திங்கள், 24 அக்டோபர், 2016

காசியில் தீபாவளி!

இந்துக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். கங்கையின் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி, விசுவேசுவரரைத் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. காசியில் கங்கை நதிக்கரை சுமார் ஆறு கிலோமீட்டர் நீளம் கொண்டது. வடக்கே வருணை நதி கலக்கும் இடத்திற்கும்- தெற்கே அஸி நதி கலக்கும் இடத்திற்கும் இடையே இந்தப் பகுதியும் காசி நகரமும் அமைந் திருக்கின்றன. அதனால் தான் அதற்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டிருக் கிறது.




புனித கங்கை நதி அலங்காரத் தோற்றம் அளிக்கிறது. பெண்கள் கங்கைப் படித்துறையில் தீபங்கள் ஏற்றி வைத்து, தீர்க்க சுமங்கலிகளாக இருக்க கங்கையை வேண்டி பூஜை செய்கிறார்கள். காசி கங்கை நதியில் யமுனை, சரசுவதி, தூத்பாபா, கீர்னா ஆகிய புண்ணிய நதிகளும் கலந்து ஓடுவதாக ஐதீகம் உண்டு. அதனால்தான் காசியில் ஓடும் கங்கையைப் "பஞ்சகங்கா' என்று அழைக்கிறார்கள்.


கங்கைக் கரை ஓரமாக அறுபத்து நான்கு ஸ்நானக் கட்டங்கள் (படித்துறைகள்) உண்டு. படித்துறை ஓரமாக ஆலயங்களும் அமைந்து இருக்கின்றன. இந்தப் படித் துறைகளில் மிக முக்கிய மானவை ஐந்து. அஸி கட்டம்- அஸி நதி கங்கை யில் சங்கமமாகும் கட்டம்; தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் கட்டம்; வருணா கட்டம்- வருணை நதி கங்கையில் சங்கமமாகும் கட்டம்; அனுமன் கட்டம்; மணிகர்ணிகா கட்டம்- மகேசுவரன் கங்கைக் கரையில் நீராடி ஆனந்த நடனம் செய்த வேளையில் அவருடைய காதிலிருந்த குண்டலமும், முடியிலிருந்த மணியும் கங்கையில் விழுந்து கலந்த இடம். இந்த ஐந்து முக்கியமான கட்டங்களிலும் தீபாவளியன்று ஸ்நானம் செய்கிறார்கள். கங்கையில் மணி கர்ணிகாவில் நீராடி, மணிகர்ணிகாஅஷ்டகத்தைப் பாராய ணம் செய்தால், பிறவிக் கடலைக் கடந்து விடலாம் என்கிறார் சங்கர பகவத் பாதர்.

கங்கைக் கரை நெடுகிலும் மூங்கிற் குடைகள் வட்ட வட்டமாகக் காணப்படுகின்றன. இவற்றின் நிழலில் பண்டாக்கள் அமர்ந்து, தீபாவளி ஸ்நானம் முடித்து வருபவர்களுக்குப் பூஜைகளைச் செய்து வைக்கிறார்கள். உயர்ந்து நிற்கும் மூங்கிற் கழிகளின் முடியில் கூடைகள் தொங்குகின்றன. தீபாவளியை ஒட்டி இவற்றில் தீபங்களை ஏற்றி வைப்பார்கள். ஆகாச தீபங்கள் என்று இவை வணங்கப்படுகின்றன. கங்கைக்கரை ஓரம் உண்மையாகவே தீப-ஆவளி (தீபங்களின் வரிசை) தரிசனமாகக் கிடைக்கிறது.

மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி கங்கை யைப் பூஜித்துவிட்டு மேலே ஏறிவந்தால் தாரகேசுவரரைத் தரிசனம் செய்யலாம். அதை முடித்துக் கொண்டு, கங்கை நீரை எடுத்துக் கொண்டு வந்து, காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்வது முறை. நாமே லிங்கத்துக்கு அபிஷே கம் செய்து, கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள லாம். தீபாவளியன்று கிடைக் கும் மிக  அபூர்வமான அனு பவம் இது.

காசி விசுவநாதரை நாம் தொட்டுத் தரிசிக்கலாம்; பாலாபிஷேகம் செய்யலாம்; மலர் மாலைகள் சாற்றலாம். அபிஷேகம் செய்த கங்கை நீரையும் பாலையும் பிரசாத மாகப் பெற்று  அருந்தலாம்.

காசியில் இருப்பது ஜோதிலிங்கம். மகா விஷ்ணு ஈசனை இங்கே ஒளிவடிவமான லிங்க ரூபத்தில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. காசி விசுவநாதர் உருவில் சிவபெருமான் என்றென் றும் இங்கே சாந்நித்யம் கொண்டிருக்கிறார் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அதனால் காசி அவிமுக்த க்ஷேத்திரம்; காசி விசுவநாதர் அவிமுக்தேசுவரராக விளங்குகிறார். ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும், ஞானசம்ஹிதையிலும், வால்மீகி ராமாயணத்திலும் காசியின் சிறப்பு கூறப்பட்டிருக்கிறது. அங்கே விசுவநாதரை தீபாவளி தினத்தன்று வழிபடுவது விசேஷம்.


காசி விசுவநாதர் ஆலயத்தில் விடியற் காலை மூன்று மணிக்கு உக்ஷத்கால பூஜையும், பன்னிரண்டு மணியை ஒட்டி உச்சி கால பூஜையும், மாலையில் சந்தியா பூஜையை ஒட்டி சப்தரிஷி பூஜையும் நடக்கின்றன. நள்ளிரவில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறு கிறது.

சப்தரிஷி பூஜை மிக விசேஷமானது. ஏழு அந்தணர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிவ ஸ்தோத்திரம் சொல்லுகிறார்கள். படிப் படியாக சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார்கள். முதலில் கங்கை நீர், பிறகு பால், சந்தனம், தேன் ஆகிய வற்றினால் அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் பலவகை மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள். அதன்பின் வளையங்களாக மலர் மாலை அலங்காரம். நாகாபரணம் சிவலிங்கத் தின் முடியை அலங்கரிக் கிறது. ஐந்துமுக விளக்கு களைக் காட்டி, முடிவில் கற்பூர ஆரத்தி எடுக்கிறார் கள். ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலை களையும், பஞ்சமுக தீபம் ஐம்புலன்களையும் உணர்த்துவதாக, இந்த பூஜையின் தாத்பரியம் சொல்லப்படுகிறது. காசி விசுவநாதரின் பூஜைகளிலேயே இதுதான் மிகவும் முக்கிய மானது. தீபாவளியன்று விசுவேசுவரருக்குப் பஞ்சமுக அலங்காரம் செய்து, கவசமாகச் சாற்றுகிறார்கள்.

காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருப்பது காசி விசாலாட்சி யின் ஆலயம். இது தமிழ்நாட்டுப் பாணியில் அமைந்த திருக்கோவில். தீபாவளியன்று விசுவநாதர் ஆலயத்திலும் இங்கேயும் நாதசுர இசை மங்களகரமாக முழங்குகிறது. இங்கே அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதுண்டு. தீபாவளியின்போதும் மகா சிவராத்திரியன்றும் தங்க விசாலாட்சி அம்மனைத் தரிசிக்கலாம்.

காசியில் தீபாவளியன்று விசேஷமான அலங்காரங்களுடன் எழுந்தருளுவது அன்னபூரணி. அன்று அன்னபூரணியின் தரிசனத் துக்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். காசியில் விசுவநாதர் ஆலயத்துக்கு இணையாக மிகச் சிறப்புடன் விளங்குவது அன்னபூரணியின் ஆலயம்தான்.

சாதாரண நாட்களில் கருவறையில் அன்னபூரணி அம்மனின் தரிசனம் கதவின் துவாரம் வழியாகவே பக்தர்களுக்குக் கிட்டுகிறது. கருவறைக்கு எதிரே எண்கோண வடிவம் கொண்ட மண்டபம் இருக்கிறது. அங்கே அமர்ந்து பக்தர்கள் பஜனை செய்கிறார்கள். பூஜை நேரத்தில் ஆலயமணி முழங்குகிறது. பசுவின் முகம் கொண்ட இந்த ஆலயமணியின் நாதத் தில் பக்தர்களின் கோஷம் கலந்து ஒலிக்கிறது. கற்பூர ஆரத்தி காட்டி குங்குமப் பிரசாதம் அளிக்கிறார்கள்.

காசியில் இருப்பவர் களுக்கு அன்னவிசாரம் இல்லை என்பது வாக்கு. காசிக்கு வரும் பக்தர்களும் அன்னதானம் செய்வதையே சிறப்பாகக் கருதுகிறார்கள். ஈசனுக்கே அன்னபூரணி உணவளித்ததாக வரலாறு கூறுகிறது. அன்னபூரணியின் திருவுருவத்தை இந்தத் தோற்றத்திலேயே காசியில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.


அன்னபூரணி அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளிக்கும் தேவி. ஆகவே உலகத்தில் மக்கள் எதனால் உயிர் வாழ்கிறார்களோ, எந்த சௌக் கியங்களை அடைய ஆசைப்படுகிறார்களோ- அவ்வளவையும் தரும் செல்வியாக அன்னபூரணி விளங்குகிறாள். அந்த தேவியின் தரிசனத் துக்காக தீபாவளியன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அன்னபூரணியைப் பூஜை செய்து வழிபடும் முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்க அன்னபூரணிக்குப் பூஜைகள் உண்டு. ஆனால் முழு தரிசனம் கிடைக்காது. திரை போட்டு மறைத்து விடுகிறார்கள். அடுத்த நாள் சோடி தீபாவளி. அன்று தரிசனத்துக்காக சந்நிதியைத் திறந்து வைக்கிறார்கள். தீபாவளியன்று ஐசுவரியங்களை அளிக்கும் தேவியாக விளங்கும் அன்னபூரணிக்கு குபேர பூஜை நடக்கிறது. அன்று கங்கா ஸ்நானம் செய்துவிட்டு ஏராளமான மக்கள்- குறிப்பாக சுமங்கலிகள் தரிசனம் செய்கிறார்கள். அடுத்த நாள் சகலவிதமான தன, தான்ய, சம்பத்துகளை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை நடைபெறுகிறது. இப்படி தீபாவளியை ஒட்டி மூன்று நாட்கள் விசேஷமாக தரிசனம் கிடைக்கிறது.


அந்த உலகத்தாய் தீபாவளியன்று ஒளி வடிவமாகப் பிரகாசிக்கிறாள். நவரத்தினங் களும் இழைத்த அணிகலன்கள் அன்னையின் மார்பில் தவழ்கின்றன; அருள்பாலிக்கும் கரங்களை அலங்கரிக்கின்றன; தண்ணொளி வீசும் மணிமகுடமாகத் திகழ்கின்றன. பொன்னும் மணியும் நவரத்தினங்களும் பூட்டி, பொன் உருவிலேயே ஜகன்மாதாவை வைத்துப் பூஜிக்கிறார்கள்.

ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள். உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம். ஆலகாலத்தையும் அமுதமாய் விழுங்கிய எம்பிரானுக்கு அப்படி ஓர் எளிய தோற்றமா? அத்தனை பசியா? "உலகக் குழந்தைகளைக் காப்பாற்று; அதற்கு ஒரு பாவனையாக எனக்கு உணவு கொடு!' என்று கேட்கிறார் கைலாசபதி.

அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாகத் தரிசனம் தருகிறார்கள். அந்தத் தோற்றம், கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது. காசி விசுவேசுவரர், வெண்ணீறணிந்த பெருமான்- வெள்ளி மலையமர்ந்த ஈசன் வெள்ளி விக்கிரகமாக ஜொலிக்கிறார்.

லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக் கையை ரூபாய் நோட்டு களாக மழைபோலப் பொழிகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை யின்போது, மூன்று நாட்களும் காசியில் உள்ள கோவில்களில் திருவிழாக் கோலம் கண்ணைக் கவருகிறது. காசி விசுவநாதர் ஆலயத்திலும், அன்னபூரணி கோவிலிலும் இந்தச் சிறப்பு தனி ஒளியுடன் துலங்குகிறது. அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப் படுகிறது. வகை வகையான இனிய பணியாரங் கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன. எங்கும் பசியாற்றும் உணவு இறைவனின் அருளாகப் பொங்கி நிறைகிறது.

"அன்னபூர்ணே சதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே!
ஞானவைராக்ய வித்யர்த்தம்
பிட்சாம் தேஹி ச பார்வதி'

என்கிறார் ஆதிசங்கரர். அதாவது, "ஜகன்மாதாவான அன்னபூரணி! நீ உன் குழந்தைகளுக்கு முக்தியடைய உதவும் பேரறிவையும் வைராக்கியத்தையும் தந்து அருள்பாலிக்க வேண்டும் தாயே' என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணியைத் துதிக்கிறார். நீராடும் போது நாமும் அந்த சுலோகத்தைச் சொல்லிக் கொள்ளுகிறோம்.

காசியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி அனுமான் காட் என்ற கங்கைப் படித் துறை அமைந்துள்ள நகரப் பகுதி. அங்கே உள்ள தமிழர்கள் அன்று விடியற்காலையிலேயே எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கையில் நீராடுகிறார்கள். நம்மைப்போலவே அங்கும் கொண்டாடுகிறார்கள்.

உண்மை தான்- காசியில் அன்ன விசாரமே இல்லை! அதுவும் தீபாவளித் திருநாளில் துளியும் இல்லை!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக