செவ்வாய், 26 ஜூலை, 2016

சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!

ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா


சிங்க முகமும், பயங்கர உருவமும், அபய கரமும், கருணையும் கூடிய, எங்கும் நிறைந்திருக்கும் பெருமானே..! இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா..! வரங்களைத் அள்ளித் தந்தருளும்!

மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான்.
அதேபோன்று, மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் மிகவும் புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் நாமாக்களே பஞ்ச நாமாக்கள்.

நரசிம்மர் என்றவுடன், சட்டென்று அஹோபிலம்தான் பலரின் ஞாபகத்துக்கு வரும். அங்கு ‘நவ நரசிம்மர்’ கோயில்கள் உள்ளன. ஹைதராபாத்துக்கு அருகில் யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி போன்ற தலங்களும், சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா ஆகிய ஆந்திர மாநிலத்தின் இன்னும்பிற தலங்களும், கர்நாடகத்தில் சென்னபட்னா, தமிழகத்தில் சோளங்கிபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், சிங்கப்பெருமாள்கோவில், பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரி, காட்டழகிய சிங்கர்கோவில், நரசிங்கபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழம்பட்டு (சிங்கிரி கோயில்) ஆகிய திருத்தலங்களிலும் புகழ்பெற்ற நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.


இவற்றில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் அதிகம் பிரபலமாகாத, ஆனால் பக்தர்கள் தரிசித்துச் சிலிர்க்கும் ஓர் உன்னதத் திருத்தலம். நரசிம்மர் பெயரையே தாங்கி நிற்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.

ஐந்து நிலை, 7 கலசங்களோடு கூடிய அழகிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் கொடி மரம், பலிபீடம்; கடந்து உள்ளே சென்றால், முதலில் 16 நாகங்களைத் தன் உடலில் தரித்துக் கொண்டிருக்கும் கருடாழ்வாரை தரிசிக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள், சுமார் 4 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

அடுத்து, கோயில் முன் மண்டபத்தைக் கடந்து, கருவறையில்  நரசிம்மரைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் 12 ஆழ்வார்களும், சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் தரிசனம் தருகின்றனர். கோயிலை வலம் வரும்போது, மரகதவல்லித் தாயாரையும், ஆண்டாளையும் தரிசிக்கலாம். இக்கோயிலில் அழகிய கல்யாண மண்டபம் ஒன்றும் உள்ளது.

கருவறை விமானம் உயர்ந்த நிலையில், திருமாலின் பல அரிய சுதைச் சிற்பங்களோடு அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் அருளும் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் கம்பீரக் கோலம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார்.

சாதாரணமாக, லக்ஷ்மி நரசிம்மர் கோயில் களில், லக்ஷ்மி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந் திருப்பார். ஆனால், இங்கே லக்ஷ்மி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். ஆகையால், நரசிம்மரைத் தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். இவர் கல்யாண லக்ஷ்மி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்வாதி நட்சத்திரம் வருகின்ற நாட்களில், மாலைப் பொழுதில் (ஒன்பது நாட்கள், ஒன்பது முறை) இவரைத் தரிசித்தால், சத்ரு பயம், தீராக்கடன், திருமணத்தடை போன்ற பிரச்னைகள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.



கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் பகல் 11.30 வரை; மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை.

அருகில் தரிசிக்கக்கூடிய கோயில்கள்:

திருமாதலம்பாக்கம்    -    ஸ்ரீதிருமாலீஸ்வரர்;

தக்கோலம்     -    தேவாரத் தலம் (7 கோயில்கள்)

பேரம்பாக்கம்     -     ஸ்ரீசோழிஸ்வரர்; நரம்பு    சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும்.

இலம்பயங்கோட்டூர்     -     ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீரம்பேஸ்வரர்; தேவாரத் தலம்

கூவம் (திருவிற்கோலம்) -     ஸ்ரீதிரிபுராந்தகேஸ்வரர்; தேவாரத் தலம்

மப்பேடு    -     ஸ்ரீசிங்கீஸ்வரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக