வெள்ளி, 30 டிசம்பர், 2016

மங்கள கிரி!

ஆந்திராவில் விஜயவாடா மற்றும் குண்டூருக்கு இடையே உள்ள பகுதிதான் மங்கள கிரி என்ற சிறிய ஊர். மக்கள் தொகையில்; பாதிக்கும் மேல் நெசவாளர்கள் உள்ள ஊர் இது. இந்த இடத்தில்தான் பானகம் அருந்தும் விஷ்ணு குடி கொண்டு உள்ள பிரபலமான நரசிம்மஸ்வாமி ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்திற்குப் பின்புறம் உள்ள பகுதியில் இலஷ்மி தேவியின் ஆலயம் உள்ளது.

மலைக்குக் கீழ் பகுதியில் இலஷ்மி நரசிம்மஸ்வாமி ஆலயம் ஓன்றும் உள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்ம அவதாரத்தை ஒட்டிய அதாவது பாதி மிருகம் , பாதி கடவுள் முகத்தில் தோற்றம் தரும் வகையிலான “லஷ்மி நரசிம்மர் சிலை” கல்லில் செய்யப்பட்டு 108 சாலிக்கிராமத்தினால் கட்டப்பட்ட மாலையை அணிந்துள்ள கோலத்தில் உள்ளது. அதனால் அந்தக் கோலம் மிகவும் விஷேசமாகக் கருதப் படுகின்றது.

சுமார் 200 முதல் 250 ஆண்டுகள் முன்பு அமராவதியை ஆண்டு வந்த ஒரு மன்னன் 150 அடிக்கும் மேல் உள்ள ஒரு கோபுரத்தை அந்த ஆலயத்திற்கு கட்டினார் ; . 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆலயத்தில் உள்ள மூல சிலையை நிறுவியவர்பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

மங்களகிரி என்றால் மங்களம் தரும் இடம் என்று பெயர். மகாலஷ்மி இங்கு வந்து தபம் செய்ததினால் மங்களம் தரும் இடமாகக் இது கருதப்பட்டது. வைஷ்ணவர்களின் எட்டு புனித தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. யானையைப் போல தோற்றம் தரும் இந்த மலைப் பற்றி கூறப்படும் ஒரு கதையின்படி,
முன் ஒரு காலத்தில் பரியாத்திரா என்ற மன்னனின் மகனான ஹஷ்வ சுருங்கி என்ற இளவரசன் தனக்கு இருந்த அகோரத் தோற்றம் கொண்ட உடல் மாற வேண்டும் என விஷ்ணுவை வேண்டிக் கொண்டு அந்த மலைப் பகுதியில் வந்து தவம் இருந்தான் . அவன் குணமடைந்ததும் தன்னுடைய இரஜ்யத்திற்குத் திரும்ப மனமின்றி விஷ்ணுவை சுமக்கும் வாகனமாக ஒரு யானைத் தோற்றத்தில் அங்கு அமர்ந்து விட்டானாம் . ஆகவே அந்த மலையும் பின்னர் யானைத் தோற்றத்தில் மாறியதாம் .

கிருதேயுகத்தில் ஒருமுறை நாமுச்சி என்ற அரக்கன் அனைவரையும் துன்புறுத்தி வந்தான் . அவன் இந்திரனையும் விட்டு வைக்கவில்லை. அந்த அரக்கன் பிரும்மாவிடம் இருந்து தனக்கு உலர்ந்த அல்லது ஈரத்திலான எந்த பொருளினாலும் மரணம் வரக் கூடாதென வரம் பெற்று இருந்தான் . எல்லை மீறிப் போன அவன் தொல்லையைத் தாங்க முடியாமல் போன இந்திரன் மகாவிஷ்ணுவிடம் அவன் தொல்லைப் பற்றிக் கூற அவனை அழிக்க அவனுக்கு தன்னுடைய சுதர்சன சக்கரத்தைக் கொடுத்தார். இந்திரனும் அந்த சக்கரத்தை ஒரு கடலாக மாற்றி அந்த அரக்கன் மறைந்திருந்த குகைக்குள் பாயச் செய்தான் . அந்த சக்கரத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்திருந்த மகாவிஷ்ணு இருந்து கொண்டு அந்த குகைக்குள் இருந்த பிராண வாயு அனைத்தையும் தான் முழுங்கிவிட மூச்சுச் திணறி இரத்தம் கக்கி குகைக்குள்ளேயே அந்த அரக்கன் மடிந்து போனான் . ஆனாலும் நரசிம்ம அவதாரமத்தில் இருந்த விஷ்ணுவின் கோபம் மறையவில்லை. ஆகவே அனைத்து தேவர்களும் அவரிடம் சென்று அமிருதத்தைக் கொடுக்க அதை உண்டவர் அமைதியானார்.
அங்கு அமர்ந்த அவர் தனக்கு அடுத்தடுத்து வரும் யுகங்களான திரேதாயுகத்தில் நெய்யும், துவாபரயுகத்தில் பாலும் கலியுகத்தில் பானகமும் தந்து வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்று கூறினார். இராமாயணம் முடிந்து வைகுண்டம் சென்ற இராமபிரான் தன்னுடன் வந்த அனுமானை அந்த ஷேத்திரத்தை பாதுகாக்கும் பணியில் இருக்குமாறு அறிவுறுத்த அவரும் அந்த மலை மீது தங்கி உள்ளதான ஒரு ஐதீகம் உள்ளது. ஒரு அதிசயம் என்ன என்றால் அந்த தெய்வத்தின் வாயில் ஊற்றப்படும் நேவித்யமான பானகம் குடிக்கப்படுவது போல க்ளுக் , க்ளுக் என்ற சப்தம் கேட்டதுண்டாம் . ஒரளவு பானகம் உள்ளே போனதும் மீதிப் பானகம் பிரசாதமாக வெளியில் வழிந்து விட அதை பக்தர்கள் பிரசாதமாக கொண்டு செல்கின்றனர் . மேலும் கீழே சிந்தும் வெல்லம் கலந்த அந்த பானக நீரை சுற்றியோ அல்லது தெய்வத்தின் வாயிலோ ஒரு சிறிய எறும்பு கூடக் கிடையாது என்பது அதிசயச் செய்தி !
இயற்கையில் அமைந்துள்ள குகை நுழை வாயிலில் அமைந்துள்ள அந்த ஆலய மூர்த்தி முகமின்றி குகை வாயில் போல காட்சி தந்ததினால் அதற்கு வாயை திறந்தபடி உள்ள விஷ்ணுவின் முகத்தைப் பொருத்தி அதனுள் பானகத்தை பிரசாதமாகப் படைக்கின்றனர்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக