வியாழன், 9 ஜூன், 2016

பதார்த்த குண சிந்தாமணி!



பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்

மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே. (1506)

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்

மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே.  (1507)

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்

வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே (1508)

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை

வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே (1509)

எளிமையாய்ப் புரிந்துகொள்ள இதன் பொருள்:

பாலும், பால் சேர்ந்த உணவும் உண்போம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.
பகல்நேரத்தில் போகத்தில் ஈடுபட மாட்டோம்.
தன்னைவிட வயதில் மூத்த பெண்களோடும், பொதுமகளிரோடும் கூடமாட்டோம்.

காலை நேரத்து இளம்வெயிலில் திரிய மாட்டோம்.
மலத்தையும், சிறுநீரையும் அடக்க மாட்டோம்.
சுக்கிலத்தை அடுத்தடுத்து விட மாட்டோம்.
இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுப்போம்.

மூலவியாதியை உண்டாக்கும் பதார்த்த வகைகளை உண்ண மாட்டோம்.
புளித்த தயிரை உண்போம்.
முதல்நாள் சமைத்த கறி அமிர்தத்துக்குச் சமமானாலும் புசிக்கமாட்டோம்.
பசித்தால் ஒழியச் சாப்பிட மாட்டோம்.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம்.
இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம்.
மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம்.
பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம்.

கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம்.
பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம்.
நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து உண்போம்.
ஒன்றரை மாதத்துக்கு ஒரு தடவை மூக்கிற்கு மருந்திட்டுக்கொள்வோம்.
வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்துகொள்வோம்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்.

மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம்.
நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம்.
மாதவிடாய் நேரத்துப் பெண்டிராலும், ஆடு, கழுதை, பெருக்கும் துடைப்பம் இவற்றாலும் எழும் புழுதி உடல் மேல்படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம்.
பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம்.
உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், அழுக்குடை அணிதல் இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம்.

பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம்.
நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம்.
ஆனபடியால், நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக