புதன், 29 ஜூன், 2016

அபிராமி அம்மை பதிகம் - 1

காப்பு

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,
ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு

நூல்

கலையாத கல்வியும், குறையாத வயதும்,
     ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
      குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
      தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
      மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
      ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
      துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
      பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
      ஆதி கடவூரின் வாழ்வே!
      அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
      அருள் வாமி! அபிராமியே! (1)

கார் அளக பந்தியும், பந்தியின் அலங்கலும்,
      கரிய புருவச் சிலைகளும்,
      கர்ண குண்டலமும், மதி முக மண்டலமும்,
      நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக்,
கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும்,
      சிறிய கொவ்வையின் கனி அதரமும்,
      குமிழ் அனைய நாசியும், குந்த நிகர்
      தந்தமும் கோடு சோடான களமும்,
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும்,
     மேகலையும், மணி நூபுரப் பாதமும்,
     வந்து எனது முன் நின்று, மந்தகாசமுமாக
     வல் வினையை மாற்றுவாயே;
ஆர மணி வானில் உறை தாரகைகள் போல
     நிறை ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (2)

மகர வார் குழை மேல் அடர்ந்து, குமிழ் மீதினில் மறைந்து,
      வாளைத் துறந்து, மைக் கயலை வென்ற நின் செங்கமல
      விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ-
செகம் முழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து,
      மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச், செங்கோலும்,
      மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிரி உலகு ஆண்டு, பின்பு
புகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி, நிறை புத்தேளிர்
      வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப் புகழ
      விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்;
அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே!
      ஆதி கடவூரின் வாழ்வே!
      அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
      அருள் வாமி! அபிராமியே! (3)

மறி கடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும்,
      மாதிரக் கரி எட்டையும், மா நாகம் ஆனதையும்,
      மா மேரு என்பதையும், மா கூர்மம் ஆனதையும், ஓர்
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும்,
     புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவனையும்,
     அரையில் புலி ஆடை உடையானையும்,
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்,
     பழைமை முறைமை தெரியாத நின்னை-
     மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
     மொழிகின்றது ஏது சொல்வாய்?
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (4)

வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர,
      அருள் மழை பொழிந்தும்,
      இன்ப வாரிதியிலே நின்னது அன்பு எனும்
      சிறகினால் வருந்தாமலே அணைத்துக்,
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக்
      கூட்டம் முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும்
      புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்,
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்
     உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை
     என்று ஓதும்; நீலி என்று ஓதுவாரோ?
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ்
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (5)

பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு
     பல் உயிர்க்கும், கல் இடைப் பட்ட தேரைக்கும்,
     அன்று உற்பவித்திடு கருப் பை உறு சீவனுக்கும்,
மல்கும் சராசரப் பொருளுக்கும், இமையாத வானவர்
குழாத்தினுக்கும், மற்றும் ஒரு மூவருக்கும், யாவருக்கும்,
அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே,
நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும்,
     மிகு நவ நிதி உனக்கு இருந்தும்,
     நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால்,
அந் நகைப்பு உனக்கே அல்லவோ?
அல் கலந்து, உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை,
     ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே! (6)

நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று, நித்தமாய்,
முத்தி வடிவாய், நியமமுடன் முப்பத்து இரண்டு
அறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்,-
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து, கால் வேசற்று,
     இலச்சையும் போய், வெண் துகில் அரைக்கு அணிய
     விதியற்று, நிர்வாண வேடமும் கொண்டு, கைக்கு ஓர்
ஓடு ஏந்தி, நாடு எங்கும் உள்ளம் தளர்ந்து நின்று,
     உன்மத்தன் ஆகி, அம்மா! உன் கணவன் எங்கெங்கும் ஐயம்
     புகுந்து, ஏங்கி, உழல்கின்றது ஏது சொல்வாய்?
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (7)

ஞானம் தழைத்து, உன் சொரூபத்தை அறிகின்ற
     நல்லோர் இடத்தினில் போய், நடுவினில் இருந்து, உவந்து,
     அடிமையும் பூண்டு, அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு,
ஈனம்தனைத் தள்ளி எனது, நான் எனும் மானம்
     இல்லாமலே துரத்தி, இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து,
     நெஞ்சு இருள் அற, விளக்கு ஏற்றியே-
வான் அந்தம் ஆன விழி அன்னமே! உன்னை என்
     அகத் தாமரைப் போதிலே வைத்து, வேறே கவலை அற்று,
     மேல் உற்ற பர வசம் ஆகி, அழியாதது ஓர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
     ஆதி கடவூரின் வாழ்வே?
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (8)

சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற தாய் ஆகில்,
     எனக்குத் தாய் அல்லவோ? யான் உன் மைந்தன் அன்றோ?
     எனது சஞ்சலம் தீர்த்து, நின்றன்
முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி, என் முகத்தை உன்
     முந்தானையால் துடைத்து, மொழிகின்ற மழலைக்கு
     உகந்துகொண்டு, இள நிலா முறுவல் இன்புற்று, அருகில் யான்
குலவி விளையாடல் கொண்டு, அருள் மழை பொழிந்து,
     அங்கை கொட்டி, வா என்று அழைத்துக்,
     குஞ்சர முகன், கந்தனுக்கு இளையன் என்று எனைக்
     கூறினால், ஈனம் உண்டோ?
அலை கடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (9)

கைப் போது கொண்டு, உன் பதப் போது தன்னில் கணப்
     போதும் அர்ச்சிக்கிலேன்; கண் போதினால், உன் முகப் போது
     தன்னை, யான் கண்டு தரிசனை புரிகிலேன்;
முப் போதில் ஒரு போதும், என் மனப் போதிலே முன்னி,
     உன் ஆலயத்தின் முன் போதுவார் தமது பின் போத நினைகிலேன்;
     மோசமே போய் உழன்றேன்;
மைப் போதகத்திற்கு நிகர் எனப் போது எரு-
     மைக் கடா மீது ஏறியே, மா கோர காலன் வரும்போது,    
     தமியேன் மனம் கலங்கித் தியங்கும்
அப் போது, வந்து உன் அருட்போது தந்து அருள்;
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (10)

மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி
     ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த,
     மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும்
     துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப்,
     பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த,
     வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை
     நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
     ஆதி கடவூரின் வாழ்வே!
     அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
     அருள் வாமி! அபிராமியே! (11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக