திங்கள், 26 அக்டோபர், 2015

மாபெரும் அந்தஸ்து தரும் அன்னாபிஷேகம்


 
சிவலிங்கத்திற்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர். இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் –  சொர்க்கம் கிடைக்கும் என்பதும்  ஐதீகம்.
 
மற்றவர்களின் பசியை போக்க இறைவன் மறைமுகமாக நமக்கு அன்னதானத்தின் மகிமையை உணர்த்துகிறார். அத்துடன் என்றென்றும் நமக்கு உணவு வழங்கிடும் சிவபெருமானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அரிசி சாதத்தை படைத்து, அந்த அரிசி சாதத்தின் நிறமான வெண்மையை போல், இறைவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியும், அன்பும் தூய்மையானது என்பதையும் அன்னாபிஷேகத்தின் மூலமாக இறைவனுக்கு தெரிவிக்கிறோம்.
 
ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தில் நாம் சமர்பிக்கும் அரிசி சாதத்தில் நமது பெயரும் இணைந்திருப்பதால், அந்த அபிஷேக அன்னத்தை சாப்பிடும் நமக்கு  கோடி புண்ணியங்கள் சேருகிறது. சொர்க்கம்போல அந்தஸ்தான வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும்.
 
அதனால்தான் சொல்வார்கள், “சோறு கண்ட இடம் சொர்கம்” என்று.
 
அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் "அன்னாபிஷேக சோற்றை  கண்டாலே சொர்க்கம்தான்.”
அத்துடன் அந்த அன்னத்தை பிரசாதமாக சாப்பிடுவதற்கு நாம் எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.வீ்ட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும்,  சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம்.
 
சிவனுக்கு அன்னபிஷேகம் செய்யும் நாளன்று,  சிவலாயத்திற்கு சென்று, சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து ஈசனின் அருளை பெற்றிடுவோம்.
 
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே!”
 
பொருள்: இறைவா, எனக்கு என்ன வேண்டும் என்பதை நானறியேன். நீதான் அறிவாய். என் பிறவிப்பிணி தீர்க்கும் மருத்துவராக நீ இருக்கின்றாய். நோயாளியின் நோய் இன்னதென்று மருத்துவர் அறிவாரேயன்றி நோயாளி அறிய முடியாது.
 
அதுபோன்று, வினைப்பிறவி சார்ந்து துன்புறுகின்ற எனக்கு இப்பிறவித் துன்பம் நீங்கிட எதனை அருளவேண்டுமென்பதை நீயே அறிய வல்லவன்.
 
ஆக எனக்கு சுகம் அளிக்கவல்லது எதுவோ அதனை வழங்கும் பொறுப்பு உன்னுடையதே.!
 
 
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக