திங்கள், 22 ஜூன், 2015

இஷ்ட வரங்கள் வர்ஷிக்கும் இஷ்ட காமேஸ்வரி!


 
இஷ்ட காமேஸ்வரி  நம்  நியாயமான கோரிக்கைகளை அபிலாஷைகளை நிறைவேற்றும் தேவி.

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே!
ஸர்வாபீஷ்ட ப்ரதாயின்யை தீமஹி!
தந்நோ இஷ்ட காமேஸ்வர்யை ப்ரசோதயாத்!

ஸ்ரீசைல க்ஷேத்திர வனத்தின் நடுவே பூமிக்கு அடியில் காட்சியளிக்கிறாள் இந்த அற்புத தேவி. கோயில் காட்டுப்பகுதியில் புலிகள் சரணாலயத்தின் நடுவே இருப்பதால் இங்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. ஒரு நாளைக்கு பத்து ஜீப்புகளில் தலா ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்> இதற்கு முந்திய நாளே பதிவு செய்துகொள்வது உசிதம்.

அடர்ந்த காட்டுப்பகுதி  முறையான சாலைகளோ உணவுப்பொருட்களோ கிடையாது. காட்டுக்கு நடுவே இயல்பாக ஏற்பட்டுள்ள பாதைகள்  வழியே பயணம். தூரம் என்னவோ 11 கிமீ தான் ஆனால் செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது. தண்ணீர் உணவுப்பொருட்கள் பூஜை சாமான்கள்  எல்லாம் காட்டுக்குள் செல்வதற்கு முன் கடைகளில் வாங்கிக்கொள்ள வேண்டும். 



ஆளரவமற்ற காடு பருத்து உயர்ந்து சூரியனையே மறைக்கும் மரங்கள். ஆறடி உயர புற்றுகளும் ஆங்காங்கே உண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்துக்குமேல் ஜீப் செல்ல முடியாது. இறங்கி குழுக்களாக நடந்துதான் செல்லவேண்டும்.



கோயிலுக்கு செல்லும் வழியில் இங்கு வாழும் வேடர்களான செஞ்சுக்களை காண முடியும். இவர்கள் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி வாழ்பவர்கள். காட்டில் விளையும் தேன் பழங்கள் போன்றவற்றை விற்கின்றனர். திடீரென நம் கண் முன்னே மரங்கள் இல்லாத ஒரு திறந்தவெளி. இங்கு தரைமட்டத்தில் ஒரு கோயில் விமானமும் கீழே பூமிக்கடியில் வீற்றிருக்கும் இஷ்ட காமேஸ்வரி தேவியும்.

download

ஒரு கீற்றுக்கொட்டகையே அர்த்த மண்டபம். அதில் ஒரு புறம் பழைமையான சிலைகள்  இன்ன உருவமென்றே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றன. மற்றொரு புறம் கோயிலுக்குள் இறங்கும் துவாரம். வரிசையில் சென்று கோயிலின் துவாரம் வந்தவுடன் தவழ்ந்து உள்ளே செல்ல வேண்டும். சன்னதியின் உள்ளே சம்மணமிட்டு அமரக்கூடிய அளவுக்கு இடவசதி உண்டு. தேவியின் அருகில் அமரும்போது மெய்சிலிர்ப்பது நிஜம்.  காற்று வெளிச்சம் இல்லாத பாதாளத்தில் நாளெல்லாம் தேவி அமர்ந்திருப்பது அன்னையின் அருளே.



கண்களை மூடி மனதார பிரார்த்திவிட்டு அன்னையை தரிசனம் செய்து குங்குமத்தை அன்னையின் நெற்றியில் வைக்கும்போது மெய்சிலிர்க்கும். இளம் சூட்டுடன் நம் மனித உடலில் கைவைக்கும் உணர்வு  இதுவே இவ்வாலயத்தின் அதிசயம்.


 
அன்னையின் நெற்றி ஸ்பரிசத்தில் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் பளிக்கும். பூசாரி குங்குமமும் வளையல்களும் பிரசாதமாகக் கொடுப்பார். மீண்டும் வெளியே வந்து  நடை  ஜீப் பயணம்.  என கானகத்திலிருந்து வெளியே வந்துவிட்டாலும் நம் மனக்கண்ணில் நீக்கமற நிறைந்திருப்பாள் இஷ்ட காமேஸ்வரி தேவி.

செல்லும் வழி    ஸ்ரீசைலத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ளது இதில் 11 கிமீ புலிகள் சரணாலயத்துக்குள் உள்ளே செல்லவேண்டும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக