திங்கள், 25 ஜூலை, 2016

வல்லமை அருளும் வாராஹி!

வாராஹி காயத்ரி:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.

ஓம் மஹிஷத்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.

வாராஹி மாலை
 இரு குழை கோமளம் தாள் புஷ்பராகம்  இரண்டு கண்ணும்
 குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
 திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
 மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!  

 வாராஹி துதி

 இடி மின்னல் பூகம்பம் எதுவரினும் என்னவுன்
 இருபத மெனைக் காக்குமே!
 கடிய விட தேள்பாம்பு மிருகங்கள் யாவுமுன்
 கண்களுக்கே அஞ்சுமே!
 கடிதான துன்பங்கள் காலபயம் என்றாலும்
 காதவழிதான் ஓடுமே!
 மடியுமுன் என் மடமை நீக்குமொரு ஞானமே
 மாதேவி வாராஹியே!

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவி. ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் சப்த மாதர்களில் தலையானவள் இந்த வாராஹி. மகாகாளி, தாருகாசுரனோடு போர் புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி. சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள். சிங்கமதை வாகனமாய்க் கொண்டு மூவுலகங்களையும் ஆளும் லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாய் விளங்குபவள், இந்த அம்பிகை. லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ (நீஷீனீனீணீஸீபீமீக்ஷீ வீஸீ நீலீமீவீயீ) என  இவள் பக்தர்களால்
போற்றப்படுகிறாள்.

ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியம்(19/458) எட்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வராஹமூர்த்தியின் அம்சமே வாராஹியாவாள்.
மந்த்ர சாஸ்த்ரம் அறிந்தவர்கள் பல்வேறு வடிவங்களில் இவளை வழிபடுகின்றனர்.

இந்த வாராஹி, லலிதா தேவியின் ஸ்ரீபுரத்தின் 16வது பிராகாரமான மரகதமணியால் ஆன பிராகாரத்தில் வசிப்பவள். மகாபத்மாடவீ எனும் கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்த பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் சர்வாலங்காரங்களுடன் அருள்பவள் இத்தேவி. வடகிழக்குப் பகுதி என்பது ஆராதனைக்குரியது. அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றை தருவது. அப்படி வளம் கொடுக்கக்கூடிய பகுதியில் வசிக்கிறாள் வாராஹி. அதனால் தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச் செய்கிறாள். நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களைப் பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன. தந்திரராஜ தந்த்ரம் எனும் நூல் இவளை லலிதையின் தந்தை என்றே குறிப்பிடுகிறது. பெண் தெய்வமாக இருப்பினும் காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே அது இத்தேவியை வர்ணிக்கிறது. இதே கருத்தை பாவனோபநிஷத், ‘வாராஹி பித்ரு ரூபா’ என ஆமோதிக்கிறது. இத்தேவியை பஞ்சமி தினத்தன்று வழிபடுதல் விசேஷம். ‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியைப் போற்றுகின்றார். காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள். என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். வாராஹி காவல் தெய்வம். காலம் எனும் கடலில் நீந்தும் நம்மை கரை சேர்க்கும் கப்பல் அவள்.

இத்தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது, தன் பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற அனந்த கல்யாண குணங்கள் கொண்ட மனைவியாய் இவள் திகழ்வதை உணர்த்துகிறது. வலக்கரம் அபய முத்திரை காட்டி அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குகிறது. இவள் ஏந்தியுள்ள கலப்பை நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது, மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி, கடைசியில் அதில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படிச் செய்கிறது. அதுபோல, நாம் உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவிலா புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும் தெளிவடையும் புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி வகுக்கிறது.

மேலும் பல பிறவிகளின் கர்மவினையால் கெட்டிப்பட்ட ஆன்மாவை, பூமியில் புதைந்துள்ள கிழங்கை கலப்பையால் அகழ்ந்து மேலே கொண்டு வருவதைப் போல், ஞானக் கலப்பையால் நம் ஆத்மாவைத் தோண்டி ஞானம் ஏற்படும்படியும் செய்கின்றது. இத்தேவி வராஹ முகம் கொண்டதேன்?‘மானமில்லாப் பன்றிபோல் உபமானமுமில்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. தேவர்களுக்கு அதிபதியான அதிரூப சௌந்தர்யம் கொண்ட திருமால் கடலில் புதைந்த உலகை மேலே கொண்டு வர மானமில்லாப் பன்றி வடிவெடுத்ததில் அவனுக்கு நிகருண்டோ என வியக்கின்றனர் சான்றோர். பன்றி மானமில்லாததாகக் கருதப்படுவதாயினும் அதன் உயர்ந்த ஆன்ம குணம் நமக்குப் பாடமாகத் திகழ்கிறது. மானம் இல்லையெனில், அவமானமும் இல்லையன்றோ? மான அவமானம் எனும் இரண்டிலும் பாதிக்கப்படாமல் இருப்பதே ஞான சாதனை. சுகத்தையே வேண்டாம் என்பவருக்குத் துக்கம் ஒன்றுமே செய்யாதல்லவா? தன்மானம், தன்மதிப்பு, தற்பெருமை எனத் தன்னையே பாராட்டிக் கொண்டிருப்பவர்கள்தான் தனக்குச் சிறு அவமதிப்பு நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ளாமல் துவண்டு போவார்கள். புகழ்ச்சிக்கு மகிழ்ந்தும் இகழ்ச்சிக்கு அஞ்சியும் வாழ்வது ஞானத்திற்குப் புறம்பானது என்பதை சுட்டிக்காட்டவே இந்த வராஹ வடிவை தேவி கொண்டுள்ளாள்.
‘‘நீ ஞானத்தில் உயரவேண்டுமெனில் துடைப்பம் போலிரு’’ என்பர் பெரியோர். “துடைப்பம் தூசிகளைச் சேர்த்து ஓர்புறமாக ஒதுக்கிவிட்டு, தான் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்கிறது. அது ஒருநாள் தன் பணியைச் செய்யாவிடில் வீடே குப்பைக் கூளமாய் மாறி, நோய்கள் உண்டாகும் சூழ்நிலை உருவாகிறது. அதுபோல் நீயும் கர்வம் கொள்ளாமல் உன் கடமையைச் செவ்வனே செய். உன்னை நினைத்து பெருமைப்படாதே! புகழுக்கு ஆசைப்படாதே. உன் பணி முடிந்ததும் ஒதுங்கிக் கொள். எல்லோரும் நலமுடன் வாழ துடைப்பம்போல் பாடுபடு’’ என்பது ஆன்றோர் வாக்கு. அதுபோல் வாராஹியும் தன் அடியார்களின் பாவ பீடைகளை எல்லாம், மாயா மல மாசுக்களை எல்லாம் களைந்து அவர்களைத் தூய்மைப்படுத்துகிறாள்.
தான் ஈன்ற கன்றினை தன் நாக்கால் நக்கி பசு சுத்தப்படுத்துவதுபோல தன் தாயன்போடு  தன்னை அண்டுவோரின் தோஷங்களை எல்லாம் போக்கிப் புனிதமாக்கி, பயம், பந்தம், துன்பங்களிலிருந்து மீட்டு, முக்திக்கு அருள் செய்கிறாள்.

பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்ரன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தவள் இந்த வாராஹி என லலிதோபாக்யானம் இவளை புகழ்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் ‘விஷூக்ரப் ப்ராணஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’ எனும் நாமங்கள் இவளைக் குறிக்கின்றன. இவள் ஆரோகணித்து வரும் ரதம், கிரி சக்ர ரதம் என்றும் இவளின் யந்திரம் கிரியந்த்ரம் என்றும் போற்றப்படுகிறது. (கிரிபன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர். பராபட்டாரிகையான லலிதையின் மனக் குறிப்பறிந்து ரதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள் போற்றப்படுகிறாள். மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும் மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது கிரி சக்ரம் என்கிற வாராஹி யந்த்ரம். இத்தேவி ஆரோகணித்து வரும் சிம்மம் வஜ்ரகோஷம் என வணங்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு இத்தேவி எருமை மீதும் ஏறி வருவாள். சில சமயங்களில் நாகவாகனத்திலும் அமர்ந்தருள்வாள் என தேவி பாகவதம் கூறுகிறது. இந்த வாராஹி குதிரை மீதேறி வரும்போது அஷ்வாரூடா வாராஹி என போற்றப்படுகிறாள். குதிரைக்காரி என சித்தர்கள் போற்றும் தேவி இவள். ஜனவசியம், ராஜவசியம் போன்றவற்றை அருள்பவள். அரசியலில் வெற்றி பெற இத்தேவி நிச்சயம் அருள்பவள். மகாவாராஹி எனும் ஆதிவாராஹி, பிருஹத் வாராஹி, லகு வாராஹி, பஞ்சமி வாராஹி, அஷ்வாரூடா வாராஹி, சுத்த வாராஹி, தண்டநாதா வாராஹி, தும்ர வாராஹி, ஸ்வப்ன வாராஹி, வார்த்தாளி என வாராஹியின் வடிவங்கள் பலப்பல.

உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரணி, கிரிபதா ஆகியோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாக அருள்கின்றனர். இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப் பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை சுண்டல் மற்றும் தேனும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வெண்தாமரையும் செந்தாமரையும் இந்த அன்னையின் பூஜைக்கு உரியவை. இரவு நேர பூஜையே இந்த தேவிக்கு உரியது.   வாராஹியைக் குறித்த வாராஹி மாலை எனும் தமிழ் துதியும் நிக்ரஹாஷ்டகம், அனுக்ரஹாஷ்டகம் எனும் வடமொழி துதிகளும் புகழ் பெற்றவை.

‘கோலாம்பா’ என்றும் வாராஹி தேவியை அழைத்து வழிபடுவோர் உண்டு. பூமியை மறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி, வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார். அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார். அறுபது கோடி வாராஹி கன்னிகைகள் இவள் பரிவார தேவதைகளாக ஏவல் புரிவதை  ‘தேவிஸ்ரீசஷ்டி கோடி பிர்வ்ருதா’ எனும் திருநாமம் உணர்த்துகிறது. அதீத வீர்யம் கொண்டவள் என்பதை ‘வீர்யவதி’ என்ற நாமம் குறிக்கிறது. வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள்

கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் உதவும். எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். மயில் தோகை விசிறியால் விசிறி, பிரார்த்தனை செய்து முறுக்கும் வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, அந்த மூடிகளில் நெய் ஊற்றி விளக்கேற்ற, கேட்ட வரங்களைத் தப்பாமல் பெறலாம். ஆடி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி எனும் பெயரில் வாராஹி நவராத்திரியாக தேவி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது.

ஒப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங்கள் அருளும் வாராஹியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி, வழிபட நம் துயர்கள் தூசாய்ப் பறக்கும். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சமே. இரவு அர்த்தஜாம பூஜையின் போது அகிலாண்டேஸ்வரியின் திருமுகம் வாராஹியைப் போல் தோற்றமளிப்பதாக பக்தர்கள் கூறுவதுண்டு.  அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமாவளி போன்ற பல்வேறு துதிகளால் அன்னையை வழிபடலாம். ஒப்பற்ற தேவியின் பாத கமலங்களைப் பற்றி நம் பாதக மலங்களை ஒழித்து நிர்மலமான தூயவாழ்வு பெறுவோம்.

வாராஹி அருளும் ஆலயங்கள்!

காசித்ரிபுரபைரவி காட் அருகில் முன்பு பாதாள பைரவி என்று வணங்கப்பட்ட வாராஹி, காஞ்சி காமாட்சியம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சை பெரிய கோயில் வாராஹி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களேஸ்வரர் ஆலயம் அருகில் அருளும் வாராஹி, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலய வாராஹி, சென்னைமயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலய வாராஹி, ஆந்திரா பிரொடத்தூர் ராமலிங்கேஸ்வரர் ஆலய வாராஹி, பூரி ஜகன்நாதர் ஆலயம் அருகில் வாராஹி தெருவில் வீற்றிருக்கும் வாராஹி என நாடு நெடுக கோயில் கொண்டு அன்னை வாராஹி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள். பாவனோபநிஷத் குறிப்பிடும் லலிதையின் தாயாக குறிப்பிடப்படும் குருகுல்லாவிற்கும், தந்தையாக குறிப்பிடும் வாராஹிக்கும்  புவனேஸ்வருக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள கொரகொரா எனும் சிற்றூரில் தனிக் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக