ஞாயிறு, 12 ஜூன், 2016

நவராத்திரி கொலு வைப்போம்!



வீட்டில் வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் வைப்பார்கள்.

எப்பொழுதும் போல, பிள்ளையார், குல தெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை மனதினுள் வணங்கி விட்டு, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச்(செப்பு) செம்பை எடுத்து, நன்றாகக் கழுவி விட்டு, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

அதனுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் இவற்றையும் போடலாம்.

கலசத்தின் மேல் மாவிலை அல்லது வெற்றிலையை சுற்றி வர வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும்.

தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.

இந்தக் கலசத்தை, கொலு அம்மனாக பாவித்து, பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும்.

கலசத்தின் மேல் தினமும் பூக்கள் வைக்க வேண்டும்.



பூஜையாக செய்ய வேண்டும் என்றில்லாமல், குழந்தைகளின் ஆசைக்காக கொலு வைப்பவர்கள், கலசம் வைக்க வேண்டும் என்பதில்லை.

புரட்டாசி மாத அமாவாசையன்று,  கொலு வைப்பதற்கான வேலைகளைத் தொடங்கலாம். (கொலு மறு நாள்தான் ஆரம்பிக்கும்)

மரப்பாச்சி பொம்மைகள் இருந்தால், அவற்றை ஜோடியாக அமாவாசையன்று கொலுப்படியில் வைத்து விடலாம்.




கொலுப் படிகள் 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 படிகள் வைக்கலாம்.

ஹாலில் கிழக்கு மேற்காக இருக்குமாறு படிகளை அமைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ரெடிமேட் ஆக, படிகள் கிடைக்கின்றன.

நம் வீட்டு ஹாலின் அளவுக்குத் தகுந்த மாதிரி, இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

கொலுவின் முன்னால், விளக்கேற்ற, வருபவர்கள் உட்கார, கொலுவைப் பார்க்க, இதற்குத் தகுந்தாற்போல, இடத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்,





படிகளை அமைத்த பின், சுத்தமான வெள்ளைத் துணியை, படிகளின் மேல் விரிக்க வேண்டும்.

மேல் படிகளில், முதலில் நடுவில் பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.

அடுத்த படியாக மீனாட்சி கல்யாணம், தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம்.

அதற்கு அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆனவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.(விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, பரம ஹம்ஸர்)

பிறகு, மற்ற பொம்மைகள் - கிரிக்கெட் வீரர்கள், குறவன் குறத்தி, செட்டியார் பொம்மைகள் இப்படி வைக்கலாம்.

பிறகு மிருக பொம்மைகள் - சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் போன்றவை.

அடுத்த படியில் பறவை பொம்மைகள்.

கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம்.

கலசம் வைப்பதாக இருந்தால், கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ(கைக்கு எட்டும் தூரத்தில்) கலசத்தை வைக்கலாம். தினமும் பூ வைக்க வேண்டும். பூப் போட்டு, பூஜை செய்ய வேண்டும் அல்லவா.

கலசம் வைக்கவில்லை என்றாலும், கொலு என்பது அம்மன் வடிவம்தான். அதனால் தினமும் மாலையில் விளக்கேற்றி, சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் தினமும் செய்ய வேண்டும்.

தினமும் கொலுவின் முன்னால், தெரிந்த கோலங்களைப் போடவும். முடிந்தால் ரங்கோலி போடலாம்.

கொலுவின் இரண்டு பக்கமும் கீழே விளக்கேற்றி வைக்கலாம். பாதுகாப்பு குறைவு, குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பூஜையறையில் மட்டும் ஏற்றினாலும் போதும். நைவேத்தியத்தையும் பூஜையறையில் விளக்கேற்றி, நைவேத்தியம் செய்து, கொலுவுக்கு முன்னால், கொண்டு வந்து வைக்கலாம்.



அமாவாசைக்கு அடுத்த நாள் கொலு ஆரம்பம்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு.
அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி வழிபாடு.
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

யு ட்யூபில் துர்க்கா பாடல்கள், மஹாலஷ்மி ஸ்லோகங்கள், சரஸ்வதி ஸ்லோகங்கள் கிடைக்கும். இவற்றை மாலை நேரங்களில் ஒலிக்க விடுங்கள்.

லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி இவற்றைப் படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்து, கேட்கலாம்.

ஸ்ரீஸுக்தம், ஸ்ரீ தேவி பாகவதம் இவையும் ஒலி வடிவில் யு டியூபில் கிடைக்கின்றன. இவற்றையும் மாலை வேளைகளில் ஒலிக்கச் செய்யுங்கள்.

வீட்டுப் பெண்கள் தினமும் சுத்தமான, உடைகளை உடுத்தி, மலர் சூடி, மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

இன்னும் சில குறிப்புகளை கீழே தருகிறேன். இவற்றில் எதெல்லாம் செய்ய முடிகிறதோ, அவற்றை செய்யலாம்.

ஒன்பது நாட்களும் -  முதல் நாள் - இரண்டு வயது குழந்தை தொடங்கி, பத்து வயது சிறுமி வரை வீட்டுக்கு அழைத்து, ‘குமாரி பூஜை’ செய்யலாம்.

’குமாரி பூஜை’ என்பது, குறிப்பிட்ட வயதுக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து,(அல்லது நம் வீட்டுக் குழந்தைக்கும் செய்யலாம்) , ஒரு கோலமிட்ட பலகையில் கிழக்குப் பார்த்து, உட்கார வைக்க வேண்டும்.

சந்தனம், குங்குமம், பூ கொடுக்க வேண்டும்.

சுண்டல், இனிப்பு, ஏதேனும் பரிசு, தட்டில் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூவுடன் கொடுக்க வேண்டும்.

முடிந்தால், பொருத்தமான உடைகள் கூடக் கொடுக்கலாம்.

குமாரி பூஜை:

இந்த குமாரி பூஜையின் பலனை ஆயிரம் நாவைக் கொண்ட ஆதிசேஷனாலும் அளவிட்டுக் கூற முடியாதாம், அந்த அளவுக்கு நற்பலன்கள் கிடைக்குமாம்.

நாள்     சிறுமியின் வயது     தேவதா பெயர்     பூஜா பலன்

1                       2                        குமாரிகா                    தரித்திர நாசம்
2                       3                        திரிமூர்த்தி                தன தான்ய வளம்
3                       4                        கல்யாணி                  பகை ஒழிதல்
4                       5                        ரோகிணி                    கல்வி வளர்ச்சி
5                       6                        காளிகா                       துன்பம் நீங்குதல்
6                       7                        சண்டிகா                     செல்வ வளர்ச்சி
7                       8                        ஸாம்பவி                  ஷேம விருத்தி
8                       9                        துர்க்கா                        பயம் நீங்குதல்
9                     10                        ஸுபத்ரா                    ஸர்வ மங்களம் உண்டாதல்

பரிசுப் பொருட்களுக்கான யோசனைகள்:

ரவிக்கைத் துணி, ஸ்டிக்கர் பொட்டு, மருதாணி கோன், ஹேர் பாண்ட், கிளிப்கள், சிறிய பூஜை புத்தகங்கள், சிறிய கண்ணாடி, சீப்பு, கண் மை, ஐப்ரோ பென்சில், ஐ லைனர், சிறிய லேடீஸ் கர்சீப்கள், பேனா, பென்சில்கள், ஸ்டேஷனரி பொருட்கள்,  குளிக்கும் சோப்கள், லிக்விட் சோப்கள், சென்ட் பாட்டில்கள்,  பார்பி பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை.


தினமும் இரவு படுக்கப் போகு முன், மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்த ஆரத்தி எடுக்க வேண்டும். இதை, கால் படாத இடத்தில்(செடியின் கீழ்) ஊற்றி விட வேண்டும்.

தெய்வத்துக்கு எடுக்கும் ஆரத்தியை, கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தியை, வாசலில் கோலத்தில் ஊற்ற வேண்டும்.



ஒன்பது நாட்களும் கொலுவின் முன்னால் கோலங்கள்:

1. அரிசி மா                               பொட்டுக் கோலம்
2. கோதுமை மா                     கட்டம்
3. முத்து                                     மலர் வடிவம்
4. அட்சதை                               படிக்கட்டு
5. கடலை                                  பறவையினம்
6. பருப்பு                                     தேவி நாமம்
7. மலர்                                        திட்டாணி
8. காசு                                          பத்மம்(தாமரை)
9. கற்பூரம்                                  ஆயுதம்

ஒன்பது நாட்களிலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் அவர்கள் நீராடுவதற்காக

பச்சிலை,
பூலாங்கிழங்கு
சண்பக மொட்டு
கஸ்தூரி மஞ்சள்
திரவியப் பட்டை
காசுக்கட்டி
லாஷாரசம்
கஸ்தூரிகாபத்ரம்
கோரோசனம்

மற்றும்

எண்ணெய்
மஞ்சள்
குங்குமம்
பன்னீர்
சந்தனம்
வாசனைத் தைலம்
நலங்கு மஞ்சள்
மருதோன்றி
புஷ்ப நீர்

இவற்றில் எதெல்லாம் கொடுக்க முடிகிறதோ, அவற்றைக் கொடுக்கலாம்.

தாம்பூலத்துடன்

வாழை, மாம்பழம், பலா, கொய்யா, மாதுளை, நாரத்தை, பேரீச்சைப் பழம், திராட்சை, நாவற்பழம்
 இவற்றை அனைவருக்கும் கொடுக்கலாம்.

நவராத்திரி ஒன்பது நாட்களும், அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை நம் வீட்டுக் கொலுவுக்கு வரும்படி அழைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல உடை உடுத்தி, கையில் சந்தனம், குங்குமம் கொடுத்து, மற்றவர்களை அழைக்கச் சொல்லலாம்.

நவராத்திரியின் போது, தினமும் வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல், தாம்பூலமும் நைவேத்திய பிரசாதமும் கொடுக்க வேண்டும்.

வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் தாம்பூலம், பரிசு வழங்க வேண்டும். வித்தியாசம் பார்க்கக் கூடாது.


நவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்

சுண்டல்
வறுவல்
துவையல்
பொறியல்
அப்பளம்
வடகம்
சூரணம்
முறுக்கு
திரட்டுப்பால்

வெண்பொங்கல்
புளியோதரை
சர்க்கரைப் பொங்கல்
கதம்ப சாதம்(காய்கறி கலந்த சாதம்)
தயிர் சாதம்
தேங்காய் சாதம்
எலுமிச்சம்பழ சாதம்
பாயசம்
அக்கார அடிசல்


இவற்றை செய்யலாம்

கடைசி நாளன்று மகா நைவேத்தியம் என்று சொல்லப்படும் வெள்ளை சாதம் படைக்க வேண்டும்.(இவற்றை வடிக்கக்கூடாது. குக்கரில் பொங்கி இறக்கலாம்.)

கடைசி நாளன்று சுத்தான்னம்(வெள்ளை சாதம்), இலை வடகம், வெண்ணெய், சுக்கு வென்னீர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

மேலே சொன்னவற்றில் எதெல்லாம் முடிகிறதோ, எப்படி எல்லாம் செய்ய முடிகிறதோ, அது போல செய்து கொள்ளலாம்.

நைவேத்தியத்துக்கான யோசனைகள்:

ஞாயிறு:  கோதுமையில் செய்த அப்பம் அல்லது கடலைப் பருப்பு சுண்டல்

திங்கள்: வெல்லப் பாயசம் அல்லது வெண் பொங்கல் அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலை சுண்டல்

செவ்வாய்: சிவப்பு கொண்டைக் கடலை சுண்டல் அல்லது சோயா பீன்ஸ் சுண்டல்

புதன்: பாசிப்பயறு சுண்டல் அல்லது பச்சைப் பட்டாணி சுண்டல்

வியாழன்: கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்

வெள்ளி: வெண் பொங்கல் அல்லது கல்கண்டு சாதம் அல்லது மொச்சை சுண்டல்

சனி: காராமணி சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல்

தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:

ஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு

திங்கள்:  லேசான ஹாஃப் ஒயிட் நிறம்

செவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு

புதன்: பச்சை

வியாழன்: மஞ்சள், பொன் நிறம்

வெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்

சனி:  நீல நிறம்

சரஸ்வதி பூஜை:

கொலு வைத்தாலும் வைக்கா விட்டாலும், மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.

முந்தைய பதிவான பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.

புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி(வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.

இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)

ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.

கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.

தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.

இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.

இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்

இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.

இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.

மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.

விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.

பூக்கள் வைக்க வேண்டும்.

வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.

இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.

நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.

மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.

விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.

அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.

பின் குறிப்பு:

நவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.

சாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும்.

இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக