செவ்வாய், 15 மார்ச், 2016

சொர்க்கப் பேறு அருளும் விருட்சங்கள்!

 
மரங்களில் இறைத்தன்மை பொதிந்துள்ளதால் அவை பூசனைக்குரியதாகின்றன. ஒரு கோவிலைக் கட்டும்முன்பு அதன் மூலவழிபாடு ஒரு மரத்தின் கீழிருந்துதான் தொடங்குகிறது. எந்த மரத்தின் கீழிருந்து வழிபாடு தொடங்கியதோ அந்த மரம் அத் தலத்தின் தலவிருட்சமாகிறது.

சில இடங்கள் வனங்களாக இருந்து, அங்கு இறைவன் எழுந்தருளி அருட்காட்சி தந்தபின்னர் அவையும் திருத்தலங்களாகப் போற்றப்பட்டன. சிதம்பரம் எனப்படும் தில்லைவனம், மதுரை எனப்படும் கடம்ப வனம், திருநெல்வேலி எனப்படும் வேணு வனம் ஆகியவை இத்தகைய தலங்களே.

தலவிருட்சங்கள் என்பவை புல்லினம் முதல் பல வருடங்கள் நிலைத்து நிற்கும் மரங்கள் வரையிலான வெவ்வேறு தாவர இனத்தைச் சார்ந்தவை.

தாவரங்களின் பூ, பிஞ்சு, காய், கனி, வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களுமே மனிதனின் நோய்களைத் தீர்க்கும் தன்மை உடையனவாக விளங்குகின்றன. இறைவன் மனிதனுக்குப் பிறவிப் பிணி தீர்ப்பவனாய் இருப்பதுபோல், தாவரங்களில் உறைந்து உடல் பிணியையும் தீர்த்தருளுகிறான் என்ற நம்பிக்கையே, மரங்கள் வழிபாட்டுக்குரியனவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான காரணம் எனலாம்.

புல்வகையைச் சேர்ந்த தலவிருட்சங்கள் இருக்கும் தலங்கள் சில:

தர்ப்பைப்புல்- திருநள்ளாறு; கோரைப்புல்- திருச்சாய்க்காடு; விழல்- திருவிளநகர்.

செடி வகையைச் சார்ந்த தலவிருட்சங்கள் சில:

துளசி- திருவிற்குடி; அலரி- திருக்கரவீரம்; வீழிச்செடி- திருவீழிமிழலை.

கொடி வகைத் தலவிருட்சங்கள் சில:

முல்லை- திருக்கருகாவூர், திருமுல்லை வாயில்; மல்லிகை- திருச்சிக்கல்.

மரவகைத் தலவிருட்சங்கள் சில:

குருந்தமரம்- திருப்பெருந்துறை; வில்வமரம்- திருவையாறு; பனைமரம்- திருப்பனந்தாள்; புன்னை மரம்- திருநாரையூர், திருப்புகலூர்; ஆலமரம்- திருவெண்காடு.

இவ்வாறு ஒவ்வொரு தலத்துக்கும் மூர்த்திகளும் தீர்த்தங்களும் அமைந்திருப்பது போல் தலவிருட்சங்களும் அமைந்துள்ளன.

சந்தனம், தேவதாரு, கற்பகம், மந்தாரம், பாரிஜாதம் ஆகிய ஐந்தும் தேவதருக்களாகப் போற்றப்படுகின்றன. இவை கேட்டதைத் தரும் சக்தி கொண்டவை.

விருட்சங்கள் இறைத்தன்மை பெற்றிருப் பதற்கான புராண வரலாறும் கூறப்படுகிறது.


ஒருசமயம் இந்திரன் கயிலை சென்றபோது சிவகணங்கள் தடுத்தன. அதனால் இந்திரன் அக்னியை ஏவினான். அக்னி அந்தண உருக்கொண்டு ஈசனும் தேவியும் இருக்குமிடம் சென்றான். அக்னியைக் கண்டு கோபம் கொண்ட பார்வதிதேவி, ""இந்திரனின் ஏவலால் அனுமதியின்றி வந்தமையால் தேவர்கள் அனைவரும் பெண்களாகக் கடவது'' என்று சாபமிட்டாள். இதையறிந்து வருத்தமுற்ற தேவர்கள் தேவியைத் துதித்தனர். தேவி அவர்களுக்குக் காட்சி கொடுத்து, ""என் வாக்கு பொய்க்காது. நீங்கள் அனைவரும் விருட்சங்களாகுக'' என்று கூறி மறைந்தாள். அதன்படி தேவர்கள் விருட்சங் களாயினர். தேவப்பெண்கள் செடிகளாயினர். ஊர்வசி, ரம்பை போன்றோர் பூமரங்களாயினர்.

தேவியின் வாக்குப்படி விஷ்ணு பகவான் அசுவத்த விருட்சமாகவும், சதாசிவன் வட விருட்சமாகவும், பிரம்மன் பேலா மரமாகவும், இந்திரன் மா மரமாகவும், இந்திராணி மரா மரமாகவும் மாறினர்.

மரங்கள் நமக்குத் தேவையான பிராண வாயுவை வெளியிட்டு, நமக்குத் தேவையற்றதும் தீங்கு விளைவிப்பதுமான கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மரங்களின் இச்செயல்மூலம் நம் ஆரோக்கியமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகின்றன. ஆகவே மரங்கள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை என்பதை அறிவியல்ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

கார்த்திகைப் புராணத்திலுள்ள விருட்ச சாஸ்திரப் பலனைக் கூறும் ஒரு பாடல் மரங்கள் வளர்ப்பதன் பயனைக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஓர் அரசு, ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர்பெறும் ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம்தானே'

என்பது அப்பாடல்.

ஒரு அரசு, ஆலம், வேம்பு; பத்து புளியமரம்; மூன்று விளா; மூன்று வில்வம்; ஆறு நெல்லிமரம் ஆகியவற்றை நட்டு வளர்ப்பவர்க்கு நரகமில்லை என்கிறது இப்பாடல். கார்த்திகை மாத வளர்பிறையில் மரக்கன்றுகளை நடவேண்டும்.

மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் அறிவுறுத்திச்சென்றபடி நாடும் நாமும் நலம்பெற மரங்களை வளர்ப்போம்; வழிபடுவோம்.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக