாதாரணமாக, லக்ஷ்மி நரசிம்மர் கோயில் களில், லக்ஷ்மி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந் திருப்பார். ஆனால், இங்கே லக்ஷ்மி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். ஆகையால், நரசிம்மரைத் தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். இவர் கல்யாண லக்ஷ்மி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்வாதி நட்சத்திரம் வருகின்ற நாட்களில், மாலைப் பொழுதில் (ஒன்பது நாட்கள், ஒன்பது முறை) இவரைத் தரிசித்தால், சத்ரு பயம், தீராக்கடன், திருமணத்தடை போன்ற பிரச்னைகள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.



கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் பகல் 11.30 வரை; மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை.

அருகில் தரிசிக்கக்கூடிய கோயில்கள்:

திருமாதலம்பாக்கம்    -    ஸ்ரீதிருமாலீஸ்வரர்;

தக்கோலம்     -    தேவாரத் தலம் (7 கோயில்கள்)

பேரம்பாக்கம்     -     ஸ்ரீசோழிஸ்வரர்; நரம்பு    சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும்.

இலம்பயங்கோட்டூர்     -     ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீரம்பேஸ்வரர்; தேவாரத் தலம்

கூவம் (திருவிற்கோலம்) -     ஸ்ரீதிரிபுராந்தகேஸ்வரர்; தேவாரத் தலம்

மப்பேடு    -     ஸ்ரீசிங்கீஸ்வரர்.

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?




சனி பகவான் மகரம், கும்பம் என்று இரண்டு லக்னங்களுக்கு அதிபதியாக வருகிறார். அதிலும் இந்த மகர லக்னத்தில் பிறந்த நீங்கள் எல்லாவற்றிலுமே திறமைமிக்கவர்களாக இருக்க விரும்புவீர்கள். சனி என்றாலே மந்தன் என்பார்கள். ஆனால் நீங்களோ, அதீத வேகத்தில் இயங்குவீர்கள். புகழேணியின் உச்சியில் ஏறிவிட ஆசைப்படுவதோடு மட்டுமின்றி, பிரபலங்களின் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். உங்கள் தந்தையார் செலவாளியாகவும், ஊர் நலன் விரும்பியாகவும் இருப்பார். உங்களின் லக்னாதிபதியான சனியே வாக்கு ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால், யாரையும் பேச்சால் சாய்த்து விடுவீர்கள். எங்கு இனிமையாகப் பேச வேண்டும்; எங்கு பொடி வைக்க வேண்டும்; எப்போது யாரிடம் பேசக் கூடாது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பேச்சில் கூட காரம், புளிப்பு, இனிப்பு என்று சரிவிகிதமாகக் கலந்து பரிமாறுவீர்கள். வாழ்க்கைத்துணையை அதிகமாக நேசிப்பீர்கள். என்ன வேண்டுமென்பதை முன்னரே தீர்மானித்து செய்து கொடுப்பீர்கள். மனசாட்சி கூறுவதை மறைக்காமல் வெளிப்படுத்துவீர்கள். சூழ்நிலை சரியில்லாமல் இருந்தாலும் கூட, ‘‘எனக்கென்னவோ இதுதான் சரின்னு தோணுது’’ என்பீர்கள்.

எப்போதும் கையில் பணம் புரண்டுகொண்டே இருக்கும். கோடீஸ்வரர் ஆவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பணம் இருக்கிறதோ இல்லையோ, மெகா பட்ஜெட் போடுவீர்கள். வாசனைத் திரவியங்களை அதிகமாக சேர்த்து வைத்துக் கொள்வீர்கள். எப்போதும் மலர்ச்சியாகத் தோற்றமளிக்கவே விரும்புவீர்கள். வியாபார சிந்தனை அதிகம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பீர்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை சரியாகக் கணித்து வைத்திருப்பீர்கள். நம்பியவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். அறிஞர்களின் நட்பை விரும்புவீர்கள். பெரும்பாலானோர் உங்களின் பரம்பரைத் தொழிலில் ஈடுபடுவீர்கள். விஷய ஞானம் அதிகம் இருப்பவர்களிடம் பேசி, நிறைய கிரகித்துக் கொள்வீர்கள். எல்லோரையும் அரவணைத்துப் போவீர்கள். ‘‘உங்களால்தான் எல்லாம் சாத்தியமாயிற்று’’ என்று எல்லோரையும் சொல்லவும் வைத்து விடுவீர்கள். பொதுநலனுக்காக குரல் கொடுப்பீர்கள். நலிவுற்ற கலைஞர்களை அடையாளம் கண்டு உதவுவீர்கள். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைவீர்கள். பிறந்த ஊர், வளர்ந்த ஊர், படித்த ஊர் என்று அவ்வப்போது பழைய நினைவுகளோடு ஊருக்குச் செல்வீர்கள்.
உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கிய கிரகங்களாக புதன், சுக்கிரன், சனி மூவரும் வருகின்றனர். இந்த மூன்று கிரகங்களும் உங்களின் சொந்த ஜாதகத்தில் எங்கிருந்தாலும் நன்மையையே செய்வார்கள். மகர லக்னத்தில் பிறந்து, சுக்கிரன் மற்றும் புதனின் ஆட்சி பெற்ற துறைகளான கலைத்துறையில் ஈடுபாட்டோடு இருந்தீர்கள் என்றால் சக்கைப் போடு போடுவீர்கள். சுக்கிரனும் புதனும் முதலாவதாக உதவுவார்கள். அதற்குப் பிறகு சனி உதவுவார்.

உங்களின் பிரபல யோகாதிபதியாக சுக்கிரன் வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் ரிஷபச் சுக்கிரன் வருகிறார். பிள்ளைகளுக்காகவே வாழ்வீர்கள். இருப்பதிலேயே மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைப்பீர்கள். அடுத்த தலைமுறைக்கென்று பல விஷயங்களை திட்டமிட்டு செய்வீர்கள். பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயது வரை அலுவலக வேலைக்குச் சென்று, பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறைய பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும் புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள். எப்படியேனும் கலைத்துறை அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கெடாமலோ, அல்லது பலவீனமாக இல்லாமலோ இருந்தாலே போதும்... எல்லா வளங்களையும் கைமேல் கனியாகக் கொண்டு வந்து தருவார். சுக்கிரனோடு புதனும் சேர்ந்தால், மாபெரும் ராஜயோகம் உண்டு. இதைத்தான் ‘மாலுடன் வள்ளி சேரின் மதிமிகப் பெருகுந்தானே’ என்றார்கள். புத்தி சாதுர்யம் பிரமிக்கத்தக்க வகையில் அமையும்.

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படியிருந்தாலும் சரிதான்... நடைமுறை வாழ்க்கையில் சுக்கிரனை பலப்படுத்துங்கள். காதல் திருமணம் செய்தவர்களுக்கும், ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கும் உதவுங்கள். முருங்கைக்காய், பரங்கிக்காய், நூல்கோல், சமோசா, செர்ரி பழம், மாதுளை போன்றவற்றை அவ்வப்போது ருசி பாருங்கள். எப்போதும் சுக்கிரனின் அருள் வேண்டுமெனில், வெள்ளி ஆபரணங்களை அணியுங்கள். உங்களுக்கு எந்தத் தசை நடந்தாலும் அதில் சுக்கிர புக்தி, அந்தரம் இருக்கும் நேரங்கள், பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்கள், 6, 15, 24 தேதிகளில் எல்லா நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.


உங்களின் ஆறாம் அதிபதி மற்றும் பாக்யாதிபதியான புதன் நல்லவற்றையே செய்வார். அவமானங்களைத் தாங்கிக் கொண்டு வளர்வீர்கள். எதிரியின் தூண்டுதலால்தான் நீங்கள் முன்னேறுவீர்கள் என்றும் சொல்லலாம். தாய்மாமன் மற்றும் தாய் வழிச் சொந்தங்கள் ஏதேனும் தொந்தரவு கொடுத்துவிட்டு விலகுவார்கள். நரம்பு தொடர்பான தொந்தரவுகள், வயிறு பிரச்னைகள், மூட்டு வலி, வலது உள்ளங்காலில் வலி வந்து நீங்கும். புதன் செவ்வாயோடு சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ, அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ கொஞ்சம் அவஸ்தைகள் இருக்கும். எத்தனை தடவை முயற்சித்தாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். இந்த புதன் கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தாலோ, ஏழு அல்லது பத்தில் அமர்ந்திருந்தாலோ, திருமண வாழ்வு நிம்மதியில்லாமல் இருக்கும். ஆனாலும், இவையெல்லாவற்றையும் தாண்டி புதன் உதவ முயற்சிப்பார். புதன் 4, 7ம் இடத்தில் அமர்ந்திருந்தால் சிரமப்படுவீர்கள். ‘தாயா... தாரமா...’ என்கிற போராட்டம் இருக்கும். குருவின் பார்வை அல்லது சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது. இது எதுவுமே வாய்ப்பில்லை எனில், குருவை சனி பார்த்துவிட்டால் போதுமானது. குருவால் வரும் பாதக பலன்கள் குறையும்.

மேலும், ஒன்பதாம் இடம் எனும் பாக்கியஸ்தானத்திற்கும் புதனே அதிபதியாக வருவதால், தந்தைவழியில் சொத்துகள் கிடைக்கும்; தந்தையால் மிகுந்த நன்மைகள் உண்டு. அவர் பார்த்த வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு அமையும். நில புலன்களோடு புதன் வாழ வைப்பார். சொந்த ஜாதகத்தில் புதன் நன்றாக இருப்பின், தந்தையாருடனான நட்பு நன்றாக இருக்கும். அவரின் வழிகாட்டுதல் எப்போதும் உண்டு. வற்றாத செல்வத்தை இந்த பாக்கிய ஸ்தானம்தான் தீர்மானிக்கிறது. சேமிப்புகளைக் கூட இந்த இடம் பேசுவதால் வங்கிக் கணக்குகளில் பணம் நிரம்பி வழியும்.
உங்கள் ஜாதகத்தில் புதன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை... அவரை பலப்படுத்த நடைமுறை வாழ்வில் சிலவற்றை மேற்கொள்ளுங்கள். உணவில் பச்சைப் பயறு, சௌசௌ, சுண்டைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி, முந்திரி சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கும், தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கும், மனநலம் குன்றியவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் இயன்ற அளவு உதவுங்கள். புதன் தசை, புதன் புக்தி, புதன் அந்தரம் போன்ற நேரங்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்கள், 5, 14, 23 போன்ற தேதிகளில் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

சனி பகவான் உங்களின் லக்னாதிபதியாகவும், இரண்டாம் இடமான தனாதிபதியாகவும் வருகிறார். இதனால் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், திடீரென்று கையில் காசே இல்லாதது போன்றிருக்கும். இப்படி ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கஷ்டத்தோடு வருகிறவர்களுக்கு தூக்கிக் கொடுத்து விடுவீர்கள். வாக்கு ஸ்தானாதிபதியாக சனி வருவதால், நறுக்குத் தெறித்தது போலப் பேசுவீர்கள். குழந்தைகளை அனுபவசாலியாக வளர்க்க ஆசைப்படுவீர்கள். பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும்விதமாக பிள்ளைகளை வளர்ப்பீர்கள். தெரிந்ததை சொல்லிக் கொடுத்து விடுவீர்கள். பிறகு ‘உலகம் உனக்கு போதிக்கும்’ என்று விட்டு விடுவீர்கள். சனி பகவான் எளிதில் கைமேல் கொண்டு வந்து வெற்றியை கொடுக்க மாட்டார். சுக்குபோல காய வைத்துத்தான் வெற்றி பெறச் செய்வார்.

உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான்... அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்கள், 8, 17, 26 தேதிகள், சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தரும். உங்கள் ஜாதகத்தில் சனியை பலப்படுத்த சில காரியங்கள் செய்யலாம். முதியோருக்கும், விபத்தில் காலை இழந்தவர்களுக்கும் உதவுங்கள். தந்தையிழந்த பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருந்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். நிறைய பயணங்கள் செய்யுங்கள். முடிந்தபோதெல்லாம் கடலுக்கருகே சென்று தனிமையில் அமர்ந்து கொள்ளுங்கள். அருநெல்லிக்காய், கத்தரிக்காய், தக்காளி, எள்ளுருண்டை, நல்லெண்ணெய், மாங்காய், கத்தரிக்காய், அத்திக்காய், கருணைக் கிழங்கு, பூசணிக்காய், சேப்பங் கிழங்கு, கறுப்பு திராட்சை, பாதாம் பருப்பு உணவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

மூன்று கிரகங்களின் முத்தான நன்மைகள் காலத்தே கிடைத்திட, மேலே சொன்ன நடைமுறை பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தாண்டி இந்த கிரகங்களை இயக்கும் சக்தியான இறைவனை நாடிச் செல்லுங்கள். அப்படிப்பட்ட ஓர் தலமே திருநின்றவூர். தாயாரின் பூரண அனுக்கிரகமும், பெருமாளின் பொங்கும் அருளும் நிறைந்த தலம் இது. இத்தலத்தில் கருணையே சொரூபமாக தாயார் அருளுவதால், என்னைப் பெற்ற தாயே என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். சுதாவல்லி என்கிற திருநாமமும் உண்டு. இறைவன் பக்தவத்சல பெருமாள் என்கிற திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் திருவள்ளூருக்கு அருகேயுள்ளது. சென்னையிலிருந்து சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதி உண்டு. 
(தீர்வுகளைத் தேடுவோம்...)

மாற்றம் தரும் மந்திரம்

மகர லக்னத்தில் பிறந்தவர்கள், திருமங்கையாழ்வார் திருநின்றவூர் குறித்துப் பாடிய இந்தப் பாசுரத்தை தினமும் சொல்லி வாழ்வில் வளம் பெறுங்கள்:
ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன்













மகர ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்!

பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் அங்குலம் அங்குலமாக அடிபட்டு வெற்றிகளை சந்தித்ததால் பணம், பட்டம், பதவி வந்தாலும் பகட்டுத்தனமாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல் அதை ஒரு வேள்வியாக எடுத்து நடத்துவீர்கள். சண்டையிட்டுக் கொள்ளும் பெரிய தலைவர்களுக்கிடையே சமயோசிதமாகப் பேசி சமாதானப் பட்டத்தை பறக்க விடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவரை முன்னுக்கு கொண்டு வருவதில் அதிக மும்முரம் காட்டுவீர்கள். அதுவே எதிர்காலத்தில் உங்களுக்கு தர்மசங்கடமாகவும் மாறும்.

உங்களின் கடன், நோய், எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக மிதுன புதன் வருகிறார். உங்கள் ராசிநாதனான சனிக்கு புதன் நண்பராவார். அதனால் புதன் உங்களுக்கு அவ்வளாக கெடுதல் செய்ய மாட்டார். எதிரிக்குரிய புதன் உங்களின் ஒன்பதாம் இடமான பாக்யாதிபதியாகவும் வருகிறார். அதனால், எதிரி உருவான உடனேதான் வாழ்க்கையே சீரியஸாகும். உங்களிடமிருந்து சக்தி வெளிப்பட வேண்டுமெனில் எதிரி உருவாக வேண்டும். கிட்டத்தட்ட எதிரிதான் உங்களின் உந்து சக்தியாக இருப்பார். நாலு பேர் விமர்சனம் செய்தால்தான் முன்னேறவே ஆசை வரும். மேலும், தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் இடத்திற்கும் புதன் வருவதால் தந்தையை விட்டு அவ்வப்போது பிரிந்து வாழும் சூழ்நிலை வரும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தந்தையைப் பிரிய வேண்டிய சூழல் தொடங்கும். அப்பாவுக்கும் உங்களுக்கும் அதீதமான பாசமெல்லாம் இருக்கும். அதேசமயம் கருத்து மோதல்களும் வந்துபோகும். அப்பாவாக இருந்தாலும் சரி, அண்ணனாக இருந்தாலும் சரிதான்... உங்களை தாழ்த்திப் பேசினால் பிடிக்காது. இதனால் இந்த ராசியில் பிறந்த பிள்ளைகளின் பெற்றோர், பள்ளிப் பருவத்தில் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசாமல் இருத்தல் நல்லது. அது ஆழமான வடுக்களை உண்டாக்கி விடும்.

வித்தைகாரகனான புதன் ஆறாம் இடத்தின் அதிபதியாக வருவதால் விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க முடியாமல் போகும். அதேபோல கல்லூரியிலேயே யு.ஜி., பி.ஜி. போன்றவற்றிலேயே சப்ஜெக்ட் மாறிப் படிப்பீர்கள். தாய்மாமனுக்குரிய கிரகமாகவும் புதன் வருவதால் தாய்மாமன் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவார். அவர் நண்பனா, எதிரியா, உதவுபவரா என்றே தெரியாது. ஆனாலும், தாய்மாமனிடம் நீங்கள் அன்பு காட்டுவீர்கள். என்ன படித்தாலும் சரிதான் 35 வயது வரை அடுத்தவர்களுக்காக உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். பிறகுதான் உங்களுக்கானதை நீங்கள் பெறுவீர்கள். பல இடங்களில் சொல்லக் கூடாததை சொல்லி மாட்டிக் கொள்வீர்கள். எதைச் சொல்ல வேண்டுமோ அதை மறந்து விடுவீர்கள். பள்ளியில் படிக்கும்போது காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டு அரசுத் தேர்வுகளில் கோட்டை விடுவீர்கள். 

போராட்டமெனில் புறமுது கிட்டு ஓட மாட்டீர்கள். பலரின் நலனுக்காக குரல் கொடுக்கும் குணம் இயற்கையாகவே இருக்கும். சில நேரங்களில் அதட்டலாகவும், அலட்டலாகவும் பேசுவீர்கள். உங்களின் ஆறாம் இடம் எனும் கடன், நோய், எதிரிகள் மற்றும் இன்ன பிற விஷயங்களை நிர்ணயிப்பவராக மிதுன புதன் வருகிறார். புதன் புத்திக்குரியவராக இருப்பதால் எல்லா விஷயத்தையும் நீங்களே தீர்மானிப்பவராக இருப்பீர்கள். இதனால் கொஞ்சம் அறிவுச் செருக்கு ஏற்படும். அதைக் கொஞ்சம் அடக்கி வைத்தால் இன்னும் நன்கு முன்னேறலாம். ‘‘அவரை நாலு வார்த்தை பாராட்டிட்டா போதும். மயங்கிடுவாரு’’ என்று எளிதாக உங்களை வளைப்பார்கள். ‘உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று யாராவது சொன்னால் நீங்கள் கொதித்தெழுவீர்கள். எந்த உதவியாக இருந்தாலும், கேட்டதை அழகாக செய்து கொடுப்பீர்கள். இதனாலேயே உங்களை பல பேர் சுற்றிச் சுற்றி வருவார்கள். அதில் நல்லோர் யார், தீயோர் யார் என்று பிரித்தறிந்து விலக்க வேண்டும். ஏனெனில், மிகவும் எமோஷனலாக நீங்கள் உங்களை வெளிப்படுத்துவதால் மறைமுகமாக எதிரிகள் உருவாகிய வண்ணம் இருப்பார்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவரை நீங்கள் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள்.
புதன் கையெழுத்துக்குரிய கிரகமாகும். அதாவது சுயகுறியீட்டிற்குரிய கிரகமாக இதைச் சொல்வார்கள். அதனால் யோசிக்காமல் ஜாமீன், கேரண்டர் கையெழுத்தைப் போடாதீர்கள். குறுகிய கால கடன்களுக்கு மட்டும் கேரண்டர் கையெழுத்து போடுங்கள். உதவி செய்ய வேண்டுமென்கிற கட்டாயம் வந்தால் சனிக் கிழமை, புதன் கிழமைகளில் தவிர்த்து விடுங்கள். அல்லது புதன், சனி ஆளும் நட்சத்திரங்கள் உள்ள நாட்களாக வந்தால் தள்ளிப் போடுங்கள். அதேபோல நீங்கள் பிறந்த நட்சத்திரமாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் கடன் வாங்கியவர் கட்டாது போய், உங்களை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்.

உணவு சார்ந்த விஷயங்களில் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், புதன் சட்டென்று வயிற்றை பதம் பார்ப்பார். எந்த ஊரில் என்ன கிடைக்கும்? எது மிகவும் ருசியான பண்டம்? என்கிற விஷயமெல்லாம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் அத்தனை விரிவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதெல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மிகப்பெரிய முடிவையெல்லாம் கோபத்தில் எடுத்து விடக் கூடாது. புதன் சட்டென்று யோசித்து செயல்படும் வேகமான கிரகமாதலால், கோபத்தின்போது தான் விவேகமாக இருக்க வேண்டும். ஏதேனும் மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கண்களுக்குத் தொந்தரவாக மாறும்.

மிக முக்கியமாக நிலம், வீடு என்று வாங்கும்போது எச்சரிக்கை தேவை. ஏனெனில், பூமிகாரகனான செவ்வாய்க்கும் உங்களின் ஆறாம் அதிபதியான புதனுக்கும் பகை உண்டு. அதனாலேயே இந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் ஒரு சொத்தை வாங்கி, கடனைக் கட்ட முடியாமல் விற்று, மீண்டும் மறுசொத்து வாங்கும்படியான நிலைமை வரும். தங்கத்தை வைத்து பணத்தை கடனாகப் பெற்றால் கடனை சீக்கிரம் அடைப்பீர்கள். சொத்துகளும் விருத்தியாகும். காசோலைகளில் கையெழுத்தை முன்னதாக போட்டு வைத்துக் கொண்டிருக்காதீர்கள். நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் வாங்கிக் கொடுத்து விட்டு சிக்காதீர்கள்.

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்குரியவராக புதன் வருவதால், ‘தான் சொல்வதுதான் சரி’ என்று இருக்காதீர்கள். அடுத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் வளர முடியும்; அடுத்தவர்களையும் வளர்க்க முடியும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்துப் போகமுடியவில்லையெனில் வீண்பழியை சுமத்தி ஓரம் கட்டுவார்கள். எல்லா விஷயத்திற்கும் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்காதீர்கள். புதன் எத்தனை அறிவாளியாக இருந்தாலும், வார்த்தைகளில் கடினமாகப் பேசி அடுத்தவர்களை காயப்படுத்துவார். ‘‘இப்படி பேசலைன்னா சரியா வரமாட்டாங்க’’ என்றும் சொல்ல வைப்பார். மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்; அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள். ஏனெனில், புதன் தன்னுடைய கண்காணிப்பிலேயே எல்லாமும் நடக்க வேண்டும் என்பார். இது உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு குடைச்சலை உண்டாக்கும்.

நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்களே நாளைய எதிரிகளாவர். தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைக்கும்போது எச்சரிக்கையோடு இருங்கள். இல்லையெனில் ஏமாற வேண்டியிருக்கும். ஆரம்ப காலங்களில் எங்கேனும் வேலை பார்த்துக் கொண்டே வியாபாரமும் செய்வீர்கள். பிறகு மாபெரும் நிறுவனங்களையே நடத்துவீர்கள். நீங்கள் கிங்மேக்கராக மாறுவீர்கள். முத்திரைத்தாள் விஷயங்களில் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில், போலி முத்திரைத்தாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிரிகள் உங்களை ஈடுபடுத்துவார்கள். நீங்கள் ஆணாக இருந்தால் பெண் குரல், பெண் சாயலோடு இருக்கும் ஆண்களிடம் எச்சரிக்கையோடும், பெண்ணாக இருந்தால் ஆணின் குரல் மற்றும் சாயலோடு இருக்கும் பெண்களிடம் ஜாக்கிரதையாக நட்பு பாராட்டுங்கள். குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வருமான வரி போன்றவற்றிலெல்லாம் கவனமாக இருங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களிடமிருந்து ஒரு வார்த்தை வந்துவிட்டால் அது அப்படியே இருக்கட்டும். சரியோ தவறோ மாற்றிச் சொல்லிவிட்டோமோ என்று புதன் குழப்பியபடி இருப்பார். ‘சொன்னது சொன்னதுதான்’ என்று உறுதியாக நில்லுங்கள்.

உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். எனவே, உங்களுக்கு ஆறாம் இடமாக புதன் வருவதால், எதிராளியின் பலம் தெரியாது வாதப் பிரதிவாதங்கள் வேண்டாம். புதன் மறைந்திருப்பதால் எங்கு என்ன பேசினாலும் மெதுவாக இடைவெளி விட்டுப் பேசுங்கள். புதனிடமிருந்து காத்துக் கொள்ளுங்கள். ஆழ்மனதில் அடங்கியிருக்கும் அளப்பரிய ஆற்றலை வீர்யப்படுத்தி வெளிப்படுத்தும் இடமும் ஆறாம் இடமே ஆகும். எனவே, மணற்கேணி ஊற்றுபோல விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் பரீட்சார்த்தமாக செய்து கொண்டே இருங்கள். பத்தில் ஐந்து விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். யாரும் தொடாத விஷயங்களைத் தொட்டு சாதனை செய்வீர்கள்.

இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம். அந்த இடத்திற்கு புதன் அதிபதியாவதால் எவரும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை நீங்கள் கவனித்து கண்டுபிடிப்பீர்கள். ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும் ஆறாமிடம் அமைவதால் தொடர்ந்து போராடுங்கள். நெருக்கடியான நேரங்களில், பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து முடிவுகளை எடுங்கள். தீர்க்க முடியாத பிரச்னையாக நீங்கள் ஒன்றை நினைத்தீர்கள் என்றால், ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள். உங்களின் பிரச்னை தீர்வதை ஆச்சரியமாகப் பார்ப்பீர்கள். நீங்கள் அதிகம் குழம்பினால் அந்த விஷயத்தில் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குழப்பத்தைக் கண்டு பயப்படாதீர்கள்.

உங்களுக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். ஆனால், தொலைதூரப் பயணமெனில் நீங்கள் வண்டியை ஓட்டாமல் இருப்பது நல்லது. ஏனெனில், பல வகையான சிந்தனைகள் வந்து மோதியபடி இருக்கும். இதனால் கவனம் சிதறும். பழைய வாகனங்களை வாங்காதீர்கள். செகண்ட் ஹேண்ட் வண்டியை வாங்கும்போது விபத்துகள் ஏற்படும்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ புதன் மறைந்தால் நல்லது. இதனால் புதனால் ஏற்படக்கூடுமான மேலே கண்ட பிரச்னைகள் அனைத்தையும் தவிர்க்கலாம். சொந்த ஜாதகத்தில் புதனும் குருவும் சேர்ந்திருந்தால், தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருக்கும். யாரும் யாருக்கும் எதிர்பார்த்தபடி இருக்க மாட்டார்கள். பொதுக்காரியங்களில் சட்டென்று ஈடுபடாமல் மறைமுக உதவிகளைச் செய்ய வேண்டும். இதே புதன் சூரியனோடு சேர்ந்திருந்தால் மிகவும் நல்லது. ஆனால், சந்திரனோடு சேர்ந்திருந்தால் அம்மாவின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.

உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரிதான், அல்லது வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ள நினைத்தாலும், நீங்கள் செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயமாகும். பொதுவாகவே சனி ஆதிக்கமுள்ளவர்கள் பெருமாளை வணங்குவது நல்லது. அதிலும் சனிக்கு நட்பு கிரகமான புதன் உங்களுக்கு பகையாக வருவதால், மகாக்ஷேத்ரமான காஞ்சியில் அருள்பாலிக்கும் வரதராஜரை வணங்குங்கள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தை ஆழ்வார்கள் பலர் பாடி பரவியுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு சென்னை மற்றும் எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
(தீர்வுகளைத் தேடுவோம்...)



மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்!