சனி, 28 ஜனவரி, 2017

சந்தோஷ வரமருளும் சந்தோஷிமாதா!



சந்தோஷிமாதா காயத்ரி!

ஓம் ரூபா தேவி ச வித்மஹே
ச’க்தி ரூபிணி தீமஹீ |
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத் ||



ஒரு முறை விநாயகப்பெருமான், தனது மனைவியர் சித்தி, புத்தி மற்றும் மகன்கள் சுபன், லாபன் உடன் பூலோகம் வந்தபோது, அங்கு ரக்ஷாபந்தன்  நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பெண்கள் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைக் கண்ட விநாயகரின் மகன்கள் இருவரும், தங்களுக்கு கயிறு கட்ட, ஒரு சகோதரி இல்லையே! என்று வருந்தினர். பின்னர் தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்று தந்தையான விநாயகரிடம் வேண்டினர். விநாயகர், தன்னுடைய மகன்கள் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி விநாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்த பெண் குழந்தை பிறந்த நாள் வெள்ளிகிழமை. அந்த அழகான பெண் குழந்தை தன் இருகரங்களால் தன்னுடைய அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டியவுடன் அழுத பிள்ளைகள் சிரித்தன. இதை கண்ட விநாயகர், 'மற்றவர்களை சந்தோஷப்படுத்திய இந்த குழந்தையின் பெயர் 'சந்தோஷி" என்று அழைக்கப்படட்டும்.!" என்றார்.



இதை கேட்ட நாரதர், 'இனி வெள்ளிகிழமை தோறும் சந்தோஷியை பூலோகவாசிகள் வணங்கினால் அவர்களின் இன்னல்கள் மின்னல் வேகத்தில் மறைய வேண்டும். அதற்கு உங்களின் ஆசி, உங்களின் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டினார். அதற்கு எல்லாம் நடக்கும் நாரதா" என்று ஆசி வழங்கினார் கணபதி.

ஆனந்த நகரம் என்ற ஊரில் போலாநாத் என்ற பக்தர், சுனீதி என்ற சந்தோஷி மாதா பக்தையை மணந்தார். சுனீதியை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தினர். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியாக சந்தோஷி மாதா விரதத்தை மட்டும் அவள் விடாமல் செய்துவந்தாள். அவளது பக்திக்காக சந்தோஷி மாதா குடும்பத்தினரை திருத்தி சுனீதிக்கு அருள்செய்தாள். குடும்பம் ஒற்றுமையானது.



சந்தோஷி மாதாவிற்கு விரதம் இருக்கும் முறை :


இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.

விரதம் இருக்கும் நாளன்று, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறைக்குள் சுத்தமான பலகை வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, அதற்கு மேலே கும்பம் வைக்க வேண்டும். சந்தோஷி மாதா படத்தையும், சந்தனத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரையும் வைப்பதோடு, படத்துக்கும், கும்பத்துக்கும் மாலை போட்டு, அருகில் குத்துவிளக்கும் ஏற்றிவைக்க வேண்டும்.



நைவேத்தியமாக சந்தோஷி மாதாவுக்கு பிடித்தமான கொண்டைக்கடலை, வெல்லம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், விரத நாள் அன்று புளிப்பு சேர்க்கக்கூடாது. தொடர்ந்து நாம் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, விநாயகருக்கும், சந்தோஷி மாதாவுக்கும் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்னர் கும்பத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகப் பயன்படுத்த வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் யாருக்கும், தட்சணை கொடுக்கக்கூடாது.



சந்தோஷிமாதா 108 போற்றி!

சந்தோஷிமாதாவே போற்றி
சகலமும் அருள்வாய் போற்றி
வேதங்கள் துதிப்பாய் போற்றி
வெற்றிகள் தருவாய் போற்றி
கன்னியிற் சிறந்தாய் போற்றி
கற்பகத்தருவே போற்றி
கருணைக்கடலே போற்றி
காரணத்தின் உருவே போற்றி
காரியமும் ஆனாய் போற்றி
காசித்தலம் உறைவாய் போற்றி
கதை கேட்டு மகிழ்வாய் போற்றி
காலதேசம் கடந்தாய் போற்றி
கஜமுகன் குழந்தாய் போற்றி
முக்குண உருவே போற்றி
மூவுலகிற் சிறந்தாய் போற்றி
இனியதின் உருவே போற்றி
இனிப்பினை விரும்புவாய் போற்றி
வாட்டமிலா முகத்தாய் போற்றி
வரம் மிகத்தருவாய் போற்றி
அகர முதல எழுத்தே போற்றி
ஆதி அந்தமில்லாய் போற்றி
ஈடிணையற்றாய் போற்றி
இணையடி தொழுதோம் போற்றி
கோரியது கொடுப்பாய் போற்றி
குலம் காக்கும் சுடரே போற்றி
விரதத்திற்கு உரியாய் போற்றி
விளக்கத்தின் விளக்கமே போற்றி
ஆனைமுகத்தான் மக@ள போற்றி
ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
பெருவாழ்வு அருள்வாய் போற்றி
பிழைகளைப் பொறுப்பாய் போற்றி
வணக்கத்திற்குரியாய் போற்றி
வணங்கினால் மகிழ்வாய் போற்றி
உயர்வுகள் தருவாய் போற்றி
கோள்களும் போற்றும் போற்றி
குறைகளைத் தீர்ப்பாய் போற்றி
நிறைவினைத் தருவாய் போற்றி
நித்தமும் அருள்வாய் போற்றி
சக்தியின் உருவே போற்றி
சரஸ்வதி ஆனாய் போற்றி
திருமகள் வடிவே போற்றி
தெய்வத்தின் தெய்வம் போற்றி
குலம் தழைக்க அருள்வாய் போற்றி
வாசனை மலரணிந்தாள் போற்றி
தீமைகளை அழிப்பாய் போற்றி
திசைகளெட்டும் நிறைந்தாய் போற்றி
அற்புத உருவே போற்றி
ஆனந்த நிலையே போற்றி
தாமரை முகத்தவளே போற்றி
தர்மத்தின் வடிவே போற்றி
தாயாக வந்தாய் போற்றி
தக்கவர்க்கு பொருளருள்வாய் போற்றி
நினைத்ததை முடிப்பவளே போற்றி
நிம்மதி அருள்வாய் போற்றி
உமையவள் பேத்தியே போற்றி
உன்னதத் தெய்வமே போற்றி
செல்வத்தின் உருவமே போற்றி
ஜெகமெல்லாம் காப்பாய் போற்றி
உயிருக்கு உயிரானாய் போற்றி
உலகமெல்லாம் நிறைந்தவளே போற்றி
ஆபரணம் அணிந்தாய் போற்றி
ஆடைகள் தருவாய் போற்றி
ஒளிமிகு முகத்தாய் போற்றி
ஓம்காரப் பொருளே போற்றி
கருணைசேர் கரத்தாய் போற்றி
மங்களம் தருவாய் போற்றி
உன்னையே துதித்தோம் போற்றி
உடமைகள் தருவாய் போற்றி
நங்கையர் நாயகியே போற்றி
நலமெலாம் தருவாய் போற்றி
ஆரத்தி ஏற்பாய் போற்றி
ஆனந்த உருவே போற்றி
பாடல்கள் கேட்டாய் போற்றி
பாசத்தைப் பொழிவாய் போற்றி
குணமெனும் குன்றே போற்றி
குங்குமம் தருவாய் போற்றி
தேவியர் தேவியே போற்றி
சிவனருள் பெற்றாய் போற்றி
சிறப்பெலாம்கொண்டாய் போற்றி
விஷ்ணுவரம் பெற்றாய் போற்றி
விண்ணவர் செல்வமே போற்றி
நலன்களின்உருவமே போற்றி
புண்ணிய நாயகி போற்றி
செல்வத்தின் வடிவே போற்றி
செல்வத்தைப் பொழிவாய் போற்றி
சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி
சற்குணவதியே போற்றி
ஐங்கரன் மகளே போற்றி
அனைத்துமே நீ தான் போற்றி
கண்ணுக்கு இமையே போற்றி
கருணை செய்து காப்பாய் போற்றி
கனகமாமணியே போற்றி
கல்வியெலாம் தருவாய் போற்றி
சித்திபுத்தி செல்வமே போற்றி
சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
தத்துவச் சுடரே போற்றி
தக்கவர்க்கு பொருள் அருள்வாய் போற்றி
வித்தகச் செல்வியே போற்றி
வினைகளெலாம் களைவாய் போற்றி
பழங்களை ஏற்பாய் போற்றி
பாயாசம் உண்பாய் போற்றி
கரும்பாய் இனிப்பாய் போற்றி
காமதேனு பசுவே போற்றி
குடும்ப விளக்கே போற்றி
கொலுவிருந்து அருள்வாய் போற்றி
சந்தோஷம் தருவாய் போற்றி
சவுபாக்கியம் அருள்வாய்  போற்றி!  போற்றி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக