வியாழன், 21 ஏப்ரல், 2016

சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி!

நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள் தான் சித்ரா பவுர்ணமி.                                

பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும் தான். அந்த விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப்பலனை வழங்கும் என்பதை நாம் அனுபவத்தின் வாயிலாக உணரமுடியும்.

இது போன்ற சந்திர பலம் பெற்ற நாட்களில் கடல் தண்ணீர் மேல்நோக்கிப் பொங்கி எழும். கடல் அலை சீறிப்பாயும், அலைபாயும் அந்த நாளில் நாம் விரதமிருந்தால் அலைபாயும் மனதில் அமைதி கிடைக்கும். அப்படிப் பட்ட நாட்களில் ஓர் அற்புதமான நாள் தான் சித்ரா பவுர்ணமி ஆகும். 'சித்ரா பவுர்ணமி' கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழிபிறக்கின்றது.

kupthan

சித்திரை மாதம், பௌர்ணமி நாளன்று காமதேனுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திரர் பிறந்தார். இந்தக்  குழந்தையை இந்திரனும் இந்திராணியும் வளர்த்து வந்தனர். இந்திரனின் மகனாக வளர்ந்த சித்திர புத்திரன், சிவபெருமானைத் தொடர்ந்து வழிபட்டு  வந்தான். சித்திர புத்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்குகளையும்  எழுதிப் பராமரிக்கும் பணியை வழங்கினார் என்றும் புராணம் கூறுகிறது.
 சித்திர குப்தர் வழிபாடு!
 
சித்ரா பௌர்ணமி  அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும்  வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு”என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
 
இந்த வழிபாட்டின்போது 

"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனிபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''

 
என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு, நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக  செய்யும்படி கோரிக்கை வைக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்தின் அளவு குறைந்து புண்ணியக் கணக்கின் அளவு கூடும்.

சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டையில் தனிச்சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள் இல்லத்திலேயே நினைத்து விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும். சில பகுதிகளில் இந்த சித்ராபவுர்ணமி அன்று பொங்கல் வைத்து மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

அன்றைய தினம் பூஜை அறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைத்து அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து, அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றிக் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதானியம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து 'சித்ரகுப்தன் படியளப்பு' என்று எழுதி வைப்பர்.

சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசிக்கொழுக் கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர், மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு தட்டைப்பயறு மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பும், நெய்யும் வைக்க வேண்டும்.

வழிபாட்டின் பொழுது,

சித்ரகுப்தா, சித்திர குப்தா
சேவித்தேன் நான் சித்திரகுப்தா!
நான்  செய்த பாவமனைத்தும்
நல்லவனே நீ கடுகளவாக்கு!
நான்  செய்த புண்ணியமனைத்தும்
நல்லவனே நீ மலையளவாக்கு!
வானும், நிலவும் உள்ளவரைக்கும்
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று!
உணவும், உடையும் உறைவிடம் அனைத்தும்
தினமும் வழங்கத் திருவருள் கூட்டு!

என்று பாடி ஒவ்வொருவரும் வழிபட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பதினாறு பவுர்ணமிகள் வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும்.

சித்ரா பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தை தொடங்க வேண்டிய நாள் சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி அன்று தான். விரதத்தை மேற்கொள்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும்.

எந்தக்கிழமையில் பவுர்ணமி வருகின்றதோ அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தின் ஆதிபத்யமும் வழிபடுபவர்களுக்கு கிடைக்கும்.  'வியாழன் கூடினால் விவாகம் கூடும்' என்பது பழமொழி. எனவே சித்ரா பவுர்ணமி விரதத்தின் மூலம் திருமண யோகமும் கிட்டும். தித்திப்பான வாழ்க்கையும் அமையும். அன்று மலை வலம் வருவதன் மூலமும் மகத்தான பலன் பெறலாம்.
 
 

1 கருத்து: