புதன், 29 மார்ச், 2017

சுகம் அருளும் கோதூளி நீராடல்!

கோதூளி என்றால் பசுவின் கால் குளம்படிப் பட்ட புனிதமான மண் என்று பொருளாகும்.

கோ தூளி நீராடல் என்பதாகப் பசுவின் கால் குளம்படி பட்ட மண் துகளை எடுத்து வந்து பூஜித்து, நீரில் இட்டு நீராடுதல் ஆகும். இதுவே பவித்ரமான கோதுளி ஸ்நானம் ஆகும். இவ்வாறு பசுவின் கால்குளம்படி பட்ட மண்ணை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து வீட்டில் வைத்திருந்தால், எத்தகைய காத்துக் கருப்பு தோஷங்களும் வராது காப்பதோடு தக்க தற்காப்புச் சக்திகளையும் தரும்.

மக நாளில் கோதூளி பூஜை, கோதூளி நீராடல் விசேஷமான புண்ய சக்திகளைப் பெற்றுத் தரும். 

பிரம்மா, விஷ்ணு, சிவன் முதல் திருமகள், கலைமகள், பார்வதி தேவி உட்பட அகஸ்தியர் மாமுனி குபேரன் வரை அனைத்துத் தேவாதி தேவ தேவதா மூர்த்திகளும், சித்தர்களும், மாமுனிகளும் பசுவின் உடலில் வசிக்கின்றனர் எனில், பசு எத்தகைய உத்தம தெய்வீகப் பிறவி என அறிக!
தினமும் பசுவைத் தொட்டுக் கும்பிட்டு வலம் வந்து வணங்குவது, தரித்திர நிலையை நீக்க வல்லது ஆகும். 

லால்குடி, ஒரு யுகத்தில் கோசாலைப் பூஜைக்குப் பிரசித்தி பெற்ற வூராகும். இங்கு காராம் பசுக்கள் மிகுந்திருந்தன. காரணம், பண்டையக் கால காயத்ரீ நதிக் கரையில் இது அமைந்திருப்பதே! தற்போது இந்நதி சிதிலமடைந்து விட்டது. ஏதோ பெயருக்குக் கால்வாயாக உள்ளது.

இங்கு முற்காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பொலிந்தன. அரிசி, கோதுமை மற்றும் ஏனைய தானியங்களின் தவிடை இங்கு மக்கள் இலவசமாக அளித்த காலமும் உண்டு.

அக்காலத்தில் தவிடை எவரும் விற்பது கிடையாது. வீட்டு வாசலில் தான, தர்மத்திற்காக எடுத்து வைத்து விடுவார்கள். தவிடைத் தானனமாக அளித்து, அதில் சிறிதை எடுத்துப் பானையில் வைத்தலால் அதிர்ஷ்டம் பெருகும். பணம் விருத்தி ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த கோ ஆசீர்வாதமும் ஆகும். இவ்வாறு தானமளித்தத் தவிட்டில் ஒரு பிடியை மீந்து மீண்டும் தவிட்டுப் பானையில் சேர்த்திட்டால் தவிட்டுப் பானையில் பொன் நிறையும் என்பது ஐதீகம்.
மகம் மற்றும் அவிட்ட நட்சத்திர நாளில் பசுக்களுக்காகத் தானமாக அளிப்பது வீட்டில் செல்வ கடாட்சத்திற்குப் பெரிதும் உதவும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக