புதன், 29 ஜூன், 2016

சகல செல்வங்களும் தரும்!

"அபிராமி அம்மைப் பதிகம்" -(இரண்டாவது)


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
     கலா மதியை நிகர் வதனமும், கருணை பொழி விழிகளும்,
     விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்,
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
     மணி மிடறும், மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்
     இலங்கு கர தலமும், விரல் அணியும் அரவும்,
புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும்,
     பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும்
     புகழ்ந்துமே- போற்றி என வாழ்த்த, விடை மேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து, அருள் செய்;
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (1)

சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சலச
     லோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி!
     சுலட்சணி! சாற்ற அரும் கருணாகரி!
அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோத்ரி! அமலை!
     செக சால சூத்ரி! அகில ஆத்ம காரணி! வினோத சய நாரணி!
     அகண்ட சின்மய பூரணி!
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி!
     கௌமாரி! உத் துங்க கல்யாணி! புட்ப அத்திர அம்புய
     பாணி! தொண்டர்கட்கு அருள் சர்வாணி!
வந்து அரி, மலர்ப் பிரமராதி துதி, வேத ஒலி வளர்
     திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (2)

வாச மலர் மரு அளக பாரமும், தண் கிரண மதி முகமும்,
     அயில் விழிகளும், வள்ள நிகர் முலையும், மான் நடையும்,
     நகை மொழிகளும், வளமுடன் கண்டு, மின்னார்
பாச பந்தத்திடை, மனம் கலங்கித், தினம் பல வழியும்
     எண்ணி, எண்ணிப் பழி பாவம் இன்னது என்று அறியாமல்,
     மாயப்ர- பஞ்ச வாழ்வு உண்மை என்றே,
ஆசை மேலிட்டு, வீணாக, நாய் போல் திரிந்து அலைவது
     அல்லாமல், உன்றன் அம்புயப் போது எனும் செம் பதம்
     துதியாத அசடன் மேல் கருணை வருமோ?
மாசு இலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக்
     கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ
     சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (3)

நன்று என்று, தீது என்று நவிலும் இவ் இரண்டனுள்,
     நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்,
     நானுமே அவ்விதம் நாடினேன்; நாடினாலும்
இன்று என்று சொல்லாமல், நினது திரு உள்ளம் அது இரங்கி,
      அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்,
      மெய்யான மொழி இ•து;உன் இதயம் அறியாதது உண்டோ?
குன்றம் எல்லாம் உறைந்து, என்றும் அன்பர்க்கு அருள்
      குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி!
      விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி!
மன்றல் மிகு நந்தன வனங்கள், சிறை அளி முரல,
      வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
      சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (4)

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; நான் உலகத்து
      உதித்த இந் நாள் வரைக்கும் ஒழியாத கவலையால்,
      தீராத இன்னல் கொண்டு, உள்ளம் தளர்ந்து, மிகவும்
அரு நாண் அற்றிட்ட வில் போல் இருக்கும் இவ்
      அடிமைபால் கருணை கூர்ந்து, இங்கு அஞ்சேல் எனச் சொல்லி,
      ஆதரிப்பவர்கள் உனை அன்றி இலை உண்மையாக;
இரு நாழிகைப் போதும் வேண்டாது, நிமிடத்தில் இவ் அகில
      புவனத்தையும் இயற்றி, அருளும் திறம் கொண்ட நீ,
      ஏழையேன் இன்னல் தீர்த்து, அருளல் அரிதோ?
வரு நாவலூரர் முதலோர் பரவும், இனிய புகழ் வளர்
      திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
      சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (5)

எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்
      ஏறிட்டு ஒறுக்க, அந்தோ! எவ்விதம் உளம் சகித்து
      உய்குவேன்? இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்,
நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான்
      அனுபவித்தது இல்லை; நாடு எலாம் அறியும், இது கேட்பது ஏன்?
      நின் உளமும் நன்றாய் அறிந்து இருக்கும்;
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன்
      ஆனாலும், நினது பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து,
      எனது புன்மையை அகற்றி அருள்வாய்;
மண்ணவர்கள், விண்ணவர்கள் நித்தமும் பரவும்,
     இசை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (6)

தெரிந்தோ, அலாது, தெரியாமலோ, இவ் அடிமை
     செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
     கணக்காக வையாது, நின் திரு உளம் இரங்கி, மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து,
     இனல் படாது, நல் வரம்அளித்துப், பாதுகாத்து அருள் செய்ய
     வேண்டும்; அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன், போதன், மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
     பதாம்புய மலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி!
     புராணி! திரி புவனேசுவரி!
மருந்தினும் நயந்த சொல் பைங் கிளி! வராகி! எழில்
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (7)

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினுக்கா
      வேண்டினும், மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும்,
      தீமை ஆம் வழியினில் செல்லாமலும்,
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும், வீண்
      வம்பு புரியாமலும், மிக்க பெரியோர்கள் சொலும்
      வார்த்தை தள்ளாமலும், வெகுளி அவை கொள்ளாமலும்,
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத், தமியேனுக்கு
     அருள் புரிந்து, சர்வ காலமும் எனைக் காத்து
     அருள வேண்டினேன்; சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (8)

எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்,
     அவர்கள் கேட்டு, இவ் இன்னல் தீர்த்து, உள்ளத்து இரங்கி,
     நன்மைகள் செயவும், எள் அளவும் முடியாது; நின்
உனதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின், உதவாத
     நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை ஆகும்;
     அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து,
முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும்
     நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து, சடுதியில்
     காத்து, ரட்சித்தது ஓர்ந்து,
வனசம் நிகர் நின் பாதம் நம்பினேன், வந்து அருள் செய்;
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (9)

கரு நீல வடிவமார் மாடு ஏறி, உத்தண்ட கன தண்ட
     வெம் பாசமும், கைக் கொண்டு, சண்ட மா காலன் முன் எதிர்க்க,
     மார்க்கண்டன் வெகுண்டு நோக்க,
இரு நீல கண்டன் எனும் நின் பதியை உள்ளத்தில்
      இன்பு கொண்டு, அருச்சனை செய, ஈசன், அவ் இலிங்கம் பிளப்ப,
      நின்னொடு தோன்றி, யமனைச் சூலத்தில் ஊன்றிப்
பெரு நீல மலை என, நிலத்தில் அன்னவன் விழப்,
      பிறங்கு தாளால் உதைத்துப், பேசு முனி மைந்தனுக்கு அருள்
      செய்தது, உனது அரிய பேர் அருளின் வண்ணம் அலவோ?
வரு நீல மட மாதர் விழி என்ன, மலர் வாவி வளர்
      திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
      சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (10)

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!
      மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்
      துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,
      அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி,
      துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்த
     வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி!
     திரி சூலி! மங்கள விசாலி!
மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக்
     கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
     சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!
(11)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக