திங்கள், 25 ஜனவரி, 2016

அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் தெப்பத் திருவிழா!


கயிலையே மயிலை! மயிலையே கயிலை!

திருமயிலையில் தைப்பூசத் தெப்பத் திருவிழா!


முதல் நாள் அருள்மிகு கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் தெப்பம்.
 
 
 
 
 
 
 
2ம் நாள் மற்றும் 3ம் நாள் அருள்மிகு சிங்காரவேலர் தெப்பம்.
 
 
 
 
 
 
 
 
 


images : google

 

திங்கள், 18 ஜனவரி, 2016

சூரிய பகவான்

 
சூரிய தேவனை,

"ஓம் நமோ ஆதித் யாய... ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா''

என்று சொல்லி வணங்கலாம்.


"ஆயிரம் நாமங்கள் கொண்டு எவரொருவர் என்னைத் துதித்து வழிபடுகிறார்களோ. அவர்களின் எண்ணங்களை முழுமையாகப் பூர்த்தி செய்வேன். எனது ஆயிரம் நாமங்களை நினைவுகூர்ந்து ஜெபிக்க இயலாதவர்கள், எனது இருபத்தொரு நாமங்களைக் கொண்டு பூஜித்தாலும் முழுத் திருப்தி அடைவேன்' என்று சூரிய பகவான் கூறிய இருபத்தொரு நாமங்கள்: 


"ஓம் விகர்த்ததோ விவஸ்வாம்ஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாச: ஸ்ரீமாம்
லோக சாக்ஷி த்ரிலோகேச:
கர்த்தா ஹர்த்தா தமிஸரஹ'
தபனஸ் தாபனஸ் சைவ கசி:
ஸப்தாஸ்வ வாஹன
கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மாச
ஸர்வ தேவ நமஸ்கிருத:"



மேற்கண்ட நாமங்களை சூரிய வழிபாட்டின்போது ஜெபித்தால் சூரிய பகவானின் முழு அருளையும் பெற்று வளமுடன் வாழலாம்.

புதன், 13 ஜனவரி, 2016

கூடாரவல்லி

 
 
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு. - உய்யக்கொண்டார் பாடல்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் அவளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். இந்த கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.

ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.


மார்கழி மாத 27ம் நாளே "கூடாரைவல்லி" நாளாக கொண்டாடப்படுகின்றது.
 
ஆண்டாளின் முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம் மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கின்றது.
கூடாரை வல்லிக்குக் காரணமாகவிருந்த ஆண்டாளையும், அவள் எழுதிய திருப்பாவையையும் காண்போம்.
 
வேதங்கள் போற்றும் வேதநாயகனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - தமிழில் பனிரண்டு ஆழ்வார் திருமக்கள் எழுதிய ஐந்தாம் வேதம் என்று போற்றப்படக்கூடிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" (4000 பாடல்கள்) - போற்றி பறை சாற்றுகின்றன. (இந்தப் பதிவின் முன் பதிவாகிய 'ஆழ்வார்கள் அருளிய அமுதம்' காணுங்கள்). இப்பாடல்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அனைத்து லீலைகளையும் பகர்கின்றது.


இடைக்காலத்தில் (பல்லவர்கள் காலத்திற்கு பிறகு) தமிழுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு, இப்பாடல்கள் அனைத்தும் தமிழை சீர்தூக்கி நிறுத்தின. கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்ப் பாடல்கள். தமிழன்னையின் அழகுக்கு மேலும் அழகூட்டின.


பனிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கியவர் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். இவள் எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.


ஆண்டாள் :
 
பனிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெரியாழ்வார். அவர் தினமும் திருமாலுக்கு திருமாலைத் தொண்டு செய்துகொண்டிருந்தார்.

 ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவரின் நந்தவனத்தில், "பஞ்சவர்ஷா திவ்ய ரூபா திவ்யாபரண பூஷிதா, நீலோத்பலதள ச்யாமா திவ்யாம்பர ஸமாவ்ரதா" என்ற ஸ்தலபுராணத்தின்படி, ஒளி வீசும் முகத்துடனும், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச் செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.


அக்குழந்தையை பெரியாழ்வார் கண்டெடுத்து, கோதை என பெயர் சூட்டி, (கோதை என்றால் தமிழில் மாலை என்றும் பொருளுண்டு) தமிழையும், கிருஷ்ண பக்தியையும் ஊட்டி, அருமையுடனும், பெருமையுடனும் திருமகள் போல (பெரியாழ்வார் திருமொழி 3) வளர்த்து வந்தார்.


குழந்தை முதலே கோதை கண்ணன் மீது பெரும் பக்தி கொண்டாள்.
அந்த பக்தி நாளாக நாளாக கண்ணன் மீது காதலாக மலர்ந்தது. எங்கு நோக்கிலும் கண்ணனின் திருவுரு தெரிவது போலவே மனம் மாறினாள்; விண்ணின் நீலம் கண்டால் அது கண்ணனின் நிறம் என்பாள்; அழகு மலரைக் கண்டால் அது கண்ணனின் கண் என்பாள். கண்ணனையை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்றே காலம் நகர்த்தினாள்.


வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் மூலம் ஆயிரம் யானைகள் சூழ, உறவினர்கள் புடை சூழ கண்ணனை திருமணம் புரிய வேண்டும் என்று கனவு காண்கின்றாள்.


பெரியாழ்வார் வீட்டில் இல்லாத சமயம், பெருமானுக்கு சார்த்துவதற்காக வைத்திருந்த மாலைகளை எடுத்து, தான் அணிந்து கொண்டு, கண்ணனுக்குத் தோதாக, கோதை தான் இருக்கின்றேனா என்று கிணற்று நீரின் நிழலில் (கண்ணாடியில் தெரிவது போன்ற) பிரதிபிம்பத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வாள். (ஆண்டாளின் அழகைக் காட்டிய அந்தக் கிணறு இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆலயத்தில் உள்ளது).

அதன் பின்னே மாலைகளை பெருமாளுக்குச் சூடக் கொடுப்பாள். ஆகையாலே ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்.


பெரியாழ்வார் மிகப் பெரும் தமிழ் ஆர்வலர், புலவர்.

அவரின் மகள் அவரைப் போலவே தமிழ்ப் பாக்கள் தொடுப்பதில் ஆர்வமாயிருந்தாள்.

ஆண்டாளின் பாடல்கள் இயற்றரவிணை கொச்சகக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் ஆச்சர்யம் அளிக்கின்றது. ஆண்டாள் அருளியது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி.


ஆண்டாளின் திருப்பாவையில் பெண்மையின் குணங்களும், மென்மையும், நளினமும் நிறைந்திருக்கிறது.

காக்கைப்பாடினியார், காரைக்காலம்மையார் போன்ற பெண் புலவர்கள் எழுதியது இலக்கியமும், பக்தியும் சேர்ந்தது.

ஆனால், ஆண்டாளின் பாடல்களின் கண்ணனை மட்டுமே அடைய வேண்டும் என்ற காதல் வேட்கையில் பாடும் பாடல்களில் காதலும் கவினுற சேர்கின்றது.

ஜெயதேவர் தன் அஷ்டபதியில் நாயகன் நாயகி பா(ba)வனையில் எழுதியிருந்தாலும், ஆண்டாள் - ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பரமனைக் காதலால் பாடுவது அருமையாக அமைகின்றது.


திருப்பாவையில் பெண்மையின் - ஆசைகள், வேண்டுதல்கள், நோன்பு நோற்றல், அணிகலன்கள் அணிதல் - முதலானவை மிளிர்கின்றது.


பெண் தன்மை மட்டுமல்லாமல் ஆண்டாள் பல நோக்குடையவளாக இருந்திருக்க வேண்டும். விஞ்ஞானம் (கடல் நீர் ஆவியாகி மேகத்திலிருந்து மழை பொழிவது), வானவியல் (வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று - இந்த வரிகளைக் கொண்டே ஆண்டாளின் காலத்தை அறிஞர்கள் நிர்ணயித்திருக்கின்றார்கள்) போன்ற கலைகளையும் அறிந்திருக்கின்றாள் என்பது புலனாகின்றது.


இயற்கைக் காட்சிகளை வர்ணிக்கையில், முதன் முதலில் காட்சியைப் பார்க்கும், குழந்தையின் குதூகலம் தெரிகின்றது. பாக்களைப் பார்க்கையில் இலக்கண முதிர்ச்சி தெரிகின்றது. பரந்தாமன் மேல் கொண்ட அளவிற்கடந்த பக்தி தெரிகின்றது.


இனி ஆண்டாளிடம் வருவோம்.
தினமும் ஆண்டாள் செய்து வரும் 'மாலையைச் சூடிப் பின் அரங்கனுக்கு சூடக்கொடுப்பதை' ஒரு நாள் பெரியாழ்வார் கண்டு அதிர்ச்சி கொள்கிறார். கண்ணனே என் கணவன் ஆவான் என எண்ணம் கொண்டிருக்கும் ஆண்டாளைக் கண்ட பெரியாழ்வார்க்கு கவலை அதிகமாகிறது. அவரின் கவலையை நீக்கும் விதமாக ஆண்டாளை பங்குனி உத்திரத்தன்று ஏற்போம் என்கிறார் பரமன்.


பரந்தாமனிடம், பெரியாழ்வார் - ஆண்டாளை ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஊரார், உறவினர்கள் அனைவரையும் சாட்சியாக நிறுத்தி, தாங்கள் ஏற்க வேண்டும் என்று - ஒரு பெண்ணின் தந்தையின் ஸ்தானத்தில் நின்று வரம் கேட்கிறார். அவ்வண்ணமே "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" அருள்பாலிக்கின்றார்.

அந்த நாளும் வந்தது. ஊரார், உறவினர் அனைவரும், ஆண்டாளை அலங்கரித்து வந்து பெருமானிடம் சேர்க்க வருகின்றனர். நேரம் போய்க்கொண்டேயிருக்கின்றது, ஆனால் பெருமானைக் காணோம்.

இனியும் பொறுக்க மாட்டாத ஆண்டாள், கருடாழ்வாரை மனமுருக பிரார்த்தனை செய்து, 'பரந்தாமனை உடனே அழைத்துவந்தால், எங்கள் அருகிலிருக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டு' என்று வேண்டுகிறார்.

கருடாழ்வார் மறுகணமே பெருமானிடம் சென்று, இனி ஒரு கணம் தாமதித்தாலும் ஆண்டாள் உயிர் பிரிவாள் என எடுத்துச் சொல்ல, பரந்தாமன் கையில் செங்கோல் ஏந்தி, ரங்கமன்னனாக, இன்முகத்துடன் ஆண்டாளை கரம் பிடிக்கின்றார். (ஸ்ரீ வில்லிப்புத்தூர் புராணம்)


கருடாழ்வார் உதவியதால், ஆண்டாளின் வாக்குப்படியே ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெருமானுக்கு அருகிலிருக்கும் பாக்கியத்தை கருடாழ்வர் பெற்றார்.

இனி கூடாரைவல்லி :

மார்கழி மாதத்தில் தக்க கணவனை அடைய பாவை நோன்பு காப்பது பெண்களின் பழங்கால விரதங்களில் ஒன்று.


அதிகாலைப் பொழுதில் தோழியரை எழுப்பி பெருமானைக் காண அழைக்கின்றாள் ஆண்டாள். நோன்பு சமயத்தில் "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்", கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று பெண்கள் தங்களை வருத்திக்கொண்டு இறைவனைப் பணிகின்றார்கள்.


மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில், விரதம் முடிக்கின்றார்கள். திருப்பாவையின் 27வது பாடல் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்று பாடி அக்காரவடிசல் எனும் உணவினை இறைவனுக்குப் படைத்து விரதம் முடிக்கிறார்கள். 27வது நாளிலே பரமந்தாமன் ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த நன்னாள்.


ஆண்டாளின் பாசுரங்களில் ஆபரணங்கள் பூணுவதைச் சொல்கின்றாள். சூடகம் எனும் கையில் அணியும் வரிவளை எனும் வளையலைச் சொல்கின்றாள். பாடகம் எனும் காலில் அணியும் ஓசை எழுப்பாத கொலுசு பற்றி சொல்கின்றாள். செவிப்பூ, காறை என்று பல அணிகலன்களை அணிந்து மகிழ்வோம் என்கின்றாள். அவள் சொன்ன பல அணிகலங்கள் இன்று இல்லை. பாடகம் - சிலர் மட்டுமே விரும்பி அணிகின்றார்கள்.


ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர்; ஆனால் ஆண்டாளின் அண்ணன் ஆனார் :
 
வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே போற்றப்பட்டார்.

ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,
"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர் செய்து காட்டினார்.

ஒவ்வொரு க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர் வந்து பெருமானை சேவிக்கவந்தார்.
கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை.

மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று அழைத்தாள்.

பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்? அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள்.

என் எண்ணத்தை (நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்? எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர் தாங்கள் தான். ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். ராமானுஜர் பூரித்து நின்றார்.


ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள். நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தாள்.


அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல், ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.


நம்பியின் பெண்ணா? நப்பின்னையா?
 
இதே ராமானுஜர் ஒரு சமயம் ஆண்டாளின் பாடல்களைப் பாடிக்கொண்டே, திருக்கோட்டியூர் நம்பியின் (இவரும் ஒரு ஆச்சார்யர் தான்) வீட்டிற்குச் சென்றார். கதவு சார்த்தியிருந்தது.

"செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்ற பாடலை பாடிநின்றார்.

பாசுர ஒலி கேட்டு, வீட்டின் உள்ளேயிருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பெண் ஆகிய தேவகி, அலங்கார ஆபரணங்கள் பூண்டு, வளையோசை எழும்ப, கதவைத் திறக்கிறார். ஆண்டாள் பாசுரத்தில் இதே போன்ற கட்டம் வரும்போது, ஆண்டாளுக்காக கண்ணனின் மனதுக்கினிய நப்பின்னை கதவைத் திறப்பாள். அவளை ஆண்டாளும் தோழியரும் பக்தியுடன் சேவிப்பார்கள்.

அதே போல இந்தப் பாடல் பாடி முடித்ததும், ராமானுஜருக்கு கதவைத் திறந்தது நம்பியின் பெண் என்று புலனாகாமல், ஆண்டாள் பாசுரங்களில் மூழ்கியிருந்ததால், கதவைத் திறந்த நம்பியின் பெண் "நப்பின்னையாகவே" கண்ணுக்குத் தெரிந்தாள். உடனே நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்து சேவித்தார். நம்பியின் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் ஒரு மஹாநுபாவர் நம் காலில் விழ வேண்டும் என்று பதறியபடியே உள்ளே வந்து தந்தையிடம் நடந்ததைச் சொல்ல, மேதாவிலாசம் கொண்ட அவரும் புன்சிரிப்போடு நடந்ததைப் புரிந்து கொண்டு, அவளிடம் நிலையை விளக்கினார்.

ஆண்டாளின் திருப்பாசுரங்கள் நம்மை ஆண்டுகொள்ளும். நம்மை தெய்வ ஸந்நிதானத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அமைந்தது.


ஆண்டாள்,
தமிழிலக்கணத்தால் தமிழை ஆண்டாள்,
பக்தியால் பரமனை ஆண்டாள்,
நல்வழிகாட்டியதால் தோழியரை ஆண்டாள்,
ஆழ்வாரை (தந்தையை) ஆண்டாள்,
பரமனோடு கூடியதால், அவளை பக்தியால் பரவும் நம் அனைவரையும் ஆண்டாள்.


திருப்பாவையின் அனைத்து பாடல்களும் தேன் போன்று தெவிட்டாத சுவையுடையது. மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில் இதமான பனி உடலைக் குளிர்விக்க, திருப்பாவை பாடல்கள் உள்ளத்தை மிக நிச்சயமாகக் குளிர்விக்கும்.

கூடாரைவல்லி தினத்தன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கூடிய பெருமாளை சேவிப்போம். அக்காரவடிசல் அன்னதானத்தில் பங்குகொள்வோம். பக்தி செய்வோம். பயனுறுவோம்.

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
 
 
விளக்கம்: கோபியர்கள் கண்ணனை, “கோவிந்தா!’ என்றழைத்து, உன்னைப் பாடிப் பறை கொண்டபிறகு, எங்களுக்கு ஒரு சன்மானம் அளிக்க வேண்டும்; நாங்கள் மேற்கொண்ட நோன்பு வெற்றிகரமாக முடிந்ததற்காக நாடு புகமும் பரிசு அளிக்க வேண்டும். சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் செவிப்பூ, காலில் அணியும் பாடகம் முதலிய பல ஆபரணங்களைக் கொடுக்க வேண்டும். ஆடைகள் கொடுக்க வேண்டும்; நல்ல நெய் சேர்க்கப்பட்ட பால்சோற்றை முழங்கையில் வழியும்படியாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து உண்ணவேண்டும். வாய் உன்னைப் பாடவேண்டும்; உடம்பு உன்னோடு கூடவேண்டும். இந்தப் பாசுரம் திருவேங்கடத்தை உணர்த்துகிறது.

 
 
 
 

வெள்ளி, 8 ஜனவரி, 2016

அனுமன் ஜெயந்தி

 அனுமன் வாயு பகவானுக்கும், அஞ்சனை தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அது ஒரு மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திர தினமாகும். அவரது சக்தி அபாரமானது. நினைத்ததை நினைத்தபடி முடிப்பவர், பிறர் நினைத்துப்பார்க்க முடியாததையும் நடத்திக் காட்டும் ஆற்றல் கொண்டவர்.
ஆஞ்சநேய ஜெயந்தியன்று விரதம் இருந்து, ராமநாமம் பாடி அனுமனை வழிபட்டால் சஞ்சலங்கள் விலகும். சகல செல்வங்களும் பொங்கி பெருகும்.

விரதம் இருக்கும் முறை

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.

நினைத்த காரியம் கை கூடும்.

துன்பம் விலகும். இன்பம் பெருகும்.

அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஆஞ்சநேயரை ராமநாமத்தால் பூஜிப்பதோடு, வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும்.

வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது.

அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்வதனால் அனுமன் மிக மகிழ்வார்.

வெற்றி தரும் வெற்றிலை மாலை



 இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான்.

அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடு கிறார்கள்.

இலங்கையில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது ராம தூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டுச் செல்வார் என்று கூறினார்.

இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று கூறி ஆசி வழங்கினார்.

இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

வியாழன், 7 ஜனவரி, 2016

வளம் சேர்க்கும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு!

 
 

செல்வத் திருமகளான மகாலக்ஷ்மியை ஐஸ்வர்ய லக்ஷ்மி, சௌபாக்ய லக்ஷ்மி, சௌந்தர்ய லக்ஷ்மி, யோக லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி என பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். வட இந்தியாவில்  அதிர்ஷ்டத்தை தரும் லக்ஷ்மியை அதிர்ஷ்ட தேவியாக வழிபடுகின்றனர்.

இந்தியாவில் சில பிரிவினர், அக்னி பூஜை செய்வதால் அதிர்ஷ்டதேவியின் அருளைப் பெறலாம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

வட இந்தியர்களும், சீனர்களும், மலேசியா- சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சில பிரிவினரும் அதிர்ஷ்ட தேவதை என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகின்றனர். வீடுகளில் பஞ்ச பூதங்களையும் ஒவ்வோர் இடத்தில் நிறுத்தி, பென்சுயி அல்லது வாஸ்து முறையில் அதிர்ஷ்ட சக்தியை நிலை நிறுத்தமுடியும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

வட மாநிலங்களில் 'லக்கி மா’ என்ற பெயரில் அதிர்ஷ்ட தேவியை வழிபடுகிறார்கள்.



தெய்வ அனுக்கிரகத்தால் கைகூடும் வரமாக இருந்தாலும், அதோடு அதிர்ஷ்டமும் நமக்குத் துணை புரிந்து, நம் வாழ்க்கை வளமாக அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும். இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுவார்கள். வீடு மங்களகரமாக உள்ள தென்று, பிரம்ம முகூர்த்த வேளையில் வாசல் வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டினுள் நுழைந்துவிடுவாளாம்.

நமது ஞானநூல்கள் சில, அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை விவரிக்கின்றன.
 

அதிர்ஷ்ட தேவி பூஜை முறை
 
பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்தவேண்டும். நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

முதலில், விநாயகர் துதி!

அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூறவேண்டும்.

அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.


பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்
சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்
பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.


கருத்து: தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து, செந்தாமரை மீது அமர்ந்தவளாக, வலக் கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி.

தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன. இந்த தேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.


அதிர்ஷ்டதேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும்.

அடுத்து, காமாட்சி விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து, யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவை:

ஓம் ஸ்ரீம் தாராயை நம,
ஓம் ஸ்ரீம் வித்யாயை நம,
ஓம் ஸ்ரீம் முநின்யை நம
ஓம் ஸ்ரீம் சரத்தாயை நம,
ஓம் ஸ்ரீம் ஜராயை நம,
ஓம் ஸ்ரீம் மேதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்தியை நம,
ஓம் ஸ்ரீம் வர்மின்யை நம,
ஓம் ஸ்ரீம் பாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் ஜ்வாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் க்ருஷ்ணாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்மிருத்யை நம,
ஓம் ஸ்ரீம் காமாயை நம,
ஓம் ஸ்ரீம் உன்மத்யை நம,
 ஓம் ஸ்ரீம் ப்ரஜாயை நம,
ஓம் ஸ்ரீம் சிந்தாயை நம,
ஓம் ஸ்ரீம் க்ரியாயை நம,
ஓம் ஸ்ரீம் க்க்ஷாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் சாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தயாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்திதாயை நம,
ஓம் ஸ்ரீம் தூத்யை நம,
ஓம் ஸ்ரீம் கத்யாயை நம,
ஓம் ஸ்ரீம்  அதிர்ஷ்ட கலாயை நம:

நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப- தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து,

'ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே
கமல ஹஸ்தாய தீமஹி
தந்தோ அதிர்ஷ்டதேவி ப்ரசோதயாத்’

என்ற அதிர்ஷ்டதேவி காயத்ரீ மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி, ஆரத்தி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து,
 
 'ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’

என்று 108 முறை ஜெபம் செய்வது விசேஷம்!









image : thanks to google

 

புதன், 6 ஜனவரி, 2016

குரு வார விரதம்:

வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும்.  வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள்.
குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை ஆரம்பித்து செய்யவேண்டும்.
தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள், அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில்மவுன விரதம்இருப்பது மிகவும்சிறந்ததாகும்.
குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின்ஆசிகள்ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.

வானவர்க் கரசே! வளம் தரும் குருவே! 
காணா இன்பம் காண வைப்பவனே! 
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்! 
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்! 


சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்! 
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்! 
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்! 
நிலையாய் தந்திட நேரினில் வருக!' 


நாளைய பொழுதை நற்பொழுதாக்கி  
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்! 
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்! 
வல்லவன் குருவே!  வணங்கினோம் அருள்வாய்! 
 
 

குரு கவசம்


1.வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே! உன்னை
தேனான சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன்
காணாத இன்பம் யாவும் காண நீவழி வகுப்பாய்
மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடதாகும்!
2.பொன்னிற முல்லையொடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய் மரத்தினில் அரசை ஏற்றாய்!
எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்!
மண்ணினில் பதினாறு ஆண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!
3. சுண்டல் நைவேத்யதால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ!
கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!
4. பொருளோடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம்ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும் ! பேரருள் கூட்ட வேண்டும்!
அருள்மிகு குருவே உன்னை அடிப்பணிந்து வணங்குகின்றேன்!
5. வருடம் ஓர் ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுகொள்வோம் !
வருகிற நாட்கள் எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே
அருள்தரும் உனது பார்வை அனுதினம் எமக்கு வேண்டும்!
6. குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்!
பொருள் வகை பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!
அருள் தர வேண்டி உன்னை அன்போடு துதிகின்றோமே!
 
 

சனி, 2 ஜனவரி, 2016

விநாயகர் காரிய சித்தி மாலை!






பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம். 1

உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம். 2
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம். 3
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 4
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம். 5
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 6
மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம். 7
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம். 8

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும். 9
திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார். 10

அஷ்டலக்ஷ்மீ மாலா மந்த்ரம்

 
 
ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹ்ராம் ஹ்ரீம் மம ஸர்வசத்ரு பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம் க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதி ஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா!
 
 
 
 

திருத்தணி திருப்படி திருப்புகழ் திருவிழா!

            
 திருத்தணி ஸ்ரீசுப்பிர மணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழாவும், ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.  இக்கோவிலுக் குச் செல்லும் படிக்கட்டு கள் 365 என்பதால், ஓராண்டின் 365 நாட்களை நினைவு கூர்ந்து இங்கே ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தைப்பூசம், விசாகம், ஆடிக்கிருத்திகை ஆகிய திருவிழாக்களைப்போல் திருப்படித் திருவிழாவும் ஒரு முக்கியமான உற்சவமாக ஜனவரி முதல் தேதியன்று கொண்டாடப் படுகிறது. இந்தத் திருப்படி உற்சவத்தினை 31-12-1917 இரவு மற்றும் 1-1-1918 ஆகிய நாட்களில் முதன்முதலில் துவக்கி வைத்தவர் "வள்ளிமலை' சுவாமிகள் என்று கூறப்படுகிறது.



ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஏராள மானோர் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மற்றும் ஜனவரி முதல் தேதி காலையில் ஆங்கிலேயே அதிகாரிகளைப் பார்த்து, பழங்கள் முதலானவற்றைக் கொடுத்து "ஹேப்பி நியூ இயர்' என்று சொல்லும் வழக்கம் இருந்தது. இதைக்கண்ட"அர்த்தநாரி' என்ற இயற்பெயர் கொண்ட வள்ளிமலை சுவாமிகள், "நம்மை அடிமைப் படுத்தி ஆளும் அந்நியர்களைப் பார்த்து வாழ்த்தும் வணக்கமும் தெரிவிக்கிறார்களே! அதற்கு மாற்றாக இந்நாளில் நம்மை நலமுடன் வாழவைக்கும் முருகப் பெருமானை தரிசித் துப் பலன் பெறலாமே.... தெய்வ வழிபாடுகளில் ஈடுபடலாமே' என்று எண்ணினார். அதன் விளைவுதான் திருத்தணித் திருத்தலத்தில் "திருப்படி உற்சவம்' ஆரம்பமானது. டிசம்பர் 31-ஆம் தேதி மலையின்மீது விளக்கு ஏற்றியும், ஜனவரி முதல் தேதி படிப்பூஜையும் நடைபெறலாயிற்று.


 


மலைமேல் அமைந்துள்ள கோவிலில் டிசம்பர் 31-ஆம் தேதி மலை தீபம் ஏற்றுவார்கள்.  திருப்படி திரு விழாவை முன்னிட்டு 31-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு திருப்படிக்கும் சிறப்பு பூஜை செய்து மஞ்சள் குங்குமம் பூசி வெற்றிலை பாக்கு, பூக்கள்,  பழங்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்படும்.

 

 நூற்றுக்கணக்கான பஜனைக் குழுவினர், டிசம்பர்  31 அன்று  அதிகாலை சரவணப் பொய்கையில் புனித நீராடிய பின் ஒவ்வொரு திருப்படிக்கும் ஒவ்வொரு திருப்புகழ் பாடல் பாடியவண்ணம் 365 படிகள் வழியாக மலைக் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பர்.

 அதேபோல் பெண் பக்தர்கள், ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் மலைக்கோயிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.

படிப்படியாக ஏறிச்சென்றால், அதுவும் படிப் பூஜை செய்த வண்ணம் ஏறிச் சென்று இறைவனை தரிசித்தால், படிப்படியாக முன்னேற்றம் கிட்டுமென்ற நம்பிக்கையில் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அடிவாரத்திலிருந்து மேலே செல்ல வாகன வசதி இருந்தாலும், பக்தர்கள் இந்நாளில் 365 படிகள் ஏறிச்சென்று முருகனை தரிசிக்கவே விழைகிறார்கள்.


 
 
விழாவை முன்னிட்டு 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளித் தேரில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி மலைக்கோயிலை வலம் வருவார். நள்ளிரவு 12.01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெறும்.

 தொடர்ந்து, ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்புத் தரிசனம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு தங்கத் தேரில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலை வலம் வருவார்.

 31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மலைக்கோயிலில் உள்ள திருப்புகழ் பஜனை மண்டபத்தில், பல்வேறு பஜனை குழுவினர்களால் திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து பாடப்படும். விழாவையொட்டி, 31-ஆம் தேதி இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்.

திருத்தணியில் நடைபெறும் "திருப்படி' உற்சவம்போல் பழனி, சுவாமிமலை, திருப் பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய முருகன் திருத்தலங்களிலும்; திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், குன்றத்தூர், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய மலைக் கோவில்களிலும் படிப்பூஜை விழா அக்கோவில்களின் சிறப்பு நாட்களில் நடை பெறுகிறது. திருப்படி வழிபாடு மேற்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வும், சகல பாக்கியங்களும் பெற்று சுகமுடன் வாழலாம் என்பது ஆன்றோர் கூற்று.

திருத்தணி முருகர் திருப்படி திருவிழாவை தரிசித்து திருவருள் பெறுவோம்.



 

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இந்த 2016ம் ஆண்டு

அனைவருக்கும்

எல்லா விருப்பங்களையும்

நிறைவேற்றும் ஆண்டாக அமைய

இறைவன் அருள் புரியட்டும்.