வியாழன், 19 ஜனவரி, 2017

உன்னத வாழ்வும், வரமும் அருளும் விச்வே தேவர்கள்!

 
த்திராட நட்சத்திரக் காரர்களுக்கு உன்னத வாழ்வும், வரமும் அருளும் விச்வே தேவர்கள்!
 
த்திராடம் நட்சத்திரத்தை 'உத்திராஷாடம்’ என்கிறது வேதம். இதன் தேவதை  விச்வே தேவர்கள். 'எனது வேண்டுகோளை காது கொடுத்துக் கேட்கவேண்டும். நான் செய்யும் வேள்வியில் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். வேள்வித் தலைவன் வேண்டும். பசுக்களை அளிக்கவேண்டும். எனது பயிர்த்தொழிலை வளமாக்க அவ்வப்போது மழை பொழிந்து உதவ வேண்டும். பயிரும் பயிரைக் காக்க மழையும் தந்து எனது வாழ்க்கையை வளமாக்க வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு.
(தன்னோவிச்வே உபச்ருண்வந்து தேவா:..).
 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் சந்திப்பது சூரிய தசை. அது 6 வருடங்கள் நீடிக்கும். கிருத்திகை மற்றும் உத்திரத்துக்கும் இது பொருந்தும். சூரியனுக்கு ஆன்மகாரகன் என்ற பெயர் உண்டு. கிரக நாயகன் சூரியன். அவன் ஆரம்ப தசையாக இருப்பது சிறப்பு. சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆரோக்கியம், செல்வாக்கு போன்றவற்றை இந்த நட்சத்திரக்காரர்கள் எளிதில் பெற்றுவிடுவார்கள். ஆண்மையும், ஆளுமையும், தன்னம்பிக்கையும் தசாநாதனின் சேர்க்கையில் வலுப்பெற்றுவிடும்.
 
சூரிய கிரணங்கள் தண்ணீரை ஈர்த்து மேகமாக்கி, மழை பொழிந்து பயிர் வளரக் காரணமாகின்றன. நாட்டின் செழிப்புக்கு ஆதாரமான மழையைத் தந்து உதவும் சூரியனின் தசையில், நட்சத்திரத்தோடு இணைந்த விச்வே தேவர்களின் ஒத்துழைப்பால், வாழ்வின் அடித்தளம் நிலைபெற்று விளங்கும் தகுதியைப் பெறுவார்கள், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
 
தனுர் ராசியில் ஒரு பாதமும் மகரத்தில் மூன்று பாதமுமாகப் பரவியிருக்கும் இந்த நட்சத்திரம். குருவும் சனியும் இரண்டு ராசிகளுக்கும் அதிபதியாக இருப்பதால், இருவரது இயல்பும் அவர்களிடம் தென்படும். முதல் பாதத்துக்கு அதிபதி குரு; மற்ற இரண்டு பாதங்களுக்கு சனி; கடைசி பாதத்துக்கு குரு. எனவே, குருவும் சனியும் தமது பங்கை சரிபாதியாக அளிப்பர். ராசி புருஷனின் பாக்யம், கர்மம், லாபம், வியயம் (அதாவது எதிர்பாராத வரவு, செயல்பாடு, சேமிப்பு, இழப்பு) ஆகிய நான்கிலும் இந்த நட்சத்திரத்தின் தொடர்பு உண்டு. கால புருஷனின் தொடைகளிலும் மூட்டுகளிலும் பரவியிருக்கும் இந்த நட்சத்திரம், அந்த அங்கங்களின் செழிப்பை வரையறுக்கும்.
 
உத்திராடத்தில் பிறந்தவனிடம் இயல்பாகவே அடக்கமும் பணிவும் இருக்கும். அறத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம், நண்பர்களுடன் பழகுவதில் மென்மை, உதவியை மறவாமல் உதவியவரை அணைத்துக் கொள்ளும் பாங்கு,  எல்லோரிடமும் பாகுபாடின்றி பிரியமாகப் பழகும் பக்குவம் ஆகிய அத்தனையும் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் காணலாம் என்கிறார் வராஹமிஹிரர்.
 
க்ஷேத்திராடனம், தோட்டம் துறவுகள் அமைத்துப் பராமரித்தல், சிற்பம் போன்ற கலைகளை ஆர்வத்துடன் வளர்த்து மகிழ்தல், இன்சொல்லால் மக்களை ஈர்த்து தனது பெருமையை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் பராசரர். முதல் பாதத்தில் பிறந்தவன் மக்கள் தலைவனாகத் திகழ்வான். 2-வதில் துஷ்ட சகவாசம் அவனை அலட்டும். 3-ல் தற்பெருமையில் கவனம் செலுத்துவான். 4-ல் அறநெறியுடன் வாழ்வான் என்கிறது பிரஹத் ஸம்ஹிதை.

இது த்ருவ நட்சத்திரத்தில் (நிலையானது) அடங்கும். அரசர்களின் சாம்ராஜ்ய பட்டாபி ஷேகம், உலகை நடுங்கவைக்கும் உத்பாதங்களை அழிக்க செயல்படும் சாந்தி... அதாவது நில நடுக்கம், பெருவெள்ளம், புயல், எரிமலை, கொள்ளி மீன் போன்ற அழிவிலிருந்து விடுபட செய்யப்படும் சாந்திகர்மா, செடி- கொடிகளை நட்டு வளர்த்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களை உருவாக்குதல், விதை விதைத்தல், அறிநெறியை வளர்க்கும் செயல்கள் ஆகிய அனைத்திலும் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு செழிப்பை அளிக்கும் என்கிறார் பராசரர்.
 
இரண்டு தாரைகளை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். இதில் செய்யப்படும் அன்னப்ராசனம் வாழ்க்கை முழுதும் உணவு தட்டுப்பாடு இல்லாமல் செய்துவிடும் என்கிறது ஜோதிடம். முதல் பாதத்தில் பிறந்தவன் தர்ம சாஸ்திரத்தை அறிந்து செயல்படுபவன், கொடையாளியாகவும் அறிஞனாகவும் திகழ்வான். குரு, பிதா, பிதாமஹர் போன்ற பெரியோரை மதிப்பான். தேவ ஆராதனையில் பிடிப்பு இருக்கும். 2-வதில் சொல்வளம் பெற்றவன். தனது செயல்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டான். ஆனால், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவான். 3-ல் கட்டான உடல் அமைப்பு, மறைமுகமாக தவறிழைப்பான், ஆசுகோபி, இரக்கமற்றவனாகவும் இருப்பான். 4-ல் அறவழியில் ஆர்வம், உண்மை பேசுபவன். லோகாயத வாழ்வில் பிடிப்பு, குறிப்பிட்ட துறையில் விசேஷ அறிவு பெற்றவன்... இப்படி நான்கு பாதங்களுக்கு பலன் சொல்லும் பலசாரசமுச்சயம்.
 
முக்காலும் காலுமாக இரண்டு ராசிகளில் பரவியிருக்கும் நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இரண்டு ராசிகளின் பலனும் இதில் தென்படும். இரண்டும் கலந்த கூட்டு பலனாக அனுபவத்துக்கு வரும். கிருத்திகைக்கும் உத்திரத்துக்கும் இது பொருந்தும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவையும் முக்காலும் காலுமாக இரண்டு ராசிகளில் இணைந்தாலும் வேறுபாடு உண்டு. அதாவது கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தை எடுத்துக்கொண்டால்... முதல் ராசியில் முதல் பாதம்; இரண்டாவது ராசியில் மூன்று பாதங்கள்.
 
நற்பலனை சுவைக்கவும் கெடுதலை அறவே அழிக்கவும் வழிபாடு உதவும். பரம் பொருளின் சைதன்யத்தில் நட்சத்திரம் ஒளிமயமாக விளங்குகிறது. நட்சத்திர வடிவில் பரம்பொருளின் பணிவிடையே நிகழ்கிறது. 'விம் விச்வேப்யோ தேவேப்யோ நம:’ என்று சொல்லி வணங்க வேண்டும்.
 
16 உபசாரங்களையும் முறையாகச் செய்ய வேண்டும்.'விச்வேப்யோ தேவேப்யோ நம: என்று சொல்லி அடிபணிந்து வணங்கலாம். 'ஸமந்ஜந்து விச்வேதேவா:...’ என்கிற மந்திரம் ஓதி வழிபடலாம். அல்லது 'ஆனோவிச்வே அஸ்க்ரா’ என்கிற மந்திரத்தைச் சொல்லி 12 நமஸ்காரங்களைச் செய்யலாம்.
 
கைகளில் புஷ்பங்களை அள்ளி அளித்து, 'உத்திராஷாட நஷத்திர தேவதாப்யோ நம:’ என்று அடிபணியலாம். 'விச்வான் தேவான் நமஸ்யாமி ஸர்வ காம பலப்ரதான் குர்வந்து ஸபலம் கர்ம குர்வந்து ஸததம் சுபம்’ - என்ற செய்யுளைச் சொல்லி வணங்கலாம்.
 
வணங்க முடியாத சூழலில், மனதில் அந்த செய்யுளை அசை போடலாம். ஏதாவது ஒரு முறையில் தேவதையின் தொடர்பு மனதில் இருக்க வேண்டும். மனம் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே வழிபாட்டின் பலன் இறுதி பெறும். செயல்பாடு மட்டுமே பயன்படாது. அதோடு மனம் நிச்சயம் இணைந்திருக்க வேண்டும்.
 
நெய் ஆயுளை வளர்ப்பதால் நெய்யை ஆயுள் என்று சொல்வோம். நாம மஹாத்மியத்தைச் சொல்ல வந்த ஹனுமான் ஸ்ரீராமனை விட அவரின் நாமா சகல பாக்கியங்களையும் அளிக்கும் வல்லமை பெற்றது என்பார் . இறைவனின் நினைவுடன் வெளி வரும் சொற்களுக்குத்தான் பெருமை உண்டு.
 
ஆகையால், விச்வே தேவரை மனதில் இருத்தி, விச்வேப்யோ தேவேப்யோ நம:’ என்று சொல்வது தகும்.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக