வியாழன், 17 நவம்பர், 2016

சர்வ மங்கள சஷ்டி தேவி!

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான்.

சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள்.

ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது.

சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள்.

சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் – ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள்.

பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர்.

சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற – உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலத்தை  நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள்.

குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர். அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள்.

இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும்

தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில் படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக