புதன், 29 ஜூன், 2016

திருத்தங்கல் “நின்ற நாராயணப்பெருமாள்”



பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியரிடையே, தங்களில் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,”மற்ற தேவிகளைக்காட்டிலும் எங்கள் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். இவளே அதிர்ஷ்ட தேவதை. இவளே மகாலட்சுமி(ஸ்ரீ)என்று அழைக்கப்படுபவள். தேவர்களின் தலைவன் இந்திரன் இவளால்தான் பலம் பெறுகிறான். வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்ற திருநாமங்கள் உண்டு. பெருமாள் இவளை தன் வலது மார்பில் தாங்குகிறார்என்று புகழ்பாடினர்.

பூமாதேவியின் தோழியரோ,”இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமிதேவியே. அவள் மிகவும் சாந்தமானவள். பொறுமை நிறைந்தவள். பொறுமைசாலிகளை வெல்வது அரிது. இவளைக்காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார். அப்படியெனில் இவளது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்என்று பாராட்டினர்.

நீளாதேவியின் தோழிகள்,”எங்கள் நீளாதேவி தண்ணீர் தேவதையாக இருக்கிறாள். தண்ணீரை நாரம்என்பர். இதனால் தான் பெருமாளுக்கு நாராயணன்என்ற சிறப்பு திருநாமமே ஏற்பட்டது. உலகிலுள்ள எல்லாரும் உச்சரிக்கும் நாமம் நாராயணன் நாமம். தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கச்செய்து, தாங்குபவள் எங்கள் நீளாதேவி. எனவே இவளே உயர்ந்தவள்என்றனர்.

விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்தபாடில்லை. எனவே ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடும் தவம் புரிந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள்,

'நீயே எனக்கு என்றும் பிரியமானவள். உன்னால்தான் நான் ஸ்ரீயம்பதியாக விளங்குகிறேன்.நீயே பெரிய பிராட்டி என்ற பெயருடன் விளங்குவாய்' என்று கூற, தேவியும் மனமகிழ்ந்து 'தாங்கள் இம்மலையில் பாற்கடல் போல சே ஷ சயனத்தில் என்னுடன் எப்போதும் எழுந்தருளி இருக்க வேண்டும்' என வேண்ட, நாரணரும் 'நீ தவம் இருந்த இவ்விடம் இனி ஸ்ரீக்ஷேத்திரம் என விளங்கும்'எனப் பணித்து அங்கேயே எழுந்தருளி விட்டார். 

கணவரின் பின்னால் வந்த பூதேவியும், நீளாதேவியும் மகாலக்ஷ்மியிடம் மன்னிப்பு வேண்ட தேவியும் அவர்களை தழுவி ஏற்றுக் கொண்டாள். திருவாகிய  லக்ஷ்மி தேவி இங்கு  தங்கியதால்  இத்தலம் திருத் தங்கல்  என்றாயிற்று.

ஆலமரத்தை தலமரமாகக் கொண்ட இவ்வாலயத்தில் , வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடை பெறுகின்றன.  'திருத்தங்கல் கண்டால் மறுத்தங்கல்  கிடையாது' என்ற பழமொழி  இத்தலத்தை தரிசிப்பவர்க்கு இனி மறு பிறப்பு கிடையாது என்பதைத் தெளிவாகச் சொல்லி இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.


திருத்தங்கல் பெருமாள் கோயில் தங்காலமலைமீது அமைந்துள்ளது.


ஆலயத்திற்கு சில  படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணப் பதுமைகள் காட்சி தரும் முதல் கட்டில் அர்த்த மண்டபத்தில்  பெருமாள் போக சயனராக  தேவியருடன் பள்ளி கொண்ட பெருமாள் ஸ்ரீரங்கநாதராக ஆனந்தக் காட்சி தருகிறார். ஆண்டாளைத் திருமணம் செய்ய வந்த ஸ்ரீரங்கத்து அழகிய மணவாளரே இங்கு தங்கி பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றதாக வரலாறு. பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் மனத்தை மயக்குகிறார்!


மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான நின்ற நாராயணப்பெருமாள்மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு.



சோமச்சந்திர விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் கருவறையில்  பதினோரு திருவுருவங்களுடன் நின்ற கோலத்தில் சுதையாலான மூலவரான நின்ற நாராயணப்பெருமாள்”  காட்சி தருவது எந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பு. மூலவரான நின்ற நாராயணப்பெருமாள்”  தான் அருள் புரிந்த அத்தனை பேருடனும் கர்ப்பக்கிரகத்தில் காட்சி தருகிறார்! மூலவரின் வலப்பக்கம் அன்ன நாயகியாகிய ஸ்ரீதேவி, அம்ருத நாயகியாகிய பூதேவி, மார்க்கண்டேய ரிஷி, கருடன், அருணன் (சூரியனின் சாரதி) ஆகியோரும்,

இடப்பக்கம் அனந்த நாயகி என்ற நீளாதேவி, ஜாம்பவதி, அநிருத்தன், உஷை மற்றும் பிருகு மகரிஷி ஆகியோருடன் நடுவே வலது திருக் கையால் தன் திருவடிகளைக் காட்டிக் கொண்டு 'என் பாதங்களைச் சரணடைவோரை நான் கைவிட மாட்டேன்' என்பது போலும், இடக்கையை ஒயிலாக இடுப்பில் வைத்துக் கொண்டும்,அற்புதமான தரிசனம்  தருகிறார். இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில் தான் பெருமாள் திருமணம் செய்து கொண்டாராம்.


உற்சவர் திருத்தங்கலப்பன் எனப் படுகிறார். அவரும் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். பெருமாளுக்கு விசே ஷ நாட்களில் தைலக் காப்பு நடைபெறும்.

பிரகாரச் சுற்றில் ஆண்டாளும், தாண்டவக் கண்ணனும் எழுந்தருளியுள்ளனர்.



இரண்டாம் கட்டில் நான்குகால் மண்டபம், வாகன அறைகள் உள்ளன.

இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு. இத்தலத்தில், தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார்.



இங்கு  உயர்ந்து நின்ற திருக்கோலத்தில், வலக்கையில் அபய முத்திரையும், இடக் கையைத் தொங்க விட்டும் நின்ற நிலையில் தரிசனம் தரும் தாயாரின் அழகு எந்த ஆலயத்திலும் காணக்   கிடைக்காத காட்சி.

நாம் வேண்டுவதை உடன் நிறைவேற்றித் தரும் வரப்பிரசாதி இந்த அன்னை. திருமணம், பிள்ளைப்பேறு, வேலை என்று எதை வேண்டிக்கொண்டும் அம்மனுக்கு ஒன்பது கஜம் நூற்புடவை வாங்கிச்  சாத்துவதாக வேண்டிக் கொண்டால் அவை விரைவில் நிறைவேறுமாம்.இந்த நாச்சியாருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. தாயாருக்கு ஆராதனம் தொடங்கிய பின்பே பெருமாளுக்கு தொடங்கும்.


இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியன தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவிலைப்போல் இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

ஒரு சமயம் கங்கை முதலான 61 நதி மங்கையர் இந்த மலையில் தங்கியிருக்கும் நாராயணரிடம் 'எங்களில் நீராடுவோரின் பாபங்கள் நிறைந்த எங்களை அப்பாபச் சுமையில் இருந்து விடுபட அருள வேண்டும்' எனக் கேட்டனர். பகவானும் 'இக்கோயிலின் வாயிலிலுள்ள பாபநாச தீர்த்தத்தில் நீராடினால் உங்கள் பாபங்கள் நீங்கும். இக்குளக் கரையில் செய்யும் தேவகாரியங்கள்  ஒரு கோடியாகப் பலன் பெறும். இதில் நீராடுவோர் முக்தி அடைவர்' என்று அருளினார். இங்குள்ள பாபநாச தீர்த்தம் மிக
விசே ஷமானது.


இங்குள்ள பாஸ்கர தீர்த்தம் ஒரு அந்தணரை அறியாமல் கொன்றதால் சூரிய தேவனுக்கு ஏற்பட்ட  பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய சிறப்பு பெற்றது. ஊருக்கு வடக்கே ஓடும் அர்ச்சுன நதியும் இவ்வாலய தீர்த்தமாகப் போற்றப் படுகிறது. பாண்டவர்கள் வனவாசத்தின் சமயம் இங்கு வந்தபோது அர்ச்சுனன் கங்கையை நினைத்து பூமியில் வருணாஸ்திரத்தை விட கங்காதேவி பெருக்கெடுத்து வந்தாள். இந்நதி மிகப் புனித நதியாகும்

மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தனது தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி ஓவியமாக வரையக்கூறினாள். ஓவியம் வரைந்த பிறகு தான், அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம்பிடித்தாள்.
சித்ரலேகை துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிகொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வாணனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்தவற்றை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான்

அப்போது அசரீரி தோன்றி,”வாணா! இத்தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய்என ஒலித்தது. இதைக்கேட்ட வாணன் அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி இத்தலத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து,  திருத்தங்கலிலேயே கண்ண பிரான் தாமும் மனைவியருடன் திருக் கல்யாணக் காட்சி தந்தருளி அவ்விடத்திலேயே அனைவருடனும் ஆலயம் கொண்டார்.

சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா,”ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்எனக் கூறினார். வருத்தமடைந்த ஆலமரம் தனது சிறப்பை உயர்த்த பெருமாளை நோக்கித் தவமிருந்தது

தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், “உனது விருப்பம் என்ன?” எனக் கேட்டார். அதற்கு ஆலமரம்,”தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீது பள்ளிகொண்டருள வேண்டும்எனக் கேட்டது. அதற்கு பெருமாள்,”திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக. நான் திருமகளைத் திருமணம் செய்ய வரும் காலத்தில், உன் மீது நின்றும், பள்ளிகொண்டும் அருள்பாலிப்பேன்என்றார். மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், தங்கும் ஆல மலை எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது.

காலவரிஷி முனிவரின் குமாரராகிய சிந்துமாமுனிவருக்கு பிரம்மனின் அருளால் சுகிருதி, விகிருதி என்ற புதல்விகள் பிறந்தனர். சிந்துமாமுனிவர் தன் பெண்களிடம்,”உங்களுக்கு ஏற்ற மணவாளனை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்என்றார். சுகிருதி சூரியபகவானையும், விகிருதி சுசர்மா என்பவனையும் கணவனாகத் தேர்ந்தெடுத்தார்கள். சூரியனை கணவனாக அடைய சுகிருதி கடும் தவம் இருந்தாள். அப்போது சண்டகோஷன் என்ற அரக்கன் அவளைத் தூக்கிச் சென்றான். வருந்திய அவள், சூரியனிடம் தன்னைக் காத்தருள வேண்டி கதறினாள். சூரியன் தன் சக்திகளில் ஒன்றான சண்டசக்தியை அரக்கனை நோக்கி ஏவினார்

அப்போது, அரக்கன் சுகிருதியை விட்டுவிட்டு ஒரு பிராமணர் அருகில் சென்று நின்று கொண்டான். அரக்கனை அழிக்க வந்த சண்டசக்தி பிராமணனையும் சேர்த்து அழித்து விட்டது. இதனால் சூரியனுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. வருந்திய சூரியன் பெருமாளை வேண்டினார். பெருமாள்,”ஸ்ரீ யாகிய மகாலட்சுமி தவம் செய்யும் திருத்தங்கல் தீர்த்தத்தில் நீராடினால் உனது தோஷம் நீங்கும்என்றார். சூரியனும் அதன்படி நீராடி பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) நீங்கப் பெற்றார்.



கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை.


அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். அருணன், மார்க்கண்டேயர், பிருகு மகரிஷி ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவன், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன

ஆழ்வார்கள் இத்தல பெருமாளை திருத்தங்காலப்பன் என்ற பெயரில் தான் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 48வது தலம். பாண்டி நாட்டு திவ்ய தேசத்தில் 5வது தலம். இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானது. இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.

இத்தலம் பூதத்தாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சித்ரா பௌர்ணமி, வைகாசியில் வசந்தோத்சவம்,ஆனியில் பிரம்மோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, சித்ரா பௌர்ணமி, பங்குனியில் திருக்கல்யாண உத்சவம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

பெருமாளுக்கு பரிவட்டம் சாத்தியும், பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புளியோதரை படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தாம் விரும்பும் வாழ்க்கைத் துணையை மணக்க விரும்புவோரும், இனிய தாம்பத்திய வாழ்க்கையை விரும்புவோரும் வழிபட வேண்டிய இறைவன் இவர். இத்தனை சிறப்புகளோடு திகழும் இந்த ஆலயத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டியது அவசியம்.


இவ்வாலயம் விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

ஆலய நேரம். காலை 6--9  மாலை 4--8 
தொடர்புக்கு...9442665443, 9443570765






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக