வெள்ளி, 15 ஜூலை, 2016

பண்டிகை சமையல்!


நெய் அப்பம்
தேவையானவை: பச்சரிசி, பொடித்த வெல்லம்  – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வாழைப்பழம் – ஒன்று (மசித்துக்கொள்ளவும்), கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், தேங்காய் எண்ணெய் – தலா அரை கப்.
செய்முறை: பச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, விழுதாக அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்கவும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன் றாக சேர்க்கவும். இந்தக் கலவையை பணியார சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்).

மசாலா பொரி
தேவையானவை: அரிசிப் பொரி – 2 கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கருவடகம் – 2 டீஸ்பூன், பூண்டு – 4 பல்  (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகு – 4, தனியா, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் , தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு – சிறிதளவு.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் கருவடகம் சேர்த்து, சிவந்ததும் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து, ஒரு முறை கிளறி, அரிசிப் பொரி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து  நன்றாகக் கலக்கி இறக்கவும்
கருவடகம் செய்முறை: உளுத்தம்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு எடுத்து ஊறவைத்து வடித்து, 3 பங்கு சாம்பார் வெங்காய விழுது, உப்பு சேர்த்து அரைத்து, மாவைக் கிள்ளி எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு, வெயிலில் வைத்து காயவைத்து எடுக்கவும்.

டிரெயின் இட்லி
தேவையானவை: இட்லி – 5, இட்லி மிளகாய்ப்பொடி – 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: இட்லி செய்த உடன் நன்றாக ஆறவிடவும். இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கவும். இதில் இட்லியைப் போட்டு புரட்டி எடுக்கவும் (இட்லி மிளகாய்ப்பொடி இட்லி முழு வதும் படும்படி புரட்ட வேண்டும்). மிளகாய்ப்பொடியில் ஊறிய இட்லி, சுவையில் அள்ளும். சாப்பிடும் இடமே மணக்கும்.
இட்லி மிளகாய்ப்பொடி செய்முறை: கடலைப்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), கட்டிப் பெருங்காயம் – சிறிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய், கல்  உப்பு – தேவைக்கேற்ப, புளி – சிறிதளவு, வெள்ளை எள் (விருப்பப்பட்டால்) – 2 டீஸ்பூன். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கொடுக்கப்பட்டுள்ள வற்றை ஒவ்வொன்றாக சிவக்க வறுத்து ஆறவிடவும். பிறகு, கொரகொரப்பாக பொடிக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கலாம்.

இஞ்சி – எலுமிச்சை சிரப்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சிச் சாறு – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப்.
செய்முறை: சர்க்கரையுடன், அது முழுகும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். ஆறியதும் அதில் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். எலுமிச்சை பழ சர்பத் தேவைப்படும்போது ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் ஒன்று (அ) 2 ஸ்பூன் சிரப்பை விட்டுக் கலந்து பருகவும்.

உப்பு நெல்லிக்காய்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, கல் உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 2 கப்.
செய்முறை: நெல்லிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து, கல் உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். அதில் முழு நெல்லிக்காயை போடவும். இதை பயணத்தின் போது காற்றுப்புகாத கன்டெய்னரில் எடுத்துச் செல்லவும்.  தயாரித்து, 5,6 நாட்களுக்குப் பிறகு  உபயோகித்தால்தான் நெல்லிக்காயில் உப்பு ஏறியிருக்கும். தேவைப்படும்போது உப்பு தண்ணீரிலிருந்து நெல்லிக்காயை எடுத்து  சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள லாம்.
விட்டமின்-சி  நிறைந்த சத்தான ரெசிப்பி இது.

இஞ்சி, எலுமிச்சை மிக்ஸ்
தேவையானவை: இளசான இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன் (தோல் சீவி பொடியாக நறுக்கியது), சீரகம் – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு கிண்ணத் தில் இஞ்சி, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும். இதனை 4 – 5 நாட்கள் வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து, சேமித்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: பயணத்தின்போது ஏற்படும் வயிற்றுப் பொருமல், அஜீரணம் ஆகியவற்றுக்கு இதனை சிறிது எடுத்து சாப்பிட லாம். நல்ல நிவாரணம் கிடைக் கும்.

அவல் ஃப்ரை
தேவையானவை: மெல்லிய அவல் – ஒரு கப், பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து… பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் அவலையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவல் மொறுமொறு என வரும் வரை வறுத்து எடுக்கவும். (தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணெய் சேர்க்கலாம்). ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்து பயன்படுத்தவும்.

தக்காளி தொக்கு
தேவையானவை: பழுத்த  தக்காளி – 10, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்  மஞ்சள்தூள், கடுகு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: நீரை சூடாக்கி, தக்காளியைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் தோலை எடுத்துவிட்டு, விழுதாக அரைக்கவும். அடி கனமான கடாயில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த தக்காளி விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில்வைத்து, மூடி போட்டு, அவ்வப்போது திறந்து, அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். தக்காளி கலவை நன்றாக சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும் (விருப்பப்பட்டால் கடைசியில் மிகவும் சிறிதளவு சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்துக்  கிளறி இறக்கலாம்).
குறிப்பு: இதை சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளலாம். உப்பு குறைந்தால், தொக்கு சீக்கிரம் கெட்டுவிடும். தேவையான அளவு உப்பு போடவும்.

உளுந்து தட்டை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி – இரண்டரை கப், பச்சரிசி – ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), உளுந்துப்பொடி (சலித்தது) – அரை கப், வெள்ளை எள் – அரை டீஸ்பூன், ஊறவைத்த கடலைப்பருப்பு  – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். உளுந்துப் பொடியை, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கலந்து… எள், ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் (அ) வாழை இலையில் மெல்லிய தட்டைகளாக தட்டி, உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சத்துமாவு உருண்டை
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், கேழ்வரகு மாவு –  அரை கப், பாதாம் – 4, முந்திரி – 10, பொட்டுக்கடலை – அரை கப், நெய், பொடித்த சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். கேழ்வரகு மாவையும் வெறும் கடாயில் வறுக்கவும். பொட்டுக் கடலையை கடாயில் சிறிது சூடாகும் வரை வறுத்து, மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். பாதாம், முந்திரியை உடைத்து நெய்யில் வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை சூடாக்கி இதில் நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டவும்.
பயணத்தின்போது களைப்பை நீக்கி, சக்தி கொடுக்கும் சத்தான ரெசிப்பி இது. பொடித்த சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரையும் பயன் படுத்தலாம்.

ராகி தட்டை
தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், பொடியாக  நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
விழுதாக அரைக்க: சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது), காய்ந்த மிளகாய் – 4, தனியா – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். ஆறியதும் இதை கேழ்வரகு மாவில் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் லேசான தட்டைகளாக தட்டி (கையில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்), உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

மொறுமொறு மிக்ஸர்
தேவையானவை: கடலை மாவு – 3 கப், அரிசி மாவு – ஒரு கப், ஓமம் – 2 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை – ஒரு கப், கெட்டி அவல் கால் கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். மாவை பூந்தி கரண்டியில் விட்டு சூடான எண்ணெயில் முத்து முத்தாக விழும்படி தேய்த்து, பொன்னிறமாக எடுக்கவும். மீதமுள்ள 2 கப் கடலை மாவுடன் மீதமுள்ள அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஓமத்தை அரைத்து வடித்த தண்ணீர் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
அவல், வேர்க்கடலை, கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை பொரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை வறுத்து, உப்பு சேர்த்து பொடியாக்கிக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து… பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்து, ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

லெமன் ரைஸ்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன் (வறுக்கவும்), தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு,  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: சாதத்தை ஆறவைத்து, சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கரண்டியால் கிளறிவிடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கலக்கி வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து  சிவக்க வறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு – உப்பு – மஞ்சள்தூள் கலவையை சேர்த்துக் கிளறி, ஆறிய சாதம், வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து, அடுப்பை நிறுத்தவும்.
குறிப்பு: உபயோகிக்கும்போது கைபடாமல் கரண்டி, ஸ்பூன் பயன்படுத்தி உபயோகிக்கவும். இந்த லெமன் சாதம் உடலைக் குளுமைப்படுத்தும்; உடலுக்கு சக்தி கொடுக்கும்.

பட்டர் முறுக்கு
தேவையானவை: இட்லி புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு (சலித்தது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: இட்லி புழுங்கல் அரிசியைக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், எள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடாக்கவும். முள் முறுக்கு அச்சில் மாவை போட்டு, முறுக்குகளாக எண்ணெயில் பிழிந்து, பொன்நிறமாக சிவந்ததும் எடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

கம்பு லட்டு
தேவையானவை: கம்பு மாவு, பொடித்த சர்க்கரை – தலா ஒரு கப்,  முந்திரி – 10 (உடைத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கம்பு மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து, ஆறவைக்கவும். உடைத்த முந்திரியை நெய்யில் சிவக்க வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய்யை சூடாக்கி அதில் விட்டுக் கலந்து, உருண்டைகளாக உருட்டவும். கம்பு, உடலுக்கு குளுமை தரும்.

காக்ரா
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், ஓமம் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை, தண்ணீர் – தேவையான அளவு, நெய் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு, ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி, தண்ணீர் விட்டுப் பிசையவும். 20 நிமிடம் ஊறவிடவும். மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி. சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு, வெந்ததும், திருப்பி போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடி கனமான பாத்திரத்தால் சப்பாத்தியை அழுத்தியபடி, கரகரப்பாக ஆகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இது பிஸ்கட் போல இருக்கும்.
இதற்கு, ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம். காக்ரா செய்யும் மாவில் விருப்பத்துக்கு ஏற்றவாறு சீரகப் பொடி, ஆம்சூர் பவுடர், கஸூரி மேத்தி போன்றவற்றையும் கலந்து பிசையலாம்.

புல்கா
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – 2 சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவில் முதலில் உப்பு சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிசைந்த மாவின் மீது சில துளி எண்ணெய் தடவி நன்கு அடித்துப் பிசையவும். 3 மணிநேரம் ஊறவிடவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மேலே சிறிதளவு மாவு தூவி  சப்பாத்தியாக இடவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போடவும். அதன் மேல் சிறு கொப்புளங்கள் வரும்போது சட்டென்று திருப்பி போட்டு சில நொடிகள் வேகவிடவும். இதை ஒரு இடுக்கியில் எடுத்து நேரடியாக எரியும் தணலில் காட்டி, `புஸ்’ என்று உப்பி வந்ததும் எடுத்து, உலர்ந்த, மெல்லிய துணியில் போட்டு, தேவைப்பட்டால் நெய் தடவி மூடி, சேமித்து வைக்கவும்.

கோதுமை பரோட்டா
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசிறவும். இதனுடன்  தேவையான தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் அழுத்தி பிசையவும். பிறகு, மாவை மூடி வைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சப்பாத்திபோல் திரட்டி, அதன்மேல் அரிசி மாவு – நெய் கலவையை பரவலாக தடவி புடவை மடிப்புபோல முன் பின்னாக மடித்து அதனை வட்ட வடிவில் சுருட்டிக் கொள்ளவும். பிறகு,  இதனை பரோட்டாவாக இடவும். பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய் விட்டு, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
நெய்க்குப் பதில் எண்ணெயும் உபயோகிக்கலாம்.

காரக் குழம்பு ரைஸ்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் – ஒரு கப், ஏதாவது ஒரு வற்றல் (வெண்டை, பாகற்காய் அல்லது மணத்தக்காளி) – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுகிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் – தேவை யான அளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண் ணெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வற்றலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, பூண்டையும் வறுத்து எடுத்து வைக்கவும்.  கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து… புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பூண்டு,  சாம்பார் பொடி சேர்த்து…. வறுத்த வற்றலையும் போட்டு, பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு இறக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கலாம்). குழம்பு ஆறியதும் உதிரான சாதத்தில் கலந்துகொள்ளவும்.

ஸ்வீட் அண்ட் சோர் ஆப்பிள் ஜாம்
தேவையானவை: பழுத்த ஆப்பிள் (பெரியது) – ஒன்று, சர்க்கரை – கால் கிலோ, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி, நடு பாகத்தில் இருக்கும் விதையை நீக்கி சிறு துண்டுகளாக்கி, அளவாக தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வெந்த ஆப்பிளை நன்கு மசித்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து சுருள வரும்போது இறக்கி, அத்துடன் எலுமிச்சைச் சாறு கலந்து, ஆறிய பிறகு காற்றுப்புகாத கன்டெய்னரில் சேமித்து வைக்கவும்.
பயணத்தின்போது சப்பாத்தி, பிரெட், இட்லிக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

பாசிப்பருப்பு உருண்டை
தேவையானவை: பாசிப் பருப்பு – ஒரு கப், சர்க்கரை – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்து…மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். சர்க்கரையையும் நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் விட்டுக் கிளறி, உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பகாளாபாத்
தேவையானவை: அரிசி – ஒரு கப், தயிர் – கால் டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு, பால் – ஒன்றரை கப், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியைக் களைந்து, தேவையான தண்ணீர் விட்டு குழைவாக சாதம் செய்து, அதனை சூட்டுடன் கரண்டியால் மசிக்கவும். பிறகு, உப்பு சேர்த்து, கால் டீஸ்பூன் தயிர் விட்டு, பால் சேர்த்து கரண்டியால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி சாதத்தில் சேர்த்து, பயணத்தின்போது சாப்பிட எடுத்துச் செல்லலாம்.
விருப்பப்பட்டால் முந்திரி, உலர் திராட்சை சேர்க்கலாம்.

டூ இன் ஒன் வேர்க்கடலைப் பொடி
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை (தோலுரித்தது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), கட்டிப் பெருங்காயம் அல்லது பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தை வறுக்கவும். உப்பையும் வறுக்கவும். வேர்க்கடலையை கடாயில் சூடு செய்யவும். ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
இதை பயணத்தின்போது எடுத்துச் சென்றால் இட்லி, தோசைக்குத் தொட்டு கொள்ளலாம். இந்தப் பொடியில் நீர் விட்டுக் கலக்கி சட்னியாகவும் பயன்படுத்தலாம்.

மிஸ்ரி ரொட்டி
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு, 2 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
சப்பாத்தியில் ஒரு பக்கம் நெய் தடவி பயணத்துக்கு எடுத்துச் செல்லலாம். சாப்பிடும்போது உள்ளே ஜாம் அல்லது ஊறுகாய் தடவி ரோல் செய்து சாப்பிடலாம்.

கார சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மாங்காய் தொக்கு – சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவில் மாங்காய் தொக்கு சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, 15 நிமிடம் ஊறவிடவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சிறிதளவு  மாவு தூவி, லேசான சப்பாத்தியாக திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
இதை ஜாம் உடன் பரிமாறலாம். தயிரில் சர்க்கரை கலந்து இந்த சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். தயிரில் சிறிது ஜாம் சேர்த்து, மிளகாய்ப்பொடி தூவியும் தொட்டு சாப்பிடலாம்.

புளி சாதம்
தேவையானவை: உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப், கெட்டியான புளிக்கரைசல் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – கால் கப், கடுகு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி (பொடிக்கவும்), வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க: மல்லி (தனியா) – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 ( இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்).
செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு நன்கு வறுத்து, கடுகு சேர்த்து, பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து, சிவந்ததும் கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்துக் கிளறி, கெட்டியான புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது, விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும் (பொடி போட்டு ரொம்ப நேரம் கொதிக்க வேண்டாம்). உதிரான சாதத்தில் முதலில் புளிக்காய்ச்சலில் உள்ள நல்லெண்ணெயை சிறிது விட்டு கலந்து… பிறகு, புளிக்காய்ச்சல் விட்டு நன்றாகக் கலக்கவும். புளிசாதம் ஊற ஊற சுவை அதிகரிக்கும்.

எனர்ஜி லட்டு
தேவையானவை: பாதாம் – ஒரு கப், முந்திரி – ஒரு கப், பேரீச்சம்பழம் – கால் கப், உலர்ந்த திராட்சை – கால் கப், பால் பவுடர் – ஒரு கப், பொடித்த வெல்லம் – சிறிதளவு, நெய் – தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உலர் அத்திப்பழம் – ஒன்று.
செய்முறை: பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும். பேரீச்சையை விதை நீக்கி சிறிய துண்டுகளாக செய்துகொள்ளவும். உலர் அத்திப்பழத்தையும் சிறிதாக வெட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பாதாம், முந்திரி, பேரீச்சம்பழத் துண்டுகள், அத்திப்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் உலர்ந்த திராட்சை, பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லத்தை பொடியாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக்  கலக்கவும். அடுப்பில் நெய்யை சூடாக்கி செய்து வைத்த கலவையில் சிறிது சிறிதாக விட்டு, உருண்டைகளாக உருட்டி பயன்படுத்தவும்.

கோதுமை பிஸ்கட்
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – 4 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பொடித்த சர்க்கரையை கோதுமை மாவில் சேர்த்துக் கலக்கி… பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்கு பிசையவும். கையில் எண்ணெய் தொட்டு, மாவை எடுத்து, உருண்டைகளாக உருட்டி,  சப்பாத்தியாக திரட்டி, ஆங்காங்கே ஃபோர்க் கரண்டியால் குத்தவும். இதை கத்தியால் துண்டுகளாக வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

ஸ்டஃப்டு பாகற்காய்
தேவையானவை: பாகற்காய் (சிறிய  சைஸ்) – கால் கிலோ, பட்டை – சிறிய துண்டு, லவங் கம் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த் தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன்,  எண்ணெய் – ஒரு கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: பாகற்காயின் நடுவில் நீளமாக கீறி, விதை எடுத்து, அரை வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுத்து வைக்கவும் (கசப்பு நீங்க சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடலாம்). பட்டை, லவங்கத்தை தூளாக்கி, இஞ்சி – பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பாகற்காய்களில் ஸ்டஃப் செய்ய வும். கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, ஸ்டஃப் செய்த பாகற்காயை சேர்த்து மூடி போடவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). அவ்வப்போது மூடியைத் திறந்து, மசாலா வெளியே வராதபடி கிளறவும். நன் றாக ரோஸ்ட் ஆனதும். எடுக்கவும். இதை ஃபாயில் பேப்பரில் வைத்து சுருட்டி பயணத்தின்போது எடுத்துச் செல்லலாம்.
இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.

மேங்கோ அச்சார்
தேவையானவை: புளிப்பான மாங்காய் துண்டுகள் – ஒரு கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், சோம்பு – தேவைக்கேற்ப, உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் தேவையான மஞ்சள்தூள், உப்பு கலந்து வெயிலில் நன்றாக காயவைக்கவும். நன்கு சுண்டிய பிறகு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் நல்லெண்ணெயைக்  காயவைத்து, ஆறவைத்து அதனுடன் மாங்காய் கலவை, சோம்பு ஆகியவற்றை கலந்துவிடவும்.
இது ராஜஸ்தானி டிஷ். பயணங்களின்போது, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள உபயோகிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக