வியாழன், 17 மார்ச், 2016

விநாயகர் அகவல்!



சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசைப் பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ (கு) எறிப்பப்

பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சுகரமும் அங்குசபாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிறுபுயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூலும் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு(து) என்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையினினிதெனக் கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந்த தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துத்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனிக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்(கு) அருளி
என்னை அறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்துத்(து) அழுத்தி என் செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!!!



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக