புதன், 21 செப்டம்பர், 2016

சங்கு தீர்த்தத்தில் புஷ்கர மேளா!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் புகழ் மிக்க வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் புஷ்கர மேளா விழா. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்

தல வரலாறு:

பூஷா , விருத்தா என்னும் முனிவர்கள், ஒரு சாபத்தால் கழுகுகளாக மாறினர். அவர்கள் இருவரும் தினமும் திருக்கழுக்குன்ற மலையை வலம் வந்து சிவனை வழிபட்டனர். தினமும் ராமேஸ்வரம் கடலில் நீராடி, திருக்கழுக்குன்றத்தில் உணவு உண்டு, இரவில் காசியில் இவர்கள் அடைக்கலமாவதாக ஐதீகம். இப்பகுதியை ஆண்ட சுரகுரு மகாராஜாவுக்கு சிவன் காட்சி தந்ததாகவும், அவரே கோவில் திருப்பணி செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.

கழுகுகள் சிவனை வழிபட்ட மலை என்பதால் இத்தலம் திருக்கழுக்குன்றம் எனப்படுகிறது.

இரு கோவில்கள்:

மலை மீதுள்ள கோவிலில் வேதகிரீஸ்வரரும், அடிவாரக்கோவிலில் பக்தவத்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். வேதமே இங்கு மலையாக இருப்பதாக ஐதீகம். 500 அடி உயரம் கொண்ட மலைமீதேறி செல்ல 565 படிகள் உள்ளன. பவுர்ணமி நாளில் இந்த மலையை வலம் வந்து வழிபட்டால் வேண்டியது விரைவில் நிறைவேறும். அடிவாரக்கோவிலில் உள்ள திரிபுர சுந்தரியம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடக்கும்.

புஷ்கர மேளா:

இங்குள்ள சங்கு தீர்த்தம் சிறப்பு மிக்கது. மார்க்கண்டேய மகரிஷி இத்தீர்த்தத்தில் இருந்து பூஜைக்குரிய சங்கினை பெற்றார். ஒருமுறை கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி முதலிய புனித நதிகள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை ஏற்பட்டது. ஆணவம் கொண்ட அவர்களுக்கு பாவச்சுமை அதிகரித்தது.

அந்த பாவச்சுமை கடலில் போய் சேரவும், கடலரசனுக்கு தாங்க முடியாத சிரமம் ஏற்பட்டது. இதுபற்றி அவன் சிவனிடம் முறையிட்டான். நதி தேவதைகளும் சிவனிடம் மன்னிப்பு கோரின. குரு கன்னிராசியில் பிரவேசிக்கும் நன்னாளில், திருக்கழுக்குன்றத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடினால் பாவம் நீங்கும் என இறைவன் அருள்புரிந்தார்.

அதன்படி நதி தெய்வங்கள் இங்கு நீராடி பாவம் நீங்கப் பெற்றனர். இதன் அடிப்படையில் 12 ஆண்டுக்கு ஒருமுறை இங்கு புஷ்கர மேளா விழா நடக்கிறது.

அலகாபாத்தில் நடக்கும் கும்பமேளாவுக்கு இணையானதாக இந்த விழா கருதப்படுகிறது.

மாலையில் லட்ச தீபம்: புஷ்கர மேளா முடிந்ததும் அன்று இரவில் லட்ச தீப திருவிழா நடக்கும். மாலை 6.00 மணிக்கு திருக்கழுக்குன்றம் மலைக்கோவில், அடிவாரக்கோவில், சங்கு தீர்த்தம், மாடவீதிகள் என ஊரெங்கும் விளக்கேற்றி வழிபடுவர். பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு வீதியுலாவாக எழுந்தருள்வர். நகர் முழுவதும் மின்னொளியில் ஜொலிப்பதோடு, ஊரிலுள்ள அனைத்து கோவில்களிலும் தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

இருப்பிடம்: செங்கல்பட்டு மாமல்லபுரம் சாலையில் 17 கி.மீ.,

நேரம்: காலை 6.00 மதியம் 12.00 மணி, மாலை 4.00 இரவு 8.00மணி,


தொலைபேசி: 044 2744 7139.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக