வெள்ளி, 21 அக்டோபர், 2016

குபேர சம்பத்துடன் வாழ சங்கு ஸ்தாபண பூஜை!

குபேர சம்பத்துடன் வாழ சங்கு ஸ்தாபன முறை முக்கியமான விஷயம். ஒரு மனையில் சாபதோஷம்,பட்சி தோஷம், முனி தோஷம், சந்யாச தோஷம், சல்லிய தோஷங்கள் விலகி விட முற்கால கிரஹ சாஸ்திர விதிப்படி-

வீட்டில் ஆயாதநிலை பார்த்து ஓட்டு மொத்தப் பணிகளைச் செய்வதற்கு சங்கு ஸ்தாபணம் என்று சொல்வது வழக்கச்சொல். இவை தவிர சங்கு ஸ்தாபண பூஜை என்று ஒரு விதி இருக்கிறது.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் காலம் அல்லது சுப தினங்களில் வாசற்படி அருகே கலச பூஜையில் வாஸ்து பகவானை வழிபட்டு அதன் எதிரெ வடக்கு(அ) கிழக்கு முகமாக அரிசியில் வலம்புரிசங்கு ஒன்றை வைத்து அதற்கு உபசாரங்கள் செய்து.

தபினீ கலா முதல்... பூர்ணா கலா வரை 18 கலைகளை சங்கீன் மேல் வர்ணித்து நிலைவாசம் மேல் மையக்குறியீடு செய்து அதில் சங்கு அளவு பார்த்து சுழிமுனை உள்ளே வரும்படி பிரதிட்டை செய்தல் வேண்டும் சங்கினுள் நவரத்திம் பஞ்ச லோகம், லட்சுமிகாசு வைத்து ஆலய குடமுக்கில் யாகத்தில் இட்ட காசு ஒன்றையும் வைத்து இரண்டு சிமெண்டு கலவையால் மூடிவிட வேண்டும்.

நவதான்யம்,பூமிகிழங்கு, பூமிசமூலம் என்ற கலவை ஆகிய வற்றால் நிலை வாசல் அருகே உட்பகுதியில் வாஸ்து கிருஹலட்சுமி மூல மந்திரத்தால் சிறிதளவு(ஹோமம்) யக்ஞ வழிபாடு செய்து விடல் வேண்டும். சங்கு ஸ்தாபனம் பூஜை செய்து வலம்புரிச்சங்கு பதித்து பிரதிட்டா பணம் செய்யும் வீட்டில் பொருளாதார வசதி, ஏற்பட்டு பணம் காசுகள் சேர்ந்து கொண்டிருக்கும் குபேர சம்பத்துக்குக் குறைவு இருக்காது.

ஓம் ஐம் ஸ்ரீம் க்லிம் வாஸ்து க்குஹ லட்சுமியை குபேர ஸ்காயை ஐஸ்வர்ய நிலயாயை,சௌபாக்ய கராயைக்ரஹ பீடா கரணாயை
ஸ்ரீம் க்லீம் சுலாகா என்ற மூலமந்திரத்தால் அரசங்குச்சி நவதான்யத்தால் ஓம் செய்து ஜெபிக்க வேண்டும்.

ஓம் வாஸ்து தேவியே போற்றி
ஓம் கிருஹ லட்சுமியே போற்றி
ஓம்வளமூலமே போற்றி
ஓம்யோக சக்தியே போற்றி
ஓம் இல்லத்தின் செழிப்பேபோற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் கலசம் ஏந்திய போற்றி
ஓம் கற்பக விருட்சம் போற்றி
ஓம்சங்கு மூலமே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் தானியத் திருமகனே போற்றி
ஓம் கலைகள் உமையோப் போற்றி
வாஸ்து கிருஹ லட்சுமியே போற்றி
 
 

புதன், 12 அக்டோபர், 2016

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு!

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

 

நன்மைகள் பலதரும் நவ துர்க்கைகள்!

நவராத்திரி வழிபாட்டின் முதல் மூன்று நாள் வழிபாட்டிற்குரிய தெய்வமான துர்க்கையை வடமாநிலங்களில் ஒன்பது நாளும் ஒன்பது துர்க்கையாக வழிபடுகின்றனர்.

நவராத்திரி வழிபாட்டில் மிக முக்கியமானது துர்கையின் வழிபாடு. நவராத்திரி வழிபாட்டின் முதல் மூன்று நாள் வழிபாட்டிற்குரிய தெய்வமான துர்க்கையை வடமாநிலங்களில் ஒன்பது நாளும் ஒன்பது துர்க்கையாக வழிபடுகின்றனர். பல்வேறு வேதங்களும், வராஹ புராணமும் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாக கூறுகின்றன. நவதுர்க்கைகளின் பெயர்களும், அவரது அம்சங்களும் ஸ்லோகமாக களபிரம்மதேவரால் வராஹ புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.நவராத்திரி நாட்களில் இந்த ஒன்பது துர்க்கைகளையும் முறையாக செய்வதால் எல்லா நற்பலன்களையும் பெறலாம்.

நவதுர்க்கைளின் பெயர்கள்:-

சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, களைராத்திரி, மகா கெளரி, சித்தி தாத்ரி என்றவாறு நவதுர்க்கைகள் அழைக்கப்படுகின்றனர், நவதுர்க்கைகளும் தங்களுக்கென தனி சிறப்பு உருவமும், ஆயுதமும், வாகனங்களையும் கொண்டு அருள் புரிகின்றனர்.

பார்வதியாய் சிவனை மணந்த சைலபத்ரி:-

அன்னையின் முதல் வடிவம் சைலபுத்ரி, மலைமகள், பார்வதி, ஹேமாவதி, தாட்சாயிணி என்றும் இவறை அழைப்பர்.

நம் உடலில் உள்ள ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமான (காளை) வாகனமாக வைத்து கொண்டு ஒரு கையில் சூலமும், ஒரு கையில் தாமரையும் கொண்டு அருள் புரிகிறார்கள்.

தவம் புரியும் பிரம்மசாரிணி:-

நவராத்திரி இரண்டாம் நாள் வழிபட வேண்டியவள் பிரம்மசாரிணி எப்பொழுதும் தவத்திலேயே வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் கொண்டு அருள்பாலிக்கிறாள். இவளுக்கென தனிப்பட்ட வாகனம் இல்லை அறிவு, ஞானம், நன்றி போன்றவற்றின் வடிவாய் திகழ்கிறாள் பிரம்மசாரிணி ஸ்வாதிடானத்தில் இருப்பவள்.

வீரத்தை அருளும் சந்திரகாண்டர்:-

சந்திர பிறையை தன் நெற்றியில் மணிபோல் அணிந்திருப்பதால் இவள் சந்திரகாண்டா. பத்து கரங்களுடன் மூன்று கண்களுடன் சிங்க வாகனத்தில் காட்சி தருபவர். 4 மணி மணிமுதுரக சக்ரத்தில் இருப்பவள். வணங்குபவருக்கு வீரத்தை வழங்குபவள்.

இன்பத்தை தருபவள் கூஷ்மாண்டா:-

படைத்தல் உருவமாய் காட்சி தருபவள் கூஷ்மாண்டா. சூரிய மண்டவத்தில் இருப்பவள். எட்டு கரத்துடன் சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவள், எட்டாவது கரத்தில் கலசததுடன் காட்சி தருகிறாள் அந்த கலசத்தின் மூலம் அஷ்ட சித்தியும், நவததியையும் பக்தர்களுக்கு தருபவள். அனாஹத சக்ரத்திற்கான கூஷ்மாண்டாதேவியை வணங்கினால் பாவம் நீங்கி இன்பம் பெறலாம்.

தூய்மையின் வடிவாய் மனதிற்கு அமைதி தருபவள் ஸ்கந்தமாதா

ஸ்கந்த என்றால் கந்தன், மாதா என்றால் தாய் கந்தன் தாயாக காட்சி தருபவள் ஸ்கந்த மாதா. தன் மடியில் ஆறுமுகத்துடன் கந்தனை அமர்ந்தபடி சிங்க வாகனத்தில் காட்சி தருகிறாள். இவளை வணங்குபவர் மனமும், ஆதாமாவும் அமைதி பெறும். விசுத்தி சக்ரத்தின் தெய்வமாக திகழ்கிறான்.

உலகை காத்த காத்யாயினி:-

நவராத்திரியின் ஆறாம் நாள் வழிபட வேண்டியவள் காத்யாயினி, இவளே மகஷாசுர மர்த்தினியும் ஆவாள் கையில் வாளுடன் சிம்மம் அமர்ந்திருப்பவள். ஆக்கினை சக்கரத்தின் இறைவியாக திகழ்கிறாள்.

அஞ்ஞானம் நீக்கும் காளராத்திரி:-

நவ துர்க்கைகளில் பயங்கரமான தோற்றம் கொண்டவர். நவராத்திரியின் ஏழாம் நாளில் வழிபட வேண்டிய காளராத்திரியை சுபங்கிரி என்றும் அழைக்கின்றனர்.

கழுதை மீது ஏறி அமர்ந்து, நான்கு கரத்துடன், கருமை நிரத்தில் இருப்பவள் காளராத்திரி.

வெண்மை ரூபத்தில் மகாகெளரி:-

பார்வதி சிவனை நோக்கி தவம் புரிந்த போது அவள் மன்மூடி கருமை நிறமானது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தருமணம் செய்யும் முன் பார்வதியை கங்கை நீரால் நீராட்டினார். அதன் காரணமாய் தேவியின் உடல் பால் போல் வெண்மையாய் மாறியதாம் அவளே மகா கெளரி துர்க்காஷ்டமி நாளில் துர்க்கையை மகா கெளரி என வழிபடுகிறோம், இவரின் வாகனமும் வெள்ளை காளை.

சக்தி தரும் சித்திதாத்தி:-

தாமறை மலரில் நான்கு கரத்துடன் அமர்ந்திருப்பவள் பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் அருள கூடியவள். பரமசிவனே இவளை வழிபட்டு அனைத்து சித்திகளையும் பெற்று அர்த்த நாரீஸ்வரர் ஆனார் நவராத்திரியின் கடைசிநாளான மகா நவமிக்குரிய துர்க்கைகளே.

 

திங்கள், 3 அக்டோபர், 2016

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம்!

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.
‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம். 
புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக போற்றப்படுகிறார். ‘வேங்’ என்றால் ‘பாவம்’ ‘கடா’ என்றால் ‘தீர்த்து வைக்கும் சக்தி’ என்று பொருள். ஆதலால் திருப்பதிக்கு ‘வேங்கடாச்சலம்’ என்ற பெயர் வந்தது. 
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீவேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.
 
 
புரட்டாசி சனிக்கிழமை விரதம்!
 
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
 
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
 
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும். 
 
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
 
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். 

ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.
 
ஒருமுறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி ‘மும்மூர்த்திகளில் யார் பெரியவர்’? யாருக்கு ‘அவிர்பாகம்’ கொடுப்பீர்கள்? என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார்.
 
முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை.  அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச்சென்றார் பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது. 
 
ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார். 
 
பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை (திருமலை) தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாத்மியத்தில் உள்ள கதையாகும்.
 
 
 
 

தங்கம் கலந்த மருந்து பிரசாதம்!

அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி அம்மன் (பத்ரகாளி) கோயில்!


நீங்கள் கோயிலுக்குப் போனால் பால், பழம், சர்க்கரைப் பொங்கல் இன்னும் சிலவற்றை நைவேத்யமாக படைத்திருப்பீர்கள். ஆனால், கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம்,கூத்தாட்டுக் குளம் என்ற இடத்தில் உள்ள நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயிலில்,நோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் மருந்தை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த கோயிலில் தினமும் அம்மனுக்கு மருந்து நைவேத்யமும் செய்கிறார்கள்.



மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது இங்கு சிறப்பு!

நவராத்திரி நாட்களில் தங்கம் கலந்த மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லிக்காட்டு இல்ல பரம்பரை நம்பூதிரிகள் வைத்தியம் செய்து வந்தனர். அங்குள்ள பெரியவர் ஒருவரின் கனவில் நோய் தீர்க்கும் தெய்வமான, தன்வந்திரி தோன்றி, “தளிக்குந்நு” என்ற இடத்தில் பலர் நோயால் அவதிப்படுகின்றனர். நீங்கள் சென்று காப்பாற்றுங்கள். அங்கு நிரந்தரமாக தங்குங்கள். மேற்கு நோக்கிய சிவன் கோயில் அங்கு இருக்கும்,” என்றார்.
 
பெரியவர் நம்பூதிரி, இந்த விஷயத்தைக் குடும்பத்தினருக்கு தெரிவிக்க நெல்லிக்காட்டு குடும்பம் தளிக்குந்நு நோக்கி புறப்பட்டது. கூடவே தங்கள் குடும்பக் கடவுளான அம்மன் விக்ரகத்தையும் எடுத்துச் சென்றனர். வழியில் ஒரு முனிவர் குறுக்கிட்டு வழிகாட்டினார்.அவர்கள் தளிக்குந்நு சிவன் கோயில் அருகில் கூத்தாட்டுகுளம் என்ற இடத்தில் தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அந்த நம்பூதிரி குடும்பம் விஷக் கடிக்கு சிகிச்சை செய்வதில் பிரபலமானது. எனவே பாம்பு கடித்து ஒருவர் சிகிச்சைக்கு வந்த போது, புதிய இடத்தில் சிகிச்சை தரச் சற்று தயங்கிய நம்பூதிரி பின்னர் சிகிச்சை அளித்தார். வந்தவர் குணமடைந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அங்குள்ள கால்நடைகள் எல்லாம் இறந்தன. இதனால் தலைமை நம்பூதிரி மனம் உடைந்து தொடர் பஜனை பாடிக்கொண்டே இருந்தார். அப்போது ஏற்கனவே சந்தித்த முனிவர் வந்து, இனி விஷக்கடிக்கு சிகிச்சை தர வேண்டாம், கண் சிகிச்சை செய்யுங்கள்” என்று கூறி கண் மருத்துவத்திற்கான ஓலைச் சுவடிகளை அவரிடம் தந்தார். முனிவரது கட்டளைப்படி தங்களோடு எடுத்து வந்த பகவதி (பத்ரகாளி) அம்மன் விக்ரகத்தை கூத்தாட்டு குளத்தில் பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர்.
 
“இந்த அம்மனின் ஆசியோடு ஆயுர்வேத முறைப்படி கண்சிகிச்சையை நடத்துங்கள். மருந்தை தேவிக்கு நைவேத்தியம் செய்த பின்பு நோயாளிகளுக்கு தாருங்கள்” என்று கூறி விட்டு முனிவர் மாயமானார். முனிவராக வந்தது தன்வந்திரிதான் என எண்ணி, தன்வந்திரி விக்ரகமும் அங்கு பிரதிட்டை செய்யப்பட்டது. அந்த நம்பூதிரி குடும்பத்தின் வாரிசுகள் டாக்டர். என்.பி.பி. நம்பூதிரி, என்.பி. நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இந்தக் கோயிலை இப்போது நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் முறைப்படி ஆயுர்வேதம் படித்து டாக்டர்களாகி “சூஷ்ரீதரீயம்” என்ற கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைக் கோயில் அருகிலேயே நடத்தி வருகின்றனர்.
 
இந்த மருத்துவமனையில், பிற மாநில மக்கள், குறிப்பாக தமிழகத்தினர், வெளிநாட்டினர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நவீன மருத்துவ கருவிகளுடன் பாரம்பரிய ஆயுர்வேத கண்சிகிச்சை அளிப்பதால் இந்த மருத்துவமனை குறுகிய காலத்தில் புகழ் பெற்று விட்டது.பரம்பரை வழக்கமாக, இங்கு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தை அதிகாலையில் அம்மனுக்கு நைவேத்யம் செய்கிறார்கள். அதே போன்று நோயாளிகள் வீட்டிற்கு வாங்கி செல்லும் மருந்து களையும் அம்மன் முன்பு வைத்து சிறப்பு பூசை செய்கின்றனர்.மருத்துவமனைக்கு வருபவர்கள் தவறாமல் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபடுகின்றனர். கண்ணொளி கிடைக்க வேண்டுகிறார்கள்.
 
சாதி, மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் வந்து வணங்கும் இந்த கோயில், கேரள பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. பூசைகள் மிக பக்தியுடைய நம்பூதிரிகளால் நடத்தப்படுகிறது.
 
ஆண்டு தோறும் பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேறி, 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. அப்போது அங்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு இலவசம்.
 
கோட்டயம்: கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பத்ரகாளி கோயிலில், "மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி' ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் தேதி துவங்குகிறது.
 
கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ., தூரத்தில், கூத்தாட்டுகுளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. 600 ஆண்டு பழமையானது. வழிபடும் பக்தர்களுக்கு, மருந்தை பிரசாதமாக தருவது, இக்கோயிலின் தனிச்சிறப்பு. 

ஆயுர்வேத ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நோய் தீர்க்கும் மூலப்பொருட்களை சேர்த்து மருந்து தயாரித்து, மந்திரங்கள் கூறி, அம்மன் முன் படையல் செய்யப்படுகிறது. பின்னர் அது பக்தர்களுக்கு வழங்கப்படும். விரதம் இருந்து, இந்த மருந்தை 41 நாட்கள் எடுத்துக் கொண்டால், தீராத நோய்கள் நீங்கும்; முன்ஜென்ம பாவம் தீரும் என்பது பக்தர்களின் அனுபவம்.
 
இங்குள்ள அம்மன் "கண்ணொளி தரும் கடவுள்' என்று அழைக்கப்படுகிறார்.

"மருத்துவத்திற்கான கடவுள்' தன்வந்திரி சுவாமிக்கு, இங்கு தனிக்கோயில் உள்ளது.
 
ஆடி மாத முதல் தேதி முதல் ஒரு மாதம்  மருந்து பிரசாதம் வழங்கப்படும். தினமும் காலை 5 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் 7.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஆடி மாதத்தில், "நாலம்பல தரிசனம்" (நான்கு கோயில் தரிசனம்) செய்வது கேரளாவில் வழக்கம். கூத்தாட்டுக்குளத்திற்கு 10 கி.மீ., சுற்றுப்புறத்தில் ராமன், பரதன், லட்சுமணன், சத்ருகனன் கோயில்கள் உள்ளன. இங்கு தரிசித்து விட்டு, அந்த இடங்களுக்கும் பக்தர்கள் சென்றுவரலாம்.

 
ஜூலை 31 ல் "மருந்து பொங்கல்' இடும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் சன்னதியில், மருந்து பிரசாதம் சேர்த்து பொங்கலிடும் நிகழ்ச்சி, நாட்டிலேயே தனித்தன்மை வாய்ந்தது. நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர். முதியோர்கள், நோயாளிகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்படும்.
 
சென்னை, கோவையில் இருந்து எர்ணாகுளம் வழியும், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, கோட்டயம் வழியும் கூத்தாட்டுகுளம் செல்லலாம்.


வழிகாட்டி:
 
எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ.,தூரத்திலும், கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ.,தூரத்திலும் உள்ளது. கோட்டயம்- அங்கமாலி சாலையில் கூத்தாட்டுகுளம் ஜங்ஷனில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
 
 
மேலும் விபரங்களுக்கு 094478 75067, 094961 34500 ல் தொடர்பு கொள்ளலாம்
 
அருள்மிகு நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில், கூத்தாட்டு குளம், எர்ணாகுளம் மாவட்டம்
 
காலை 5- 9 மணி, மாலை 5.30 – இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 

 

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

முத்தான வாழ்வருளும் மூகாம்பிகை!

 

மூகாம்பிகை மூலமந்திரம்!

ஐம் கௌரி ஐம் கௌரி ஐம்
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா:

த்யானம்!

பாஸ்வத் ரத்னாபரண வஸநாலங்க்ருதே சாருஹஸ்தை:
ஸங்கம் சக்ரம் வரதமபயம் ஸம்வஹந்தி த்ரிநேத்ரி
ஹேமப்ரக்யே ப்ரணதவரஸந்தாத்ரி பத்மாஸனஸ்த்தே
காருண்யாத்ரே பகவதி மூகாம்பிகே மாம் ரக்ஷ நித்யம்.

கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் சௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தியைக் குறித்து தவம் புரிந்தார். உலகிலேயே பழமையான மலையாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. அதன் உட்பிரிவே குடசாத்ரி என்ற புனிதமலை. முனிபுங்கவர்களும் சித்தபுருஷர்களும் இன்றும் தவம் புரிந்து கொண்டிருக்கும் புண்ணிய பவித்ர இடம். அங்கு உற்பத்தியாகும் நதி சௌபர்ணிகா எனப்படும். அதன் கரையில் பெரிய திருவடியான கருடன் தவம் செய்து தன் வம்சத்தில் ஏற்பட்டிருந்த கொடிய சாபங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொண்டார். கருடபகவானின் பெயர் சுபர்ணன் என்பதால் அந்த ஆறு சௌபர்ணிகா எனப்பட்டது.



அவ்வளவு மகிமை வாய்ந்த  அந்த  இடத்திலிருந்து கோலமாமுனிவரின் பக்தியை மெச்சி, சுயம்பு லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் பக்தி பரவசத்தோடும் பய பக்தியோடும் அந்த சுயம்பு லிங்க மூர்த்தத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். அந்த இடம் கோலாபுரம் என அழைக்கப்பட்டது. அந்த லிங்கம் ஜோதிர் லிங்கம் என பக்தர்களால் கொண்டாடப் பட்டது.



அச்சமயத்தில் கம்காசுரன் எனும் கொடிய அரக்கன் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவனுக்கு வரமருள ஈசன் புறப்பட்டார். அதைக் கண்டு திகைத்த தேவர்கள் நான்முகனிடம் சரணடைய, நான்முகன் தனது துணைவியான வாக்தேவியின் வடிவமான சரஸ்வதியை அழைத்து அந்த கம்காசுரனை பேச்சற்றவனாக்க ஆணையிட்டார். அதனால் வரம் எதுவும் கேட்க முடியாத அந்த கம்காசுரன் பேச்சிழந்ததால் மூகாசுரன் என்றானான். வரம் ஏதும் கேட்க முடியாத ஆத்திரத்தோடு அலைந்த அவன், கோலமாமுனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அவரைத் துன்புறுத்தினான். அவர் தவத்திற்கு பல இடையூறுகளைச் செய்தான். அதனால் மனம் வருந்திய முனிவர் பரதேவதையிடம் முறையிட்டார். தன் பரிவாரங்களோடு தேவி, அஷ்டமி தினத்தன்று நடுநிசியில் மூகாசுரனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்தாள். அவன் இறப்பதற்கு முன் தேவியிடம், ‘‘அம்மா தங்கள் கையால் மடிவதால் என் பாவங்கள் தொலைந்து நான் சுத்த ஆத்மாவானேன். இந்த திவ்ய திருத்தலத்தில் உனது பெயர் நிலைத்திருக்கும்வரை எனது பெயரும் நிலைக்க வேண்டும்’’ என வரம் கேட்டான்.



 தேவியும் அவனுக்கு அந்த வரத்தை அருளி மூகாம்பிகையாய் கோலமா முனிவர் பூஜித்த ஜோதிர் லிங்கத்தில் ஸ்வர்ண ரேகையாகக் கலந்தாள். இந்த ஸ்வர்ண ரேகையை அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இதன் இடது புறம் நான்முகன், ஈசன், திருமால்; வலது புறம் அலைமகள், கலைமகள், மலைமகள் உறைகிறார்கள். இந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவ தேவியர்களையும் வழிபட்ட பலன் கிட்டும். அபிஷேகம் அனைத்தும் இந்த சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. 51 சக்தி பீடங்களுள் இது ஒன்று இல்லை எனினும், இது அர்த்தநாரி பீடம் என வழிபடப்படுகிறது.



தேவியின் அருளாணைப்படி ஆதிசங்கரர் ஐம்பொன்னால் ஆன மூகாம்பிகை தேவியின் திருவுருவை கொல்லூரில் பிரதிஷ்டை செய்தருளினார்.



முக்கண்கள், சங்கு, சக்கரம், அபய, வரதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்து முப்பெருந்தேவியரின் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது. மூகாம்பிகையை பூஜிக்க, பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மூகாம்பிகையின் பின்புறம் பஞ்சலோகத்தினாலான காளி, சரஸ்வதி தேவியர் அருள்கின்றனர். அக்கினி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.




இந்த அம்பிகையின் ஆபரணங்கள் விலை மதிப்பற்றவை. முகாபரணம் முழுதும் தங்கத்தால் ஆனது. அதில் மரகதம், கோமேதக ரத்னங்கள், ஒளிர்கின்ற நெற்றிக்கு அழகு செய்யும்  இந்திர நீலக்கற்கள், நாசியை அழகு செய்யும் பச்சைக் கல் மூக்குத்தி, வைரத் தோடுகள் என சர்வாலங்காரங்களோடு துலங்குகிறாள். முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த மூகாம்பிகையிடம் நேர்ந்து கொண்டு தன் பிரார்த்தனை பலித்ததன் நன்றிக் காணிக்கையாக தங்க வாளை தேவிக்கு காணிக்கையாகச் செலுத்தினார். அதை இன்றும் ஆலயத்தில் காணலாம்.



பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா காண்கிறாள் அம்பிகை. அவ்விழாவின்போது மூகாசுரன் கேட்ட வரத்தின்படி மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. அதுவே தேவியின் கருணை. துர்க்காம்பிகைக்கு செய்யும் அர்ச்சனைகள் அவள் திருவடியில் வீற்றிருக்கும் மகிஷனுக்கும் செய்யப்படுவதுபோல் இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சந்நதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனமளிக்கிறாள். ஆதிசங்கரர் மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியைப் பாடி தேவியின் திருவருள் பெற்றார். எனவே கல்வி, கலை வளம் செழிக்க பக்தர்கள் மூகாம்பிகையை பிரார்த்தனை செய்து பயனடைகின்றனர்.



விஜய தசமி இத்தலத்தில் வித்யாதசமியாகக் கொண்டாடப்படுவது விசேஷம். தன் ஸௌந்தர்யலஹரியை ஆதிசங்கரர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.



ஒரு முறை ஆதிசங்கரர் தேவியைக் குறித்து தவம் செய்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டார். அப்போது மூகாம்பிகை தேவி அவருக்கு கஷாயம் செய்து தந்து அவரைக் குணப்படுத்தியிருக்கிறாள். அதை நினைவூட்டும் வண்ணம் ஆலயத்தில் இன்றும் இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பின் கஷாய பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுகிறது. பலவித மூலிகைகள், குறுமிளகு, இஞ்சிப்பொடி, ஏலம், கிராம்பு, நெய், வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து செய்யப்பட்டு தேவிக்கு நிவேதிக்கப்படும்  அந்த கஷாயத்தை பக்தியுடன் அருந்த சகல உடற்பிணிகளும் மனப்பிணிகளும் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதேபோன்று முதல்நாள் இரவு சுயம்புலிங்கத்திற்குச் சாத்திய சந்தனக் காப்பில் ஸ்வர்ணரேகை பதிந்திருக்கும். அந்த சந்தனமும் சகல நோய்களையும் தீர்க்கும். அந்தப் பிரசாதம் கிடைக்கப் பெறுபவர்கள் மகாபாக்கியசாலிகளாகக் கருதப்படுகின்றனர்.



இந்த மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்டதேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். ஒரு குடும்பத்தில் தீராத பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருமேயானால், அவர்கள் இத்தலத்தில் ஓடும் சௌபர்ணிகை நதியில் நீராடி தூய மனதோடு தேவியை வழிபட அந்த பிரச்னைகள் தவிடுபொடியாகும்.



அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. திப்பு சுல்தான் இங்கு வந்தபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களாரத்தி இத்தலத்தில் பிரசித்தம். கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி தலங்களுள் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மற்ற ஆறு தலங்கள் உடுப்பி, சுப்ரமண்யா, கும்பகாசி, கோடேச்வரா, க்ரோடசங்கர நாராயணா, கோகர்ணம் ஆகியவையாகும். குடசாத்ரி மலையில் இருந்து இரண்டு கணவாய்கள் வழியாக ஆறு உற்பத்தியாகி கொல்லூர் வரும்போது சம்பாரா என அழைக்கப்படுகிறது. பல்வேறு மூலிகைத் தாவரங்கள் கலந்து வரும் இந்த ஆற்றில் விடியற்காலையில் நீராடினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.



மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள ஆயிரத்தெட்டு தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வெள்ளியன்று இரவு தங்க ரதத்தில் மூகாம்பிகை திருவுலா வருகிறாள். அதைக் காண சகல தேவ தேவியரும் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.



இந்த மூகாம்பிகை தேவியின் மந்திரத்தில் வாக்பவ பீஜமான ‘ஐம்’, நான்கு முறை இடம்பெற்றுள்ளது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்குத் தரும் என்பதைக் குறிக்கிறது.

தவி மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம்.
பூர்வ புண்ணியம் மேலோங்கப் பெற்றவர்கள் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கியவர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பிகையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.



அன்னை காளியிடம் பக்தி செலுத்தி நமக்கு சாக்த உபாசனையின் மேன்மையை தன் புனித வாழ்வின் மூலம் நிரூபித்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். அவர் தன் சீடர்களிடம், ‘‘என்னைப் போன்ற முட்டாள் குழந்தையை அன்னை காளியைத் தவிர யாரால் நேசிக்க முடியும்?’’ என்று சொல்வாராம். மேலும் ‘ஆலோபகோபவிதிதா’ என்றும் ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு. அறிவு முதிர்ச்சியில்லாத சிறுவர்களாலும் இடையர்களாலும் கூட அறியப்படக்கூடியவள் என்று அது போற்றுகிறது. அவளுடைய குழந்தைகளாகிய நாம் அவளை எப்படி உபாசித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அனுக்ரஹம் செய்வாள். பக்தியும் சிரத்தையுமே முக்கியம்.



 ‘ஐம்’ என்பது வாக்பவ பீஜம். இந்த ஐம் பீஜம் இடம் பெற்றிருப்பதாலேயே பாலா மந்திரம் பெருமை பெற்றது. பாலா மந்திரம் இடம் பெற்றதால் பஞ்சதசீ மந்திரம் பெருமை பெற்றது. பஞ்சதசீ மந்திரம் இடம் பெற்றதால் மஹாக்ஷோடஸி மந்திரம் மகத்தானதானது. அவ்வளவு பெருமை பெற்ற ஐம் பீஜம் இந்த மூகாம்பிகையின் மூல மந்திரத்தில் நான்கு முறை இடம் பெற்றுள்ளதிலிருந்தே இந்த மூகாம்பிகையின் மகிமையை அறியலாம். சர்க்கரை என்றால் நா இனிக்காது. அதை சுவைத்தால்தான் இனிக்கும். அதே போன்று மூகாம்பிகை தேவியின் மூல மந்திர மகிமையை அனைவரும் ஜபம் செய்தால்தான் அறிய முடியும். இந்த மந்திரம் பேச்சிழந்தவனையும் பேசவைக்கும் ஆற்றல் கொண்டது. சொல்லாற்றலால் சாதகன் இந்த உலகத்தையே வெல்லலாம். அவளே ஜகஜ்ஜனனீ, பரதேவதை என்ற திடமான நம்பிக்கையுடன் உபாசித்தால் பதினாறு செல்வங்களையும் தந்து காப்பாள் மூகாம்பிகை.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்திலும் பாஸ்கரராயர் பிரதிஷ்டை செய்த மேருவுடன் கூடிய மூகாம்பிகை திருவருள் புரிந்து வரப்ரசாதியாக அருள்கிறாள்.
 
 
 

புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

                


சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது அன்று “அகல்கில்லேன் இறையும் என்றும் அலர்மேல் மங்கை உறை மார்பனாம் திருவேங்கடவனின் திருப்பாதம் சரண் அடைந்து”,  விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும், நீண்ட ஆயுளும் இறுதியாக வைகுண்டப் பதவியும்  பெறுவர்.
 
வேங்கடேச சுப்ரபாதத்தில் வரும் ஒரு  ஸ்லோகம் இது
 
ஸ்ரீவைகுண்ட வ்ரக்தாய ஸ்வாமி புஷ்கரணி தடே
ரமயா ரம மாணாய  வேங்கடேசாய மங்களம்
 
பரமபதத்தில் பரவாசுதேவன் ரூபத்தில் இருந்துகொண்டு பக்தரக்ஷணம் எண்ணும் தன் காரியத்தை நன்கு நிறைவேற்ற இயலாமல் (இந்த  கலியுகத்தில்) எம்பெருமான் திருமலையில்  ஸ்வாமி புஷ்கரிணி தீரத்தில் திருவேங்கடமுடையான் ரூபத்தில் அர்ச்சையாய் எழுந்தருளியிருந்து பக்தரக்ஷணம் எனும் காரியத்தை நன்கு நிறைவேற்றுகிறான். மஹா லக்ஷ்மியும் திருமலையில் தனிக் கோயில் கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன் கோவிலாகக் அமைத்துக் கொண்டாள் அத்தகைய திருவேங்கடையமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

இவ்வாறு கண்கண்ட தெய்வம், கலியுக வரதன், ஏழுமலை வாசன், ஸ்ரீநிவாசன், நெடியோனாகிய திருவேங்கடவன் திருமலையில் இந்த கலியில் நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டு அருளியது புரட்டாசி மாதம் திருவோணத்தன்றுதான். ஆகவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம். இதை பெருமாள் மாதம் என்றும் அழைப்பர். அதுவும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை அவரை வழிபட மிகவும் உகந்தது.

பலர் இந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பர். இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து பெருமாளை வழிபடுவர். பலர் இல்லங்களில் சனிக்கிழமையன்று வேங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவர். 

சிறு வயதில் நாங்கள் நெற்றியில் திருமண் தரித்து, சொம்பு கையில் ஏந்தி வீடு வீடாக சென்று “நாராயண மூர்த்திக்கு” என்று  அரிசி பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு வந்து அதில் மாவிளக்கு செய்து பெருமாளுக்கு படைத்து வழிபடுவோம். அன்று அவ்வாறு பிச்சை கேட்டு வருபவர்களுக்கு அரிசி பிச்சையும் போடுவோம்.

நம்முடைய பாவங்களை எல்லாம் பொசுக்கும் திருவேங்கடமாம் ஏழுமலையில்  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமால், நெடியானான திருவேங்கடவன் "புரட்டாசி மாத திருவோண நாளை" தீர்த்தநாளாகக் கொண்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார். ஆதி காலத்தில் பிரம்மாவே இந்த உற்சவத்தை நடத்தியதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் மலையப்பசுவாமி காலையும் மாலையும் சிறப்பு அலங்காரத்தில்  பல் வேறு வாகன சேவை தந்தருளுகின்றார். இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பு ஐந்தாம் நாள் இரவின் கருட சேவையாகும். அன்றைய தினம் மூலவருக்குரிய மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம், வைர முடி தாங்கி சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் அணிந்து அனுப்பிய மாலையில்  மூலவராகவே மாட வீதீ வலம் வந்து  சேவை சாதிக்கின்றார் மலையப்ப சுவாமி.  
மூலவராக மலையப்பசுவாமி கருட சேவை

புரட்டாசி மாதத்தில் புதன் உச்சம். புதனின் அதி தேவதை பெருமாள் ஆவார். ஆகவே  புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு மிகவும் நன்மை பயக்கும். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.  இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான்.  அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த  உகந்த நாள்  ஆயிற்று

புரட்டாசி  விரதத்தை உண்மையான பக்தியுடன் அனுசரித்த ஒரு பக்தரின் அனுபவம் மிகவும் சுவையானது    தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.

திருமலைக்கு அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், ஏழு மலையானின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…’ வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக  இருந்து சேவை செய்ய வேண்டும் என்பது தான் இந்த கோரிக்கை.


மலையப்ப சுவாமி

இவர் தினமும் மண்பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்கமல். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு, ”ஏடுகொண்டலு வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா…’ 
ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, கோவிந்தா, கோவிந்தா”,  என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களையே உண்மையான மலர் தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.



வடுவூர் இராமர் 

அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தார் தொண்டைமான் என்னும் சக்கரவர்த்தி. அவர் பெருமாளின் பக்தர் மட்டுமல்ல பெருமாளின் அருளுக்கு பாத்திரமான ஒருவர்.   ஒருநாள் அவர்  ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றார். பெருமாளுக்கு  அர்ச்சனை செய்வதற்காக  அவர் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தார்.  அவர் அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக்  இருந்ததை கவனித்தார். தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டார். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

மறுநாளும் அவர் திருவேங்கடவனின்  சன்னிதிக்கு வந்த சமயம், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்ததைக் கண்டு  குழம்பிப் போனார்.  அவரது கனவில், சீனிவாசப் பெருமாள் தோன்றினார். “மன்னா… பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்களால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.

மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றானர் மன்னன் . அவர், பெருமாளின் மண் சிலைக்கு மண் பூக்களால் அர்ச்சனை செய்து  கொண்டிருந்ததைக் கண்டார் “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’ என்றார் தொண்டைமான் சக்கரவர்த்தி.

அதற்கு அந்த பக்தர் “அரசே… நானோ பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் வாடும். எனவே தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.
 
 
இதைக் கேட்ட தொண்டைமான் மன்னன்  மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு  செல்வம்  அளித்தார்.  குசேலனைப் போல  ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் அவர் நினைவாக  திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.