ஞாயிறு, 12 ஜூன், 2016

குல தெய்வ வழிபாடு!




எந்த ஒரு ஹோமம், பூஜையிலும் சங்கல்பம் செய்யும்போது,

பிள்ளையாரை வணங்கிய பின்,

ஸ்ரீ குல தேவதா நமஹ!
ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ!
ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ!

என்று சொல்லச் சொல்வதை கவனித்திருப்பீர்கள்.

வீட்டில் ஏதேனும் மனக் குறையிருந்தால், பெரியவங்க  கேப்பாங்க - குலதெய்வ வழிபாடெல்லாம் சரியாகச் செய்கிறீர்களா என்று. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது குல தெய்வ வழிபாடு.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்,

ஓம் கணேசாய நமஹ!
ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ!
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ!
ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ!

என்று ஒரு முறை அல்லது மூன்று முறை சொல்லுங்க. இதற்கு ஒரு நிமிடம்தான் ஆகும்.

இஷ்ட தேவதை என்பது - நம்மில் பலருக்கும் சிறு வயதில் போன கோவில் அல்லது முருகன், பிள்ளையார், மீனாட்சி அம்மன் என்று ஒரு தெய்வ வடிவம் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்தத் தெய்வத்தை இஷ்ட தெய்வமாக நினைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட தேவதை என்பது - நம் வாழ்வில் நடந்த இனிய சம்பவங்கள் - இந்த சாமியை தரிசனம் செய்த பின் நடந்தது, இந்தக் கடவுளுக்கு வேண்டிக்கிட்டதும் எல்லாம் நல்லாவே நடக்குது என்று ஒரு நம்பிக்கை இருக்கலாம். அந்தத் தெய்வத்தை அதிர்ஷ்ட தேவதையாக நினைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் பூஜையறையில் ஒரு உண்டியல்/டப்பா வைத்துக் கொள்ளுங்கள். இதில் குல தெய்வத்துக்கான காணிக்கையை போட்டு வைக்கலாம். எவ்வளவு என்பது அவரவர் விருப்பம்.

மாதம் ஒரு முறை ஒரு சிறிய தொகை போடலாம்.

வெளியூர்ப் பயணம் கிளம்பும்போது காணிக்கை போடலாம்.

வீட்டில் யாருக்காவது உடல் நலம் சரியில்லையென்றால்/ஏதாவது செக் அப்புக்கு ஹாஸ்பிடல் போனால், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, உண்டியலில் காசு சேர்க்கலாம்.

மனதில் நினைத்த நல்ல காரியம் நல்லபடி நடந்ததும், ஆண்டவனுக்கு நன்றி சொல்லி, காசு போட்டு வைக்கலாம்.

இப்படி உண்டியலில் சேர்ந்த தொகையை, வருடம் ஒரு முறை குல தெய்வக் கோவிலுக்குப் போகும்போது, அங்கு உள்ள உண்டியலில் சேர்க்கலாம். அல்லது அந்தத் தொகையைக் கொண்டு, அபிஷேகப் பொருட்கள், மாலை, பூ, வஸ்திரங்கள்(தெய்வத்துக்கான ஆடைகள்) எல்லாம் வாங்கலாம்.

வருடம் ஒரு முறை - எப்போது?

நம் வீட்டில் மாசி மாதத்தில்(ஃபிப்ரவரி - மார்ச்) வரும் சிவராத்திரியன்று கோவிலில் பூஜைகள் நடக்கும். அப்போது போகலாம்.

குழந்தைகளுக்கு முதல் மொட்டை - குலதெய்வக் கோவிலில் போட்டு விட்டு, அதற்குப் பிறகு, மற்ற கோவில்களில் நம் பிரார்த்தனைபடி செலுத்தலாம்.

விரும்பினால் காது குத்தும் வைபவத்தையும், கோவிலிலேயே செய்யலாம்.

கோவிலுக்கு பூஜைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்:

அபிஷேகப் பொருட்கள்:

மஞ்சள் பொடி
நல்லெண்ணெய்
நெய்
சந்தனாதித் தைலம்
பன்னீர்
ஆண்டாள் ஸ்னானப் பவுடர்
பச்சரிசி மாவு
சந்தனம்
விபூதி
இளநீர்
தேன்
பால்
பச்சைக் கற்பூரம்

கோவிலில் பொங்கல் வைப்பதாக இருந்தால்:

பச்சரிசி, மண்டை வெல்லம், கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு, நெய், பாசிப்பருப்பு, பொங்கல் பானை, கரண்டி, தட்டுக்கள், தீப்பெட்டி.

பூஜைப் பொருட்கள்:

ஊதுபத்தி
சூடன்
சாம்பிராணி
தசாங்கம்
சந்தனம்
நல்லெண்ணெய்
வெற்றிலை
பாக்கு
பழங்கள்
கல்கண்டு
தாம்பாளங்கள்

இவற்றுடன், புதிய அகல் விளக்குகள் 12 அல்லது 15  வாங்கிக் கொள்ளவும். (வாங்கியதும் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இவற்றைப் போட்டு வைக்கவும்.  பிறகு காய வைத்து, எடுத்துக் கொள்ளவும். விளக்கேற்றும்போது நெய்/எண்ணெயை, உறிஞ்சாமல் இருக்கும்)

பஞ்சுத்திரி இரண்டு கட்டு, விளக்கேற்ற நெய் அல்லது நல்லெண்ணெய் தனியாக வைத்துக் கொள்ளவும்.

கோவிலில் இந்த விளக்குகளை ஏற்றி வைக்கவும். முதலில் பிள்ளையாருக்கும், பிறகு மற்ற தெய்வஙகளுக்கும் விளக்கு  ஏற்றவும்.


சுவாமிக்கு உடைக்கத் தேங்காய்கள்

மாலை/பூக்கள்



வஸ்திரங்கள்:

குடும்பங்களில் நடக்கும் திருமணங்கள், புதுமனை புகு விழாக்கள் போன்ற விசேஷங்களுக்கு, முதல் பத்திரிக்கையை குல தெய்வத்துக்கு வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் இவற்றுடன் பத்திரிக்கையை வைக்க வேண்டும்.

மேலே சொன்ன பூஜை முறைகளை (அபிஷேகம், பொங்கல் வைப்பது, அர்ச்சனை செய்வது, வஸ்திரங்கள் சார்த்துவது) வருடம் ஒரு முறையோ அல்லது முடிந்த போதோ செய்யலாம்.

நேரடியாக வந்து செய்ய முடியவில்லையென்றால், காணிக்கையை அனுப்பி வைக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக