புதன், 10 பிப்ரவரி, 2016

ஜெயம் தரும் ஜென்ம நட்சத்திர வழிபாடு



ஆலயத்துக்குச் சென்று இறைவழிபாடு செய்வதற்கு எத்தனையோ விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
அதில் முதன்மையானதாக கருதப்படுவது ஜென்ம நட்சத்திர வழிபாடாகும். இது நம் எல்லோராலும் மிக, மிக எளிதாக கடைபிடிக்கக் கூடியது. அதோடு மிகுந்த பலன் தரக்கூடியது.
இந்த வழிபாட்டுக்கு முதலில் ஒவ்வொரு வரும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறோமோ அதுதான் ஜென்ம நட்சத்திரம்.
ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அது தான் அவரது ஜென்ம நட்சத்திரமாகும். ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி இருப்பார் என்பதை நிர்ணயம் செய்வதே ஜென்ம நட்சத்திரம்தான். ஒருவர் நல்ல நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், அவர் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் அந்த நட்சத்திரத்துக்கு உண்டு.
அதனால்தான் ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
ஒருவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருமணம், சீமந்தம், காது குத்துதல், முடி இறக்குதல், எண்ணை குளியல், மருந்து சாப்பிடுவது, அறுவை சிகிச்சை செய்தல், தாம்பத்திய உறவு போன்றவற்றை வைத்துக் கொள்ளக்கூடாது.

 
அதற்கு பதில் இதர சுபகாரியங்கள் செய்ய வேண்டும். அதாவது குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, அன்னதானம், தானதர்மம் செய்தல், பதவி ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.


குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும்  சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம    நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.  அது  ஜென்ம நட்சத்திரத்தை பலம் பெ£ருந்தியதாக மாற்றும்.

27
நட்சத்திரங்களும் பெண் தேவதைகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யும் போது, அந்த நட்சத்திரத்துக்குரிய பெண் தேவதை மனம் குளிர்ந்து உங்களுக்கு ஆற்றலை அள்ளி, அள்ளி தருவாள்.
ஆலய வழிபாட்டின் போது கருவறை மூலவர் முன் நிற்கும் போது ஒரு நிமிடம் நாம் மனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவோம். அந்த சமயத்தில் நமது ஜென்ம நட்சத்திரத்தையும் மனதில் நினைத்துக் கொள்வது நல்லது.
சிலருக்கு அவர்களது ஜென்ம நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம். அப்படிப் பட்டவர்கள் அவர்கள் பெயர் ராசிக்குரிய நட்சத்திரத்தின் தேவதையை வழிபடலாம்.
ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது.  தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.

 

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.


ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்.
எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள். குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, எந்த கடவுளை வழிபட
வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிபிடத்தக்கது. ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது.
அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம்.

உதாரணத்துக்கு பூரம் நட்சத்திரத்துக்குரிய அதி தெய்வம் பார்வதி என்பதால் பூரம் நட்சத்திரக்காரர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று தவறாமல் அம்பாளை வழிபட வேண்டும். இப்படி ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் தங்களுக்குரிய கடவுளை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.

ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தால் அவர் நம் தலையெழுத்தையே மாற்றி விடுவார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் பெருகி வருகிறது.

நமது ஜென்ம நட்சத்திர நாளில் மட்டுமின்றி கடவுள்களுக்குரிய ஜென்ம நட்சத்திர தினங்களிலும் செய்யும் வழிபாடு நம்மை வாழ்வில் உயர்த்தும். சிவபெருமானுக்கு திருவாதிரை, விஷ்ணுவுக்கு திருவோணம், ராமனுக்கு புனர்பூசம், முருகனுக்கு விசாகம் ஜென்ம நட்சத்திரமாகும்.
திருவாதிரை நட்சத்திர நாளில் சிவனை வணங்கி மருத்துவ சிகிச்சையை தொடங்கினால், எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும்.
சதயம் நட்சத்திர நாளில் கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் உடல் வலிகள் நீங்கும்.
அது போல சுவாதி நட்சத்திர தினத்தன்று திருவாலங்காட்டுக்கு சென்று சிவனை வழிபட்டால் தோஷங்கள் விலகும்.
அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திர நாட்களில் காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தரை வழிபடலாம்.

திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நாட்களில் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் விலகி, இன்பம் பெருகும்.

.
ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது.



 
 

1 கருத்து: