வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

“கந்தர் சஷ்டி கவசம்!”

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
 
மைய நடஞ்செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருக!
வருக வருக மயிலோன் வருக!
 
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக! 
வாசவன் மருகா வருக வருக! 
நேசக் குறமகள் நினைவோன் வருக!
 
ஆறுமுகம் படைத்த ஐயா வருக!
நீறிடும் வேலன் நித்தம் வருக!
சிரகிரி வேலன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக!
 
சரவண பவச, ரர ரர ரர ர
ரிவண பவச, ரிரி ரிரி ரிரி ரி
விணபவ சரவண, வீரா நமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென
 
வசர வணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக!
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாச அங்குசமும்
 
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க 
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! 
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொலி சௌவும், உயிரையுங் கிலியும்
 
கிலியுஞ் சௌவும், கிளரொளியையும்
நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும், தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக!
 
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறுடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
 
ஈரறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்
 
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
 
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
 
நகநக நகநக நகநக நகெனெ
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
 
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
 
எந்தனையாளும் ஏரகச்செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
 
உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலை வைத்துன் இனையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
 
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
 
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திரு பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
 
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
 
வடிவேலிரு தோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
 
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
 
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவெல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
 
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின் கையிரண்டும் பின்னவள் இருக்க
 
நாவில் சரஸ்வதி நற்றுனையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
 
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
 
தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
 
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்கதரும்
 
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
 
விட்டாங்காரரும் மிகு பல பேய்களும்
தண்டியக்காராரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
 
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனைதனையும்
 
ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
 
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அகன்று புரண்டிட
வாய் விட்டலறி மதி கெட்டோடப்
 
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுக்
கட்டி உருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
 
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்குச் செக்கு செதில் செதிலாக
சொக்குச் சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்
 
பற்றுப் பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டதுவோடப்
புலியும் நரிவயப் போத்தோடு நாயும்
 
எலியும் கரடியும் இனித்தொடாதோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடுவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
 
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதஞ்சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலை சயங்குன்மம் சொக்கு சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல் விப்பிரிதி
 
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பரு அரையாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
 
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரசரும் மகிழ்ந்துறவாகவும்
 
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
 
அரிதிரு மருகா ஆமராவதியைக் 
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
 
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
 
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமராபுரி வாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
 
என்நா இருக்க யானுனைப்பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூபதியை
 
நேசமுடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
 
மெத்த மெத்தாக வேலாயுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
 
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவஜம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
 
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனையடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
 
பிள்ளையென்றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தெனென் மீதுன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
 
பாலன் தேவராயன், பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந்துலக்கி
நேசமுடனொரு நினைவதுவாகிக்
 
கந்தர் சஷ்டி கவசமிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
 
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசை மன்னரெண்மர் சேர்ந்தங்கருளுவர்
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்
 
நவ மதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளு மீரெட்டா வாழ்வர்
கந்தர் கைவேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்
 
விழியாற்காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடி பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்காரத்தடி
 
அறிந்தெனதுள்ளம் அட்டலக்ஷ்மிகளில்
வீரலக்ஷ்மிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்தகையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
 
குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொள என்றெனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
 
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்யா தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி
 
கடம்பா போற்றி கந்த போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோரரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
 
சரணஞ் சரணஞ் சரவண பவஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக