வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ய காலம்

 
 
புண்யகாலம் என்பதை

1 .
விஷு புண்ய காலம்

2 .
உத்தராயண புண்ய காலம்

3 .
தக்ஷிணாயன புண்ய காலம்

என பலவராகக் கூறுவோம். இதைப் போலவே விஷ்ணுபதி புண்ய காலம் என்பதுவும் மிகவும் சிறப்பானது.


பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் , அனுஷ்டிக்கும் விரத முறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர்.



ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.


ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின்படி  மாசி , வைகாசி , ஆவணி, கார்த்திகை மற்றும் மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது.

அன்றைய தினத்தில் அதிகாலை 1 :30 மணி முதல் காலை 10 :30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லா தேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம். முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் . அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம்.


அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில்  செய்யக் கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று.


ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.


தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்ய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ய காலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும்.

எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல்  இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் . ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லது இந்த புண்ய காலம் ஆகும்.


எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக!

 

1 கருத்து: