சனி, 6 ஆகஸ்ட், 2016

பொன் பொருள் அருளும் கல்லால மூலிகை!

விருட்சங்கள் இறைவன் நமக்களித்த வரம். அதனால்தானோ என்னவோ, அவற்றுக்குத் தா-வரம் என்று நம் முன்னோர் பெயர் சூட்டிவிட்டார்கள் போலும்!

காய்- கனிகள் தந்து வயிற்றுக்கு விருந்திடுவதோடு, இலை முதல் வேர் வரையிலும் நம் நோய்க்கு மருந்திடும் மரங்களும் பல உண்டு. இன்னும் சில விருட்சங்கள் நம் வாழ்வை வளமாக்கும் தெய்வத் தன்மையோடு திகழ்கின்றன.

வீட்டில் கருநெல்லி மரம் வளர்த்தால், பொருளும் அருளும் கூடும்; வேம்பு நிற்கும் வீட்டில் வினைகள் இருக்காது; வீட்டில் அகண்ட வில்வம் வளர்த்தால் செல்வம் சேரும் என்றெல்லாம் பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில்... குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஞான நூல்கள் தரும் அறிவுரை. இதனால் குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; வறுமை, கடன் தொல்லை யாவும் நீங்கும்

குரு பகவானின் ஆதிக்கம் உடையது இந்த மூலிகை. மூலிகை சக்தி ரகசியங்களில் காணும்போது, 'அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்...’, 'கல்லாலம் இருக்கும் இடத்தில் பிள்ளைச் செல்வத்துக்குக் குறையேது...’ எனத் திகழும் வாசகங்களால் இதன் மகத்துவத்தை அறியலாம். இந்த 'கல்லாலம்’ குறித்து தெய்வக் கதை ஒன்று சொல்லப்படுவது உண்டு.

உலக நன்மையின் பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகமாக தியானத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவான், ஒரு தருணத்தில் அந்த இடமும் சூழலும் அங்கிருந்த மக்களால் அசுத்தம் அடைந்ததாகக் கருதி, வேறு இடத்துக்கு நகர திருவுளம்கொண்டார்.

அதன்படி, மலைப்பாங்கான பகுதிக்குச் சென்று ஒரு பாறையில் அமர்ந்தார். இந்த நிலையில், ஆலமரத்தடியில் அவர் அமர்ந்திருந்தபோது, அனுதினமும் அவரை வழிபட்டுவந்த அன்னப் பறவை ஒன்று மரத்திலிருந்து தனது அலகால் கொத்தி எடுத்துவந்த ஆலம் விதையை, பகவான் அமர்ந்திருந்த பாறையில் போட்டுவிட்டுச் சென்றது.

இயற்கை தந்த நீரால் அந்த விதை துளிர்விட்டு, கல்லின் மீது வளர்ந்த கல்லால மரமாகக் கிளைபரப்பி, பகவானுக்கு நிழல் கொடுத்தது. ஸ்ரீலட்சுமிதேவியின் அம்சம் அன்னப்பறவை.

அதன் மூலம் வந்து வளர்ந்ததால், இந்த விருட்சமும் செல்வகடாட்சம் அருளும் தெய்வத்தன்மையைப் பெற்றது... என நீள்கிறது அந்தக் கதை.

உருவாகும் தன்மைக்கு ஏற்ப இந்தக் கல்லால மூலிகை, ஆண் வகை, பெண் வகை, மலட்டு வகை என மூன்று வகைப்படும்.சொரசொரப்பானவை ஆண் வகை; இலையுடன் காய் இருப்பது மலட்டு வகை; மிருதுவாக வழவழப்புடன் காணப்படுவது பெண் வகை. இவற்றில், பெண் வகை மரத்தின் இலைகள், லட்சுமி கடாட்சம் மிகுந்ததாகும் என்பர். (சப்போட்டா மர இலைகளை லக்ஷ்மி மூலிகை என்று கொண்டு வந்து வைக்கிறார்கள் சிலர். அதன் இலையும் பெண் வகை கல்லாலம் போன்றே இருக்கும்; கவனம் தேவை.) 

பூக்களோடு காணப்படும் இந்த வகை மரங்கள், செங்கல்பட்டு, நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வளர்ந்து வந்தன. மயிலாடுதுறை கோயிலில், குரு பகவான் சந்நிதியில் இந்த மரம் வளர்க்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் 'ஒட்டுமுறை’ கலப்பின வளர்ப்பால், கல்லால மரத்தின் சாந்நித்தியம் குறைந்துபோய்விட்டதாகச் சொல்வார்கள். எனினும், சிற்சில காட்டுப் பகுதிகளில் தூய்மையான கல்லால மரங்களைக் காணலாம்.

இன்னுமொரு முக்கிய அம்சம் என்னவெனில், குருவருள் கூடி வந்தாலும், சுக்ர தசை வந்தாலும், இந்த மூலிகையை அதாவது கல்லால இலையை வழிபடும் பேறு கிடைத்துவிடும்.

ஒன்றாம் இடத்து குரு- வாழ்வின் உச்சநிலை; குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்ந்தால் கோடி தனம்; 3-ம் பாவக குரு- இளையோருக்கு யோகம்; சுக ஸ்தானத்தில் குரு உச்சமானால், ஸ்வர்க்க யோகம்; பூர்வத்தில் குரு- எண்ணிலா யோகம்; லாப ஸ்தானத்தில் குரு எனில், உலோபியும் உயர்வான் என்றெல்லாம் சொல்கின்றன  ஜோதிட கிரந்தங்கள். இப்படியான குருவின் திருவருளையும் லக்ஷ்மிகடாட்சத்தையும் ஒட்டுமொத்தமாகப் பெற்று மகிழ, கல்லால இலை வழிபாடு உதவும்.

குரு ஸ்தலங்களில் வழிபாடு, குலத்தின் பரம்பரை குரு பூஜை, சித்தர்களை குருவாக எண்ணி யோக வழிபாடு செய்வது, குரு தொடர்பான விருட்ச வழிபாடு ஆகியவற்றால் குருவருள் கைகூடும். இவற்றில், கல்லால இலை வழிபாடு 4-வது வகை.

ஒரு சுபமுகூர்த்த நன்னாளிலோ (இந்த சுபமுகூர்த்த தினம் வியாழக்கிழமையுடன் சேர்ந்து வந்தால் கூடுதல் சிறப்பு!), பஞ்சாங்க சுத்தி உடைய நாளிலோ, மூலிகைகள் குறித்த விஷய ஞானம் உள்ளவர்கள் மூலம், பெண்வகையைச் சேர்ந்த கல்லால இலையை எடுத்து வர வேண்டும். பிறகு, பால் மற்றும் சந்தனத்தால் கழுவி சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

தொடர்ந்து, மஞ்சள் மற்றும் சிவப்பு மலர்களைச் சமர்ப்பித்து, அன்றைய திதி- வாரம்- நட்சத்திரம் சொல்லி, 'மம சீக்கிர தனதான்ய விருத்தியர்த்தம் குடும்ப க்ஷேமார்த்தம்’ என்று வேண்டிக்கொண்டு, விநாயகரை வழிபட்டு, 'துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று மும்முறை சொல்லி, ஆரத்தி காட்டவேண்டும்.

பின்னர், மணைப்பலகை ஒன்றில் குருபகவானின் யந்திர எண் கட்டத்தை வரைந்துவைக்க வேண்டும். அடுத்ததாக...

 

'அநர்க்க ரத்ந சம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரியா:
தப்தசாமி கராகாரோ ஜிததாவா நலாக்ருதி:

என மூன்று முறை சொல்லி வணங்கிவிட்டு, பின்வரும் பாடலைப் பாடித் துதிக்கவேண்டும்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதல் கற்ற கேள்விவல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்தபூரணமாய் மறைக்கு அப்பாலாய்எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனைஇருந்தபடி இருந்து காட்டிச்சொல்லாமல் சொன்னவரை நினையாமல்நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்!

இந்தத் துதியையும் மூன்று முறை சொல்லி வணங்கிவிட்டு, கீழ்க்காணும் ஸ்ரீஐஸ்வரிய லட்சுமி துதியைச் சொல்லி வணங்க வேண்டும்.

'ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஞானாய கமலதாரிண்யைசக்தியை சிம்ம வாஹின்யை பலாயை,விருட்ச ரூபிண்யை மம ஐஸ்வர்யம் தன குருதே நம:

இந்தத் துதியை 108 முறை சொல்லி வழிபடுவது விசேஷம்!

குபேர காலம் என்று சொல்லக்கூடிய வியாழன் மாலை 5 முதல் 8 மணிக்குள் வழிபடுவது சிறப்பு.

பூஜை முடிந்ததும், சிறிய புத்தகம் ஒன்றில் இலையை வைத்துப் பாதுகாக்கலாம். வாரம் ஒருமுறை வழிபட்டுவர, அபரிமிதமான பலனை அடையலாம். பூஜையறை மட்டுமின்றி பீரோ, பர்ஸ், பணப்பெட்டி ஆகியவற்றிலும் வைத்து வணங்கி வரலாம்.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக