சனி, 6 ஆகஸ்ட், 2016

வலம்புரிச் சங்கு பூஜை!


வலம்புரிச் சங்கு




பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். 'சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத்’ என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.

ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும்.அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.

புராணங்களில் வலம்புரிச் சங்கு

அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ''குருதட்சணையாக என்ன வேண்டும்?'' எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை

பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு 'பாஞ்ச ஜன்யம்’ என்று பெயர்.

கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.

கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்

திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.



பூஜிப்பது எப்படி?

வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.

விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும். பின்னர், வாசனைத் திரவியங்களான ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.

முதலில் சந்தனத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து, 'ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம:’ 'ஸ்ரீ குருப்யோ நம:’ என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும், 'சங்க பூஜாம் கரிஷ்யே’ எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.

அடுத்ததாக...

* 'மம குபேர நிதி தர்சனார்த்தம்’

* 'ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி

தந்நோ சங்க ப்ரசோதயாத்’

* 'குபேர லக்ஷ்மி ரூபாய சங்காய ஸ்வாகதம்... ஸ்வாகதம்...ஸ்வாகதம்...

என்று மூன்றுமுறை சொல்லி நீர்விட வேண்டும்.

அடுத்த நிலை, எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. அதாவது வலம்புரிச் சங்கை ஆகம முறைப்படி வர்ணித்து அதில் அமரச் செய்வதற்கு ஏதுவாக, 16 கலைகளையும் ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். அதற்குப் பிறகு சங்கை பூஜிக்கவேண்டும்.

ஓம் அம்ருதா கலாய நம:

ஓம் சந்த்ரிகா கலாய நம:

ஓம் மானதா கலாய நம:

ஓம் காந்தி கலாய நம:

ஓம் பூஷா கலாய நம :

ஓம் ஜயோத்ஸ்னா கலாய நம:

ஓம் துஷ்டி கலாய நம:

ஓம் ஸ்ரீகலாய நம:

ஓம் புஷ்டி கலாய நம:

ஓம் ப்ரீதி ரங்கதா கலாய நம:

ஓம் ரதி கலாய நம:

ஓம் பூர்ணா கலாய நம:

ஓம் த்ருதி கலாய நம:

ஓம் பூர்ண முகா கலாய நம:

ஓம் சசி ஸ்ரீ கலாய நம:

ஓம் காமதாயினீ கலாய நம:

அடுத்ததாக நவநிதிகளை அழைத்து அர்ச்சிக்கவேண்டும். 'ஓம் பத்ம நிதயே நம:’ எனத்துவங்கி சங்கம், மகரம், சுகச்சபம், முகுந்தம், குந்தாக்யம், நீலம், மகரம், வரம் என்று ஒன்பது நிதிகளையும் (முன்னும் பின்னுமாக ஓம் - நம சேர்த்து) போற்றி வழிபட்டு...

ஓம் நவநிதிதேவதாயை நம; சகலாராதனை சுவர்ச்சிதம்,
ஓம் யக்ஷேஸ்வர ரூபாய மகாசங்காய நம; சகல ஆராதனம் பூஜயேத்

என்று வணங்கவேண்டும். பிறகு குபேரனை தியானித்து, அவரது முக்கியமான 16 நாமாக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் க்லீம் குபேராய நம:

ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம:

ஓம் க்லீம் ஸ்ரீபதயே நம:

ஓம் க்லீம் நித்யானந்தாய நம:

ஓம் க்லீம் பூர்ணாய நம:

ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாசாய நம:

ஓம் க்லீம் அஸ்வாரூபாய நம:

ஓம் க்லீம் சுகாஸ்ரயாய நம;

ஓம் க்லீம் நரவாகனாய நம:

ஓம் க்லீ ம் மிகதெஸ்வர்ய ரூபாய நம;

ஓம் க்லீம் சதா புஷ்பக வாகனாய நம:

ஓம் க்லீம் சர்வக் ஞாய நம;

ஓம் க்லீம் சீல பூஜகாய நம:

ஓம் க்லீம் யக்ஷ£ய நம:

ஓம் க்லீம் கட்காறதாய நம:

ஓம் க்லீம் சீல பூஜ காய நம:

ஓம் க்லீம் ராஜயோக வராய நம:

ஓம் ஸ்ரீம் க்லீம் பாஞ்ச ஜன்ய ரூபாய நம:

குபேர அர்ச்சனை முடிந்தபிறகு, அவல் பாயசம், கற்கண்டு பால் வைத்து, தூப-தீப நிவேதனம் செய்யவும். தொடர்ந்து வெள்ளை மற்றும் சிவப்பு நிற மலர்களை எடுத்துக்கொண்டு, தரையில் மண்டியிட்டபடி...

''ஓம் வடதிசை வல்லவா போற்றி,

ஓம் நவநிதி தேவனே போற்றி

ஓம் செல்வத்தின் உருவமே போற்றி,

ஓம் கடலினில் பிறந்தாய் போற்றி,

ஓம் பரந்தாமன் கரமே போற்றி,

ஓம் வெண்ணிறத்து மேனியே போற்றி,

ஓம் திருமகள் நட்பே போற்றி,

ஓம் ஐஸ்வர்ய இருப்பிடமே போற்றி,

ஓம் ஆனந்த வடிவினனே போற்றி,

ஓம் குபேரனின் இல்லமே போற்றி,

ஓம் தோஷங்கள் விரட்டுவோய் போற்றி,

ஓம் ஈஸ்வரன் விருப்பமே போற்றி,

ஓம் ஏற்றம் தருவோய் போற்றி,

ஓம் எளிமையின் சொல்லே போற்றி,

ஓம் நாதத்தைக் கொண்டவா போற்றி,

ஓம் நலமே தருவாய் போற்றி

என்று மலர்களைச் சமர்ப்பித்து போற்றி கூறி முடித்ததும் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நிறைவாக,

* ஓம் விஷ்ணுப்ரியாய வித்மஹே வேத நாதாய தீமஹி

தந்நோ: ஸங்க ப்ரசோதயாத்

* சங்கு ரூப லக்ஷ்மி குபேர நாராயண ஸ்வாமினே நம:

* கற்பூர நீராஜன தீபம் தரிசயாமி என்று ஆர்த்தி செய்து பிரசாதம் எடுத்துக்கொண்டு சங்கு தீர்த்தத்தை வீட்டின் எல்லா பாகங்களிலும் தெளிக்கவேண்டும்.

- வழிபடுவோம்

சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமை யால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைப்பட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.

கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்த வரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன் படாமல் கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.

குழந்தைப் பேறுபெற  வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும்.

ஆலயங்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட செல்வம் சேரும்.

ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக