புதன், 29 ஜூன், 2016

ஆண்டாளின் செல்லக் கிளி!



கொஞ்சம் ஆண்டாளின் கிளி பற்றியும் தெரிந்துக் கொள்வோமா ?

இதற்குப் பெயர் கல்யாணக் கிளி … அரங்கனுக்கு கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள் … தூது சென்று வந்தக் கிளியிடம் , உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று ஆண்டாள் கேட்க , கிளியும் … உங்கள் கையில் நான் என்றும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்கு இணங்க …. ஆண்டாள் கையில் கிளி எப்பொழுதும் இருப்பது ஐதீகம் ….



அரங்கனிடம் காதல் தூது சென்றதால் , இந்தக் கிளிக்கு , கல்யாணக் கிளி என்று பெயர் வந்தது .

இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள் … எப்படிச் செய்கிறார்கள் தெரியுமா ?

அது ஒரு தனிக்கலை , அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள் .

சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் . ஏழு இலை என்று சொல்லப் படுகின்ற மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும் .

நந்தியாவட்டை இலைகளை கிளியின் இறக்கைகளுக்கும் பயன் படுத்துகிறார்கள் . கிளி உருவாக பயன் படுத்தப் படுகிற சிறிய மூங்கில் குச்சிகளை அந்த இலைகள் மறைத்து விடுகின்றன .

கிளி அமர்ந்திருப்பது போல காண்பிப்பதற்கு , நந்தியாவட்டை பூக்களே கிளியின் கால்களாக அமைக்கப் படுகின்றன . இறக்கைகளுக்கு முதலில் பனைஒலையும் , அதன் மேல் இலைகளும் போர்த்தப் படுகின்றன .

கிளியின் வால் பகுதிக்கு , வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுக்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன . கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்கிற பொருளை உபயோகிக்கின்றனர் .

சிவப்பு நிற மாதுளம் பூ , கிளியின் மூக்கிற்கு பயன் படுத்தப் படுகிறது . 

இவ்வாறான ஒரு கிளியைத் தயாரிக்க 4 மணி நேரம் ஆகிறது ….

தினமும் , அந்தக் குறிப்பிட்ட குடும்பத்தினர் இவ்வாறு பிரத்யேகமாக தயாரிக்கும் கிளியை மாலை நேரம் பூஜையின் பொழுது ஆண்டாளுக்கு சாற்றுகிறார்கள் ….திருமலையிலும் , திருவரங்கத்திலும் நடக்கும் பிரம்மோத்சவம் காலங்களில் , ஆண்டாளுக்கு சாற்றப் பட்ட இக்கிளி தான் இங்கிருந்து பிரத்யேகமாக எடுத்துச் செல்லப் பட்டு பெருமாளுக்கும் சாற்றுவார்கள் …

இது தவிர்த்து , அதே மாதிரியான கிளிகள் அங்கு பலரால் தயாரிக்கப் பட்டு விற்கப் படுவதுமுண்டு .





கிளி கொஞ்சும் ஆண்டாள்!













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக