செவ்வாய், 26 ஜூலை, 2016

மங்களம் அருளும் கருட பஞ்சமி!

ஆடி மாதத்தில் வருகின்ற பல்வேறு விசேஷங்களில் கருட பஞ்சமியும் ஒன்று. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும் திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார்.

விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு.

கருடஆபரணங்கள்.......கருடனை, எட்டு வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அந்த எட்டு ஆபரணங்களும் எட்டு பாம்புகளை குறிக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பூணூல் - வாசுகி.
* இடது கையில் - ஆதிசேஷன்
* அரையில் அணி - தட்சகன்
* மாலை - கார்கோடகன்
* வலது காதில் - பத்மன்
* இடது காதில் - மகா பத்மன்
* திருமுடியில் - சங்கபாலன்
* வலது தோள்பட்டையில் - குளிகன்

கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமான ஒன்றாகும். கருட தரிசனம் சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான். பெருமாள் கோவில்களில் இவர் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணு தலங்கள் அனைத்திலும் கருவறைக்கு எதிராக தனிச்சன்னிதியில் வீற்றிருப்பார். கோவில் மதில்களில் நான்கு புறத்திலும், இவர் சிறகினை விரித்து பறக்க தயார் நிலையில் இருப்பதை காணலாம்.

கருடனை தன் வாகனமாக பெருமாள் ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார். பெருமாள் கோவில் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும், பல்வேறு விழாக்களின் போதும் பெருமாள், கருடன் மீது அமர்ந்து வீதி உலா வந்து அருள்பாலிப்பார்.

பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர்களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர். கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.

வாகனனுக்கு வாகனம்
தெய்வங்கள் அனைத்துக்கும் அநேகமாக வாகனங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களுக்கு வாகனம் எதுவும் கிடையாது. ஆனால் கருடன் அதிலும் சிறப்பு மிக்கவராக உள்ளார். ஏனெனில் கருடனுக்கு வாகனம் உண்டு. அதாவது வாயுதான் கருடனின் வாகனமாக உள்ளதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. இதற்கு சான்றாக இருப் பது விஷ்ணு சகஸ்ரநாமம். இதில் வரும் 'சுபர்ணோ வாயு 'சுபர்ணோ வாஹன!' என்ற பதம் இதனை விளக்குகிறது.

தாயின் அடிமை விலங்கை உடைத்த கருடன்

காசியப முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதை. இவர்களில் கத்ரு நாகர்களுக்கு தாயாக விளங்கினாள். வினதை அருணனையும், கருடனையும் பெற்றாள். ஒரு முறை கத்ரு, வினதையை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் வம்புக்கு இழுத்து ‘இந்திரனின் குதிரை (உச்சைஸ்வரஸ்) என்ன நிறம்?’ எனக் கேட்டாள்.

அதற்கு வினதை ‘இதில் என்ன சந்தேகம்? வெள்ளை நிறம்’ என்றாள்.

‘இல்லை கருப்பு நிறம்’ என்றாள் கத்ரு.

விவாதம் வளர்ந்து போட்டியாக மாறியது. இந்தப் போட்டியில் ‘ஜெயித்தவர் தோற்றவருக்கு அடிமையாக வேண்டும்’ என்ற நிபந்தனையை வகுத்துக் கொண்டனர்.

கத்ரு, குதிரையின் வெண் நிறத்தை கருப்பு நிறமாக மாற்ற, தன் மகனாகிய கார்க்கோடகன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்கோடகன் செய்ய, பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமை கொண்டாள். வினதை அடிமையானதால் அவளது மகன்கள் அருணனும், கருடனும் அடிமையாயினர். தாயின் அடிமையை நீக்க எண்ணினார் கருடன்.

‘தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், உங்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என்றாள் கத்ரு.

கருடனும், சரி என்று கூறி விரைவாக தேவலோகத்தை அடைந்தார். அவரை தேவேந்திரனும், தேவர் களும் வஜ்ராயுதம் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தடுத்தனர். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு மரியாதை அளிக்க விரும்பிய கருடன், தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார்.

இதைப்பார்த்து இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். இந்திரனிடம் கருடன், ‘என் தாயாரின் அடிமைத்தனத்தை போக்கவே அமிர்தம் கொண்டு போக வந்தேன். நான் இதை கொண்டு போய் கத்ருவிடம் கொடுத்த பிறகு, நீங்கள் மறுபடியும் இதை இங்கு கொண்டு வந்து விடலாம்’ என்று கூறினார். அதற்கு இந்திரனும் அனுமதி அளித்தான்.

கருடன் அமிர்தம் இருக்கும் இடம் சென்று அதை எடுத்துக் கொண்டு போய், கத்ருவிடம் கொடுத்தான். அவளும் வினதையை அடிமை தளையில் இருந்து விடுவித்தாள்.

கருடன் வேதமே வடிவானவர். ராமாயணத்தில் இந்திரஜித் எய்த நாக பாசத்தால், ராமரும் லட்சுமணரும் திகைத்து நிற்கையில், கருடனின் காற்றுப்பட்டு ராம, லட்சுமணர்களை கட்டியிருந்த நாகாஸ்திரம் விலகியது. சூரியனின் ரத சாரதியான அருணன் கருடனின் சகோதரன் ஆவார்.

தாயாரின் அடிமைத்தனம் நீங்குவதற்காக வீரம், பலம், தைரியம், பணிவு, அடக்கம் நிறைந்த தாயன்புடன் செயல்பட்ட கருடனைக் கண்டு மகிழ்ந்த திருமால், ‘நீ எப்போதும் எனது வாகனம் ஆக கடவாய்’ என்று கூற, அவரும் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கி வருகிறார்.


கருட பஞ்சமி விரதமுறை

கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.

ஒவ்வொரு வருஷமும் ஆடி அல்லது ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுவது, கருட பஞ்சமி என்று சொல்லப்படுகின்ற நாகபஞ்சமி நோன்பு. இதை சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் விரதம் இருந்து செய்வார்கள்.

கருட பஞ்சமியன்று வீட்டைத் தூய்மை செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, அன்னை கௌரியை பூஜிக்க வேண்டும். கௌரி அம்மன் நாகத்தின் உருக்கொண்டு வருவதாக ஐதிகம். நம்முடைய சக்திக்கு தகுந்தாற்போல வெண்கலம், செம்பு அல்லது வெள்ளி உலோகத்தில் சிறு நாக உருவத்தை வைத்து வணங்கலாம்.

முதலில் முழுமுதற் கடவுள் விநாயகருக்கு பூஜை செய்தபின் ஒரு சிறிய தட்டில் நாக உருவத்தை வைத்து, மஞ்சள், குங்குமம் தரித்து, பூக்களால் அஷ்டோத்திரங்களைக் கூறி பூஜிப்பர். பின்பு பசும் பால் ஊற்றி வணங்குவர். நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை, பாயசம் செய்து வைத்து, தூபம், தீபம், கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்குதல் மரபு.

அன்று விரதம் இருந்தால் நாகதோஷம் விலகும். சிலர் கூடுதலாக கருட பஞ்சமியன்று ‘பணிகௌரி பூஜை’யும் செய்வர். மாலையில் அம்மன் கோயிலில் உள்ள புற்றுகளுக்கு பசும்பாலும், நைவேத்தியமாக பால் கொழுக்கட்டையும், பாயசமும் படைத்து வணங்குவர்.

கருட பஞ்சமி பூஜை செய்த பின்பு, நாக உருவத்திற்கு நோன்பு கயிறு சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள பெண்கள் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் கோயிலுக்குச்சென்று நாக விக்ரகத்துக்கு பூஜை செய்து வழிபடலாம். சலக நன்மையும் உண்டாகும்.

இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால், அவர்கள் தீர்க்க சுமங்கலி யாக வாழ்வர் என்பது ஐதீகம். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாகதோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

கருட தரிசனம் தரும் பலன்கள்

அதிகாலையில் அருணோதய நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

ஞாயிறு– பிணி விலகும்.

திங்கள்– குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய்– துணிவு பிறக்கும்.

புதன்– பகைவர் தொல்லை நீங்கும்.

வியாழன்– நீண்ட ஆயுள்.

வெள்ளி– திருமகள் திருவருள் கிட்டும்.

சனி– முக்தி அடையலாம்.

கருட மந்திரம்

ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவரது பார்வைக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம் ஆகும். அந்த கருட மந்திரம் இது தான்...

ஓம் தத்புருஷாய வித்மஹேசுவர்ணபக்ஷாய தீமஹிதன்னோ கருடஹ் ப்ரசோதயாத்


ஓம் பக்ஷிராஜாய வித்மஹேசுவர்ணபக்ஷாய தீமஹிதன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

கருட மாலா மந்திரம்

ஓம்  நமோ பகவதே  கருடாய  காலாக்னி  வர்ணாய
ஏஹ்யேஹி  கால  நல  லோல  ஜிக்வாய
பாதய  பாதய  மோஹய  மோஹய  வித்ராவய  வித்ராவய
ப்ரம  ப்ரம  ப்ரமய  ப்ரமய  ஹந  ஹந
தஹ  தஹ  பத  பத  ஹூம்பட்  ஸ்வாஹா .

 கருட பஞ்சமியன்று காரைக்காலில் ஏழு கோயில்களை சேர்ந்த பெருமாள்கள் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி அருள்புரிகிறார்கள். பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக